“தமிழர்களுடைய அடுத்த கட்ட அரசியலுக்கு விக்கினேஸ்வரனே பொருத்தமானவர். அவரை விட்டால் வேறு தெரிவுகளில்லை. ஆகவே, எப்படியாவது விக்கினேஸ்வரனைத் தலைவராcv1க்கியே தீரவேணும். அவரை வைத்து ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்ட வேண்டும்” என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு, வலுப்படுத்தப்படுகிறது.
இந்தக் கருத்தை வலுப்படுத்துவதற்காக, “ஜனவசியமுள்ள ஒரே தலைவராக விக்கினேஸ்வரனே இருக்கிறார்”.
“தமிழர்களுடைய உரிமைக் கோரிக்கையில் எத்தகைய விட்டுக்கொடுப்புகளையும் செய்ய முடியாது என்ற உறுதிப்பாட்டோடு இருப்பவர் அவர் ஒருவரே”.
“இலங்கை அரசின் இனப்படுகொலைக்கெதிரான தீர்மானத்தை மாகாணசபையில் நிறைவேற்றியவர்”.
“எதற்கும் விலைபோகாமல், உலகத் தலைவர்களின் மத்தியில் உண்மையை எடுத்துச் சொல்லும் துணிவுடையவர்”.
“இன்று ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையை சர்வதேச அரங்கில் முன்வைக்கக்கூடிய ஒரே தலைவராக இருப்பவர்”…. எனச் சில நியாயங்கள்(?) அல்லது காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இவ்வாறான நியாயங்கள் அல்லது காரணங்கள் முன்வைக்கப்பட்டு விக்கினேஸ்வரன் “பிம்ப உருவாக்கம்” செய்யப்படுகிறார்.
விக்கினேஸ்வரனுடைய இன்றைய அடையாளமே “பிம்ப உருவாக்கம்”தான். 2013 வரை – தனது 74 வயதில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வரை – எந்த விதமான அரசியல் பங்களிப்பும் இல்லாத ஒருவராக இருந்தவர் விக்கினேஸ்வரன்.
அதிலும் ஈழத்தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராடத்தொடங்கிய கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வரலாற்றில் விக்கினேஸ்வரனுடைய அரசியல் பங்கேற்புக்கு வயது ஆக 05 மட்டுமே.
ஆனால், விக்கினேஸ்வரனுக்கு இப்பொழுது (2018 இல்) வயதோ 79.
2013 இல் வடமாகாணசபைத் தேர்தலின்போதே விக்கினேஸ்வரன் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார் அல்லது அவரே சொல்வதைப்போல சம்மந்தன், சுமந்திரன் ஆகிய இருவரினாலும் “இழுத்து”க் கொண்டு வரப்பட்டார்.
(தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தெரிவுகள் அத்தனையும் தற்போது பிரமுகர்களையே முன்னிறுத்துவதாக உள்ளதைக் காண முடியும். தேர்தல் அரசியலுக்கு “பங்களிப்பு அரசியல்” பெறுமானத்தை விட “பிரமுகர் அரசியல்” பெறுமானமே தேவை என்ற எண்ணமே இதற்குக் காரணம்).
அப்பொழுது, “தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள அத்தனை கட்சிகளும் ஆதரவளிப்பதாக ஒத்துக் கொண்டால்தான் தான் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட முடியும்” என நிபந்தனை விதித்திருந்ததாக விக்கினேஸ்வரனே பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.
தன்னுடைய வெற்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும். தனது வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்பதுதானே! இதற்கேற்றமாதிரிப் “பிகு ” பண்ணி, சிரமப்படாமல் வெற்றியைச் சுலபமாகப் பெற்று விட முயன்றார் விக்கினேஸ்வரன்.
அதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நிபந்தனையன்றி, வேறென்ன?
