யாழ்பாணத்திலிருந்து வெளியான பத்திரிகைகளில் ஒன்று ஈழமுரசு இப் பத்திரிகையின் உரிமையாளர் மயில்வாகனம் அமிர்தலிங்கம்.
ஈழமுரசு பத்திரிகை ஆசிரியராக முதலில் இருந்தவர் திருச்செல்வம். மயில்வாகனம் அமிர்தலிங்கம் ஐ.தே.கட்சி அமைப்பாளராக இருந்தவர். கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபராகவும் பதவி வகித்தார்.
திருச்செல்வம் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளராக இருந்தவர். நல்லுர் எம்.பி. அருளம்பலத்தின் வலது கையாகவும் இருந்தவர் திருச்செல்வம்
ஈழமுரசு பத்திரிகைக்கு உரிமையாளர் ம.அமிர்தலிங்கத்துக்கும், திருச்செல்வத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
திருச்செல்வத்தை ஈழமுரசு பத்திரிகையை விட்டு வெளியேற்றினார் அமிர்தலிங்கம். அதன் பின்னர் கோபாலரத்னம் என்பவர் ஆசிரியராக இருந்தார். ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றியவர் கோபாலரத்னம்.
திருச்செல்வம் வெளியே வந்ததும் ஈழமுரசு உரிமையாளர் அமிர்தலிங்கம் மேற்கொண்ட மோசடிகள் பற்றி அம்பலப்பத்த தொடங்கினார்.
அகதிகளுக்கு உதவுவது என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறார். இலங்கை அரசின் உளவு நிறுவனங்களுக்கு உதவுகிறார். தகவல்கள் கொடுக்கிறார். ஏன்றெல்லாம் திருச்செல்வம் புகார் தெரிவித்தார்.
ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கத்தினரிடம் சென்ற திருச்செல்வம் அமிர்தலிங்கத்தின் மோசடிகள் பற்றிக் கூறியதுடன் நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார்.
திருச்செல்வம் கூறிய புகார்கள் ரமேஷ் மூலமாக ஈ.பி.ஆர். எல்.எஃப. யாழ் பிராந்தியக் கமிட்டிக்கு தெரிவிக்கப்பட்டது. அமிர்தலிங்கத்துக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று ரமேஷ் அனுமதி கோரினார். யாழ் பிராந்திய கமிட்டி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இது நடந்தது 1986 நடுப்பகுதியில். ஈ.பி.ஆர். எல்.எஃப. அமைப்பினரிடம் தெரிவித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் புலிகள் இயக்கத்தினரிடம் சென்றார் திருச்செல்வம். திலீபன, கிட்டு ஆகியோரிடம் அமிர்தலிங்கத்தின் மோசடிகள் பற்றிக் கூறப்பட்டது.
முரசொலி
இக் காலகட்டத்தில் முரசொலி என்ற பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. அப் பத்திகையின் ஆசிரியராக திருச்செல்வம் பொறுப்பேற்றார், ஈழமுரசுக்கு போட்டியாகவே முரசொலி வெளிவந்தது.
ஈ.பி.ஆர். எல்.எஃப்.இயக்கம் புலிகளால் தடை செய்யப்பட்டபோது இந்திய கைக்கூலிகளுக்குத் தடை என்று தலைப்புச் செய்தி செளியிட்டார் திருச்செல்வம்.
இதனை மனதில்வைத்துதான் இந்திய அமைதிப்படைக் காலத்தில் திருச்செல்வத்தை தீர்த்துக்கட்ட தேடித்திரிந்தனர் ஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்கத்தினர். ஆனால் திருச்செல்வத்துக்கு பதிலாக அவரது மகனைச் சுட்டுக் கொன்றதுதான் பெரிய கொடுமை. திருச்செல்வம் தப்பிவிட்டார்
ஈழமுரசு அமிர்தலிங்கம் ஒருநாள் இனம்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டார் அவரைக் கடத்திச் சென்றவர்கள் புலிகள். அவர்மீதான புகார்கள தொடர்பாக விசாரித்துவிட்டு பின்னர் மரண தண்டனை விதித்தனர்.
