அண்ணாநகர் : தனியார் உணவகத்தில், சாப்பிட வந்தவர் தவற விட்டுச் சென்ற, 25 லட்சம் ரூபாயை, ஓட்டல் ஊழியர் மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை பாராட்டிய இன்ஸ்பெக்டர், கைக்கடிகாரம் பரிசளித்தார்.
சென்னை, அண்ணாநகர், 2வது அவென்யூவில், ‘சரவண பவன்’ ஓட்டல் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு, சாப்பிட வந்த ஒருவர், தான் கொண்டு வந்திருந்த பையை, தவறுதலாக ஓட்டலிலேயே வைத்து சென்றார்.
இதைப் பார்த்த, சர்வர் ரவி, அந்த பையை எடுத்து, ஓட்டல் மேலாளர், பாலுவிடம் கொடுத்தார். அதை பிரித்து பார்த்த போது, உள்ளே, 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், கட்டுக்கட்டாக இருந்தன.
இது குறித்து, உணவக உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், ‘ஒருநாள் காத்திருங்கள்; பணத்தை தவற விட்டவர் வந்தால், கொடுத்து விடலாம்’ என்றார்.
ஆனால், அன்றிரவு வரை, பணத்தை தவறவிட்டவர் வரவில்லை. இதையடுத்து, நேற்று காலை, மேலாளர் பாலு, அந்த பண பையை எடுத்துச் சென்று, அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார், பணத்தை எண்ணி பார்த்த போது, 25 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. ஓட்டலில் சாப்பிட வந்தவர், தவற விட்ட, 25 லட்சம் ரூபாய் பணத்தை, நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த, ஊழியர் ரவியை, இன்ஸ்பெக்டர் சரவணன் பாராட்டியதுடன், அவருக்கு கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.