தேர்தலின்போது கூட்டமைப்பிலுள்ள சில தரப்புகள் மறுத்தாலும் தன்னால் வெற்றியடைய முடியாது என்பதை விக்கினேஸ்வரன் கணித்திருந்தார். அப்படி வெற்றியடைந்தாலும் எதிர்ப்போரை வைத்துக் கொண்டு தன்னால் ஆட்சியைத் தொடர்ந்து நடத்த முடியாது என எண்ணினார். எனவேதான் புத்திசாலித்தனமான முறையில் தனக்குப் பாதுகாப்பாக நிபந்தனையை விதித்து, அதில் வெற்றியும் பெற்றிருந்தார்.cv5
இவ்வாறு நிபந்தனையோடு அரசியலுக்கு வந்தவர் நேரடியாகவே ”முதலமைச்சர்” என்ற “வெற்றிப் பீடத்தில்” ஏறினார். (பிரமுகர் அரசியலில் ஏற்படுவது இதுதான். எந்த விதமான சிரமமும் இல்லாமல் பதவியில் – அதிகாரத்தில் உட்கார்ந்து கொள்ளலாம்).
அதற்குப் பிறகு தன்னைச் சுற்றி, “விட்டுக் கொடுப்புகளுக்கிடமில்லாத, தீவிரத் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டாளர்” என்ற விதமான ஒரு பிம்ப உருவாக்கத்தைச் செய்யத் தொடங்கினார்.
இதனால் அதுவரையும் அதிதீவிர தமிழ் தேசியவாதியாகத் தன்னை முன்னிறுத்தி, அரசாங்கத்துக்கு அடிக்கடி வாய்ச்சவாடல் அடித்துக் கொண்டிருந்த மாவை சேனாதிராஜா பி்ன்னுக்குத் தள்ளப்பட்டார்.
இதன் மூலம் இந்த மாதிரி ஒரு “பிரமுகர் அரசியல் பிம்ப”த்தை எதிர்பார்த்திருந்த அபிமானிகளுக்கு விக்கினேஸ்வரன் பெருங்கடவுளானார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி பத்திரிகை தொடக்கம் சில அரசியல் ஆய்வாளர்கள் வரையில் விக்கினேஸ்வரனை அவதார புருஸராகவே கருதும் வேடிக்கையும் உருவானது.
வார்த்தைகளின் மூலமாகச் சோடனை செய்பவர்களையே அரசியல் தலைவர்களாகவும் அரசியல் வீரர்களாகவும் கருதுவது தமிழ்களுக்கு வழமை. ரொமாண்டிசம் தமிழர்களுக்கு இனிப்பு.
இதைச் சரியாகப் புரிந்து கொண்டு வார்த்தைகளின் மூலமாக விளையாடத் தொடங்கினார் விக்கினேஸ்வரன். இதுவே அவரைப் பெரும் பிரமுகராக்கித் தலைவராக்கியது.
தமிழ் அரசியல் வரலாறென்பது அதிகமான சந்தர்ப்பங்களிலும் பிரமுகர் அரசியலாகவே இருந்துள்ளது.
இடையில் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் வந்து இதை மாற்ற முயன்றன. ஆனாலும் பிரபாகரனையே பின்னாட்களில் பிரமுகர் தனமாகவே புரிந்து கொண்டவர்களும் அப்படி அணுக முற்பட்டவர்களும் அதிகம்.
இப்பொழுது விக்கினேஸ்வரனிடத்திலும் இதுவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழிபாட்டின் வடிவத்துக்குரிய பிம்பமாக்கப்பட்டுள்ளார் விக்கினேஸ்வரன். ஆனால், இதிலே ஒரு வேடிக்கையான முரணை நாம் அவதானிக்கலாம்.cv2
பிரபாகரனுக்குப் பிறகு விக்கினேஸ்வரனையே அடுத்த கட்டத் தலைவராக கருதுகின்றவர்களில் அதிகமானவர்கள் பிரபாகரனின் விசுவாசிகளாகத் தம்மைக் காண்பிப்போர்.