சீட்டுக் கம்பனி ஒன்றும் நடத்தினார் அமிர்தலிங்கம். புல இலட்ச ரூபாய்கள் சீட்டுக் கம்பனி ஊடாக மோசடி செய்திருந்தார். யாழ் நகரில் உள்ள பலருக்கு பல இலட்ச ரூபாய்கள் அமிர்தலிங்கம் கொடுக்க வேண்டியிருந்தது.
அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஈ.பி.ஆர். எல்.எஃப். பலத்த கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஈ.பி.ஆர். எல்.எஃப். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான யோகசங்கரியின் மைத்துனரான காசிநாதன் என்பவரையும் யாழ்ப்பாணத்தில் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
முல்லைத்தீவில் ஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாம் இருந்தது. அந்த முகாமுக்கு காய்கறிகள் வெளியே இருந்துதான் செல்வது வழக்கம்.
அதனை அவதானித்த புலிகள் குறிப்பிட்ட முகாமுக்கு கொண்டுசெல்லப்படும் மரக்கறிகளில் பொட்டாஷியம் சயனைட் என்ற நஞ்சை செலுத்திவிட்டனர்.
முகாமில் சமையல் செய்வதற்காக மரக்கறிகளை வெட்டி, கழுவிச் சுத்தம் செய்ததால் நஞ்சின் செறிவு குறைந்து போனது.
சமையல் முடிந்தபின்னர் முகாமில் இருந்தவர்கள் உணவை உண்டனர். 42 பேர் உடனடியாக மயக்கம் அடைந்தனர்.
அவர்களின் 14 பேர் மிக ஆபத்தான நிலையில் இந்தியப் படை விமானம் மூலமாக வவுனியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஏனையோர் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியப் படையினர் விரைவாக உதவியதால் பாரிய உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன.
முல்லைத்தீவில் புலிகள் இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈ.என்.டி.எல்.எப்ஃ. இயக்கத்தினர் இந்தியப் படையினருக்கு உதவினர்.
ஈ.என்.டி.எல்.எப்ஃ. தலைவர் பரந்தன் ராஐன் முன்னர் கூட்டணியின் கிளிநொச்சி முன்னாள் எம்.பி. ஆனந்த சங்கரிக்கு வலதுகரமாக இருந்தவர்களில் ஒருவர். வன்னிப் பிராந்தியம் பரந்தன் ராஐனுக்கு பரிச்சயமாக இருந்தது.
அதனால் வன்னிப் பிராந்தியத்தில் புலிகளுக்கு எதிரான இந்தியப்படை நடவடிக்கைகளுக்கு ஈ.என்.டி.எல்.எப்ஃ. உதவி வந்தது.
முல்லைத்தீவில் இந்தியப்படை நடவடிக்கைக்கு உதவுவதற்காக ஈ.என்.டி.எல்.எப்ஃ. உறுப்பினர்கள் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அந்த வழியாக வழக்கமாக அவர்கள் சென்றுவருவதை அவதானித்திருந்த புலிகள் இயக்கத்தினர் நிலக்கண்ணி வெடியை புதைத்து வைத்திருந்தனர். அவ் வழியாக சென்ற ஈ.என்.டி.எல்.எப்ஃ. வாகனம் நிலக்கண்ணி வெடியில் சிக்கியது. ஈ.என்.டி.எல்.எப்ஃ. உறுப்பினர்கள் மூவர் பலியாகினர்.
புலிகள் இயக்க உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் சிலரது குடும்பத்தினர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரால் கொல்லப்பட்டனர்.
அதற்கு பழிவாங்கும் விதமாக புலிகளும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க உறுப்பினர்களின் குடும்பங்கள்மீது கைவைக்கத் தொடங்கினர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். மேற்கொண்ட நடவடிக்கையும், புலிகள் மேற்கொண்ட நடவடிக்கையும் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும்.