ஆனால், இவர்கள் ஒரு உண்மையை உணர்வதில்லை. பிரபாகரன் தலைவராக வளர்வதற்கும் மக்களிடம் அபிமானம் பெறுவதற்கும் தன் வாழ்வில் சந்தித்த நெருக்கடிகளும் செலுத்திய உழைப்பும் மிகப் பெரியது. நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகே அவர் அந்த இடத்துக்கு வந்தார். ஆனால், விக்கினேஸ்வரனோ ஒரே நாளில் தலைவரானார்.
விக்கினேஸ்வரனுடைய வாழ்க்கைக் காலத்தில், கடந்த எழுபதுக்கும் மேற்பட்ட காலத் தமிழர்களுடைய அரசியல் வரலாறு என்பது சாதாரணமானதல்ல.
உக்கிரமானது. மிகக் கொடிய ஒடுக்குமுறையைச் சந்தித்தது. அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்கு எதிரான உக்கிரநிலைப்பட்ட போராட்டத்தை உடையது.
இந்தக் காலகட்டத்தில் பல தடவைகள் சிங்களப்பகுதிகளிலிருந்து தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். போராடியவர்கள் அரசியல் கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயுள்கைதிகளாகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாகவும் பல நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். பல இலட்சம்பேர் அகதிகளாக்கப்பட்டனர். இன்னும் பல லட்சம் பேர் நாட்டை விட்டுப் பெயர்ந்து செல்லவேண்டியதாயிற்று. பல ஆயிரக்கணக்கானவர்கள் துணையிழந்திருக்கிறார்கள்.
பெற்றோரை இழந்திருக்கிறார்கள். லட்சம் வரையானவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் எழுந்த நடமாட முடியாத நிலையில் படுத்த படுக்கையாகவே கிடக்கிறார்கள்.
ஆனால், விக்கினேஸ்வரனோ இவ்வளவுக்குள்ளும் சுழித்துக் கொண்டு சிங்களப்பகுதிகளிலேயே (குருநாகல், அனுராதபுரம், கொழும்பு) படித்துப் பட்டம் பெற்றார். பிறகு 1979 இலிருந்து இலங்கை அரசின் நீதித்துறையில் பதவிகளை வகித்தார்.
இந்தக் காலகட்டத்தில்தான் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் ஈழ விடுதலைப்போராட்டத்தை நசுக்குவதற்கான “பயங்கரவாதத் தடைச்சட்டம்” கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டம் தமிழர்களைப் படுமோசமாகச் சிதைத்தது. அப்படியான மிகப் பயங்கரமான இந்தச் சட்டத்தை எதிர்த்து விக்கினேஸ்வரன் சிறிய அளவில் கூடத் தன்னுடைய குரலை உயர்த்தியதாக வரலாற்றுப் பதிவுகள் எதுவுமே இல்லை.
மட்டுமல்ல, இலங்கையில் மிக மோசமான இன ஒடுக்குமுறை நடந்த காலப்பகுதியிலெல்லாம் விக்கினேஸ்வரன் நீதித்துறையில் பதவி உயர்வுகளைப் பெற்றுச் சென்று கொண்டிருந்தார். (1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala only Act) கொண்டு வந்தபோது ஆயிரக்கணக்கான தமிழ் உத்தியோகத்தர்கள் தமது உத்தியோகத்தத் துறந்தனர் என்பது இங்கே நினைவு கூரத்தக்கது). விக்கினேஸ்வரனோ இதையெல்லாம் கடந்து அரச உயர் பதவிப் படிகளில் ஏறிச் சென்று கொண்டிருந்தார்.
இலங்கையின் நீதியே பிழைத்திருந்த காலத்தில், அறம் பிழைத்திருந்த சூழலில்தான் அந்த அரசின் நீதித்துறையில் உயர் பதவியிலிருந்தார் விக்கினேஸ்வரன். இதையிட்டு அவர் இன்றளவும் குற்றவுணர்ச்சிக்குட்பட்டதாகத் தெரியவில்லை.
ஆக, உயர் நீதிமன்ற நீதியரசராக தமிழ் மொழியில் பதவிப் பிரமாணம் செய்தபோதுமட்டுமே அவர், தமிழர்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் பற்றி உரையாற்றினார்.
அந்த உரை ஒன்றுதான் குறிப்பிடும்படியான ஒன்று. இதுவே விக்கினேஸ்வரனின் முதலாவதாக அரசியல் கவனிப்பைப் பெற்ற நிகழ்ச்சியாகும்.
ஆனால், 2013 க்குப் பிறகான ஐந்து ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய அரசியல் அடையாளமாக – அரசியல் தலைவராக மாற்றப்பட்டுள்ளார் அல்லது அவ்வாறு ஆக்கப்பட்டுள்ளார் விக்கினேஸ்வரன்.
இது இரண்டு வகையில் நடந்திருக்கிறது. ஒன்று சம்மந்தன், மாவை சேனாதிராஜா போன்ற தமிழரசுக் கட்சிப் பாரம்பரியத்தினரின் பலவீனங்களும் தடுமாற்றங்களும் ஏற்படுத்தியதால் ஏற்பட்ட விளைவு.
இரண்டாவது, சம்மந்தன், மாவைக்கு மாற்றாக ஒரு முகம் தேவை என்ற நிலை. அதாவது ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பார்களே, அதுதான்.
எனினும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட விக்கினேஸ்வரன், தன்னுடைய பதவிக்காலத்தில் மாகாணசபையை முன்மாதிரியான பணிச்சபையாக மாற்றிக் கொள்ளத் தவறி விட்டார் என்ற விமர்சனங்கள் பொதுவெளியில் பலமாக உண்டு. அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள வேண்டிய கட்டத்துக்குள்ளும் தள்ளப்பட்டார். வெற்றிகரமான முதலமைச்சராக அவர் வரலாற்றிற் கருதப்படுவதற்கு இடமில்லை.
மாகாணசபையை வெற்றிகரமான செயற்பாட்டமைப்பாக மாற்றக் கூடிய வல்லமையோ அரசியல் சாணக்கியமோ விக்கினேஸ்வரனிடம் இருக்கவில்லை.
இதனால் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பகைத்தார். அரசாங்கத்தை வென்றெடுக்கத் தவறினார். பிராந்திய சக்தியான இந்தியாவைக் கசப்படைய வைத்தார். சர்வதேச சமூகத்தையும் வெல்லமுடியாதவராகினார். ஒட்டுமொத்தத்தில் மாகாணசபையின் ஆட்சிக் காலத்தை விரயமாக்கிய தலைவராகவே மாறியிருக்கிறார்.
இந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளும் அவர் சார்ந்த தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றினுள்ளே அவர் ஏற்படுத்திய நெருக்கடிகள் கொஞ்சமல்ல.
மறுவளமாக தான் எந்தக் கட்சியின் சார்பாகவும் செயற்படவில்லை. எந்தக் கட்சியையும் சேர்ந்தவரும் இல்லை என்று தடாலடியாகப் பதலளித்து விட்டு வெளியே நின்று கம்பு சுத்தும் ஒருவராகவும் மாறியிருக்கிறார்.
அதேவேளை கூட்டமைப்பை உடைக்கப்போவதோ அதிலிருந்து வெளியேறப்போவதோ இல்லை எனவும் சொல்லியிருக்கிறார். இப்படிக் குழப்பமான பதில்களின் வழியே தன்னை ஒரு “புரியாப் புதிராகவே” வைத்துக் கொண்டிருக்கும் விக்கினேஸ்வரன் பிம்பங்களின் வழியே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படியே வாழ வைக்கப்படுகிறார்.
விக்கினேஸ்வரனை ஆதரிப்போருடைய கண்ணோட்டத்தில் “ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தமிழர்களுக்கே விக்கினேஸ்வரனே வழிகாட்டி, திசை காட்டி, பெரும் பேரொளி, படிக்கல், ஏணி, சிகரம்…. இப்படி எல்லாம்”.