சவகச்சேரியில் ஈ.பி.ஆர். எல்.எஃப். பொறுப்பாளராக இருந்தவர் சுபத்திரன். இவர்தான் முன்னார் ஈ.பி.ஆர். எல்.எஃப். யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தவர். ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க ஆரம்பகால இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
ஆனாலும் இந்திய அமைதிப்படை காலத்தில் சுபத்திரனை சாவகச்சேரி பொறுப்பாளராகவே நியமித்தனர். அப்போது ஈ.பி.டி.பி.யில் இருந்த ரமேசுக்கும், சுபத்திரனுக்கும் இடையில் நிலவிய நல்லுறவு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க தலைமைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.
நீண்ட காலமாக சிறையில் இருந்த சுபத்திரன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காரணமாக விடுதலையானார் கிண்ணியா வங்கிக் கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் அவர்மேல் இருந்தன.
சிறையில் இருந்து வெளியே வந்த சுபத்திரன் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஈ.பி.டி.பி. இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி மறுபடி ஒன்றாக இயங்கச் செய்ய முயன்றார்.
எனினும் அது கைகூடவில்லை. புpன்னர் சுபத்திரனும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். மூத்த உறுப்பினரான சிறிதரன், மோகன் ஆகியோரும் யாழ் சென்றனர்.
அவர்கள் மூவருமே ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைமையால் சந்தேகக் கண்ணோடு நோக்கப்பட்டனர். ஈ.பி.டி.பி. பியுடன் கதைத்து இரகசிய ஏற்பாடுடன்தான் வந்திருப்பார்களோ? என்று சந்தேகம். ஆதன் காரணமாக சுபத்திரன் சாவகச்சேரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்
இந்தியப் படை காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திற்கு நல்ல பெயர் இருந்த ஒரே இடம் சாவகச்சேரிதான். புலிகளுக்கு எதிரான பல தாக்குதல்களும் சுபத்திரன் தலைமையில் சாவகச்சேரியில் நடத்தப்பட்டன.
அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தவர் ராபீக். சொந்தப் n;பயர் ரவீந்திரன். அவரை இயக்கத்தில் சேர்த்தவதுகள் சுபத்திரனும் ரமேசும்தான்.
ராபீக்கின் கீழ் சுபத்திரனை செயற்பட வைத்தனர்.
தற்போது ராபீக் இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டார். சுபத்திரன், சிறிதரன். மோகன் ஆகியோர் இப்போதும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பில்தான் இருக்கின்றனர்.
சரியான நபர்களை இனம் காணுதல் திறமையானவர்களிடம் உரிய பொறுப்புக்களை ஒப்படைத்தல் என்பன தலைமைக்குரிய ஒரு கலையாகும். அக் கலையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உட்பட பல இயக்கத் தலைமைகள் விட்ட தவறுகளும் அந்த இயக்கங்களின் வீழ்ச்சிகளுக்கு முக்கிய காரணமாகும்..
விடுதலை
சாவகச்சேரியிலும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களால் புலிகள் இயக்க உறுப்பினர்களின் தந்தைமார் பலர் பிடிக்கப்பட்டனர்.
அனைவரையும் போடவேண்டும் என்று சென்னார்கள் சில உறுப்பினர்கள். யார்மீதும் கைவைக்கக்கூடாது என்று கூறிவிட்டார் சுபத்திரன். அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியப்படை வெளியேறிய பின்னர் சுபத்திரனின் தந்தையாரை புலிகள் வெட்டிக் கொன்றுவிட்டனர்.
ஏனைய பகுதிகளில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் கட்டாய ஆட்சேர்ப்புக்களால் மக்களிடம் வெறுப்பைச் சம்பாதித்த போது, சாவகச்சேரியில் கட்டாய ஆட்சேர்ப்புக்களும் பெருமளவில் இடம்றெவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எஃப். காலத்தில் கொள்ளைகள் நடத்தப்படாத இடமும் சாவகச்சேரிதான்.