இதனால் நினைவிலும் கனவிலும் விக்கினேஸ்வரன் புராணத்தையே பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் கடந்த ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விக்கினேஸ்வரனைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அப்பொழுது விக்கினேஸ்வரனும் அரசியல் களத்தில் இருக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
அதற்குப் பிறகு விக்கினேஸ்வரன் தேர்தலில் வெற்றிபெற்று, மகிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில் தன்னுடைய சம்மந்திகளான வாசுதேவ நாணயக்கார போன்றோர் சகிதம் முதலமைச்சராகப் பதவியேற்றபோது கடுமையான விமர்சனங்களை விக்கினேஸ்வரனுக்கு எதிராக முன்வைத்து முகம் சுழித்தவர்கள்.
ஆனால், பிறகு அரசாங்கத்துக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் ஏற்பட்ட கசப்புகள், முரண்பாடு போன்றவற்றினால் உருவான எதிர்நிலை அரசியலை விக்கினேஸ்வரன் பின்தொடரத் தொடங்கியதோடு இவர்கள் விக்கினேஸ்வரனை நிபந்தனையின்றி ஆதரிக்கத் தொடங்கி விட்டனர்.
இதற்குக் காரணம், புலிகளுக்குப் பிறகு எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதற்குத் தோதான ஆள் கிடைக்கவில்லை என்பதேயாகும்.
உச்ச நம்பிக்கை அளித்திருந்த விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி இவர்களை நிலை குலைய வைத்தது. அந்த நிலைகுலைவை ஈடு செய்யக்கூடியதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ அதனுடைய தலைமை – சம்மந்தனோ இல்லை என்ற ஏமாற்ற உணர்வு விக்கினேஸ்வரனைச் சுற்றி நம்பிக்கையாகப் படரத் தொடங்கியுள்ளது.
ஆனால், விக்கினேஸ்வரனுடைய கடந்த கால அரசியல் பங்களிப்புகளைப் பற்றியும் ஈழத்தமிழர்களுடைய போராட்டத்தைப்பற்றியும் சரியாக விளங்கிக் கொள்வோர் இந்தத் தடுமாற்றங்களையும் அலைபாய்தல்களையும் அரசியல் வெகுளித்தனங்களையும் கண்டு சிரிக்கவே செய்வர்.
அரசியல் செயற்பாடுகளின் வழியே தன்னைக் கட்டமைக்கும் – தன்னுடைய பணிகளை ஒழுங்கமைக்கும் ஒருவரால்தான் நிகழ்கால மற்றும் எதிர்கால அரசியலைச் சிறப்பாக முன்னெடுக்க முடியும்.
மக்களுக்கான பணிகளையும் சீராகச் செய்ய முடியும். இதற்குக் குறைந்த பட்சம் மக்களுடன் வாழ்ந்த அனுபவமும் அத்தகைய உறவும் தேவை. விக்கினேஸ்வரனுக்கு இதெல்லாம் பூச்சியமே!
அமைப்பு அல்லது இயக்கம் அல்லது கட்சி என்ற எந்த ஒழுங்கு வழிமுறைகளிலும் செயற்பட்ட பயிற்சியோ பாரம்பரியமோ விக்கினேஸ்வரினிற்கு இல்லை. இதனால்தான் அவர் இன்னும் ஒரு கட்சியோடும் தன்னை அடையாளப்படுத்த முடியாதவராக இருக்கிறார்.
இருக்கும் கட்சிக்குள்ளும் சரி, இனி ஒரு புதிய கட்சியை உருவாக்குவதற்கும் சரி அவரால் முடியாதிருக்கிறது. அப்படித்தான் அவர் ஒரு புதிய கட்சியை உருவாக்கினாலும் அந்தக் கட்சியை அவரால் வழி நடத்த முடியாது.
முக்கியமாக அவர் ஐக்கிய முன்னணிக்கோ கூட்டணிக்கோ பொருந்துவதற்கான இயல்பைக் கொண்டவரல்ல. எப்போதும் தன்னைத் தனித்து வைத்து, முதன்மைப்படுத்