முறிந்தபனை ஆவனத்திலும் சாவகச்சேரியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். நடவடிக்கைகள் பற்றி புகார்கள் பெரிதாக வரவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரெலோ போன்ற இயக்கங்களில் திறமையான, கட்டுப்பாடான எத்தனையோ உறுப்பினர்கள் இருந்தனர். இந்தியப் படை காலத்திலும் அவர்களில் பலர் மக்களுடன் நல்ல முறையிலேயே நடற்து கொண்டனர்.
ஆனால், வழிநடத்தும் பொறுப்புக்களில் இருந்தவர்களது பலவீனங்களும். தவறான ஆட்களை முக்கிய பொறுப்புக்களில் நியமித்து வைத்திருந்தமையுமே மிக மோசமான பின் விளைவுகளுக்கு காரணமாக அமைந்தன.
முல்லைத்தீவு அலம்பில் என்ற இடத்தில் இருந்த புலிகள் இயக்க முகாமை இந்தியப் படையினர் சுற்றி வளைத்தனர். சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு வெளியேற முயன்றனர் புலிகள்.
இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. மோதலின் முடிவில் புலிகள் முகாமைவிட்டு வெளியேறினார்கள்.
முகாமுக்குள் இருந்த புலிகள் அனைவரையும் சுற்றிவளைப்புக்குள் சிக்க வைப்பதே இந்திய படையினரின் நோக்கமாக இருந்தது.
அலம்பில் முகாமில் பிரபாகரனும், மாத்தையாவும் தங்குவது உண்டு என்ற இரகசியத் தகவலை அடுத்தே இந்தியப் படையினர் அந்த முகாமை சுற்றி வளைத்தனர்.
ஆனால் நோக்கம் நிறைவேறவில்லை. இந்தியப் படையினர் தரப்பில் 7 பேர் பலியாகினர். புலிகள் தரப்பில் ஆறுபேர் பலியானார்கள்.
1989 ஜனவரியில் மட்டும் 70 இந்தியப் படையினர் சண்டைகளில் பலியாகினர். அந்தச் சண்டைகளில் புலிகள் தரப்பில் 15 பேர் பலியாகினர்.
அமெரிக்க எதிர்ப்பில் முண்டியடித்த இயக்கங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் மேதின ஊர்வலங்களை கிழக்கில் நடத்தினார்கள். சிவப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளில் அந்த இயக்கத்தின் தலைவர் பத்மநாபாவின் படமும் இடம் பெற்றிருந்தது.
உழைக்கும் கரங்களின் ஒளிவிளக்கு என்ற பத்மநாபாவின் படத்தின் மேல் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தென்னாசியாவில் ஆதிக்கம்பெற அனுமதியோம் என்றும் தங்கள் பாதாதைகளில் எழுதிவைத்திருந்தனர்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரதான ஷரத்துக்களில் ஒன்று, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இலங்கையில் பிறநாடுகள் தளம் அமைக்க அனுமதிக்க்கூடாது என்பது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை தாம் ஏன் ஆதரிக்கிறோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் விளக்கப் பிரசுரங்களை வெளியிட்டிருந்தனர்.
தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க விஸ்தரிப்புக்கு இந்த ஒப்பந்தம் முற்றுப் புள்ளியிடுகிறது.
உள்நாட்டில் மட்டும்ல்லாமல், உலக அரங்கில் ஏகாதிபத்திய விஸ்தரிப்புக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களிலும் நாம் இணைந்து நிற்கிறோம்.
அமெரிக்காவின் கைப்பாவைகள்
இந்தியா எதிர்க்கும் புலிகள் தவிர்க்க முடியாமல் அமெரிக்காவின் கைக்குள் செல்வார்கள். அமெரிக்காவின் கைப்பாவைகளாகி தென்னாசியப் பிராந்தியத்தில் உள்ள பிற்போக்கு இயக்கங்களில் ஒன்றாக மாறிநிற்பர். என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். புலிகளை சாடியிருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இந்தியாவின் கைக்கூலி என்று புலிகள் சொன்னதால், அதற்கு பதிலடியாக புலிகளை அமெரிக்காவின் கைப்பாவைகள் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். குற்றம் சாட்டியிருந்தது.
அதே ஈ.பி.ஆர்.எல்.எஃப். இன்று தலை கீழாக மாறி நிற்கிறது. புலிகள் இயக்கத்தினரை தடை செய்துள்ளதன் மூலம் புலிகள் தங்கள் கைப்பாவைகள் அல்ல என்று அமெரிக்கா வெளிப்படுத்திவிட்டது.
ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். செயலாளர் நாயகம் பிரேமச்சந்திரன் 12.10.97 அன்று ஒரு கருத்துக் கூறியுள்ளார்.
அமெரிக்கா புலிகளை தடைசெய்து விட்டதால், புலிகள் தங்கள் கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். சமாதானப் பாதைக்கு திருப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதன் அர்த்தம், அமெரிக்கா ஒரு உலக பொலிஸ்காரன். தென்னாசியப் பிராந்தியத்தில் தலையிடவும், அங்குள்ள விவகாரங்களில் மூக்கை நுளைத்து நல்வழிப்படுத்தவும் தகுதி உள்ள போதகர் என்பதை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இப்போது அங்கீகரித்து விட்டது.
இத் தொடரில் இயக்கங்களின் நிலை தடுமாறும் போக்கை அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன்.
தங்களை உலகப் புரட்சியாளர்கள் என்று காண்பிப்பதற்காகவும், இந்தியாவுக்கு நண்பர்களாகக்காட்டி ஏனைய இயக்கங்களைவிட அதிக உதவிகளைப் பெறவும் தான் அன்று அமெரிக்க பூச்சாண்டி காட்டியிருக்கிறார்கள்.
இப்போது தங்கள் புலி எதிர்ப்பை நியாயப்படுத்த அமெரிக்காவை நல் புத்தி சொல்லும் புனிதராகக் கூறவும் தயாராகி விட்டார்கள்.
எக் கொள்கையிலும் உறுதியற்ற தளம்பலும், தாங்கள் முன்வைத்த கொள்கைகளையே சரியாக புரிந்து கொள்ளாமல் வெறும் வாய் வீச்சுக்களாக கூறித் திரிந்தமையுமே பல இயக்கங்களின் பாணியாக இருந்திருக்கிறது.
அமெரிக்கா புலிகளை ஆதரித்தால் ஏகாதிபத்திய சக்தி என்பர். அமெரிக்கா புலிகளை எதிர்த்தால், அமெரிக்கா சொல்வதை புலிகள் கேட்கவேண்டும் என்பர்.
சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரை இயக்கங்கள் தோன்றியதில் இருந்தே இருவிதமான போக்குகள் காணப்பட்டன.
புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஈரோஸ் ஆகிய இயக்கங்கள் அமெரிக்க எதிர்ப்பு, உலக அரங்கில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை உரத்துக் கூறிவந்தன.
அமெரிக்காவுடனோ, அதன் கூட்டாளி நாடுகளுடனோ ஒட்டும் இல்லை உறவும் இல்லை. அவ்வாறு ஒட்டுதல் வைப்போர் ஏகாதிபத்திய கைக்கூலிகள் என்று கூறிவந்தனர்.
புலிகளும், ரெலோவும் தமிழீழம் உருவாக யார் உதவி செய்தால் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பது போலவே நடந்து கொண்டனர்.
அதனால் புலிகளும், ரெலோவும் குறுகிய நலன் கொண்ட இயக்கங்கள் என்றும், சர்வதேச ரீதியில் முற்போக்கான சக்திகளுடன் கைகோர்த்து செயற்படாதவர்கள் என்றும் ஏனைய மூன்று இயக்கங்களும் கூறிவந்தன.
இவற்றில் புளொட்டுக்கும், ஈ.பி.ஆர்.எல்.எஃப இயக்கத்துக்கும் இடையே கடும் போட்டி. சர்வதேச ரீதியாக அமெரிக்க எதிர்ப்பில் தீவிரமாக இருப்பதும், சர்வதேச போராட்ட அமைப்புக்களுடன் உறவு வைத்திருப்பதும் யார் என்பதே போட்டி.
புலிகளுக்கு அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் சிலர் உதவியபோது, அவர்கள் அமெரிக்க சி.ஐ.ஏ. ஆட்கள். ஆகவே புலிகளுக்கு சி.ஐ.ஏ. தொடர்பு உண்டு. புலிகள் ஊடாக ஈழப் போராட்டத்தை சிதைப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்றனர் ஏனைய இயக்கத்தினர்.
இதற்கிடையே புளொட் இயக்கத்தில் சேர்லி கந்தப்பா என்பவர் அவகளது தமிழீழ வானொலி ஒலிபரப்பை கவனிக்க இந்தியா வந்திருந்தார்.
உடனே, சேர்லி கந்தப்பா ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்று கூறியது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
இவ்வாறு தம்மை முற்போக்கு வாதிகளாகக் காட்ட இயக்கங்கள் முட்டி மோதிக் கொண்ட காலம் ஒன்று இருந்தது.
புலிகள் மட்டும் சற்று ஒதுங்கியே நின்றனர் சர்வதேச அரங்கில் யாருடன் வேண்டுமானால் நட்பாக இருக்கலாம்.
ஆனால் எங்கள் மக்களின் தலைவிதியை நாங்கள்தான் தீர்மானிக்க முடியும். உதவிகள் செய்வதற்காக எங்கள்மீது தங்கள் முடிவுகளை அவர்கள் திணிக்க முடியாது.. என்பதோடு புலிகள் நிறுத்திக் கொண்டனர்.
தமிழீழம் கிடைக்கும் என்றால் எந்தப்பேயுடனும் சேரலாம் என்பது போல் அல்லவா இருக்கிறது. இது படு பிற்போக்குத்தனம். தென்னாசிய மக்களின் நலநன பற்றி சிந்திக்க வேண்டாமா? தமிழீழத்தோடு மட்டும் பார்வையை குறுக்கிக் கொள்வதா? அமெரிக்கா நிரக்கரகுவாவுக்குள் புகுந்தால் நாம் மௌனமாக இருப்பதா? கியூபாவை மிரட்டினால் பார்த்துக் கொண்டிருப்பதா? சர்வதேச சமூகத்தோடு கைகோர்க்க வேண்டாமா? முற்போக்கு சத்திகளுடன் மட்டுமே நட்பாக இருக்க வேண்டும் என்று கூறியது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப இயக்க வெளியீடான ஈழமுக்கம் அப்படிச் சாடியிருந்தது.
இன்று காலம் மாறிவிட்டது. ஆனால் அமெரிக்கா மாறவில்லை. உலகப் பொலிஸ்காரனாக சண்டித்தனம் செய்யும் அதன் நோக்கம் மாறவில்லை. ஆனால் அமெரிக்காவை எதிர்த்த இயக்கங்கள் மாறிவிட்டன.
அமெரிக்கா சொன்னால் அதுதான் வேதவாக்கு என்று கூறாமல் கூறுகின்றன.
எந்தப் பேய் புலிகளை எதிர்த்தாலும் அந்தப் பேயை வரவேற்போம் என்பது இன்றைய நிலைப்பாடாகிவிட்டது.
அமெரிக்கா சொல்வதை புலிகள் கேட்காவிட்டால் பெரும்பாதங்கள் உருவாகும் என்பது போல கருத்துக்கள் வெளியிடுகிறார்கள்.
இது நல்ல மாற்றமா? தீய மாற்றமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
நாம் இந்தியப் படை கால முக்கிய நிகழ்வுகளுக்கு செல்வோம்.
(தொடர்ந்து வரும்)
அரசியல் தொடர் எழுதுவது -அற்புதன்
தொகுப்பு: கி.பாஸ்கரன்)
வன்னிக்கு.. வை.கோ.வின் இரகசியப் பயணம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 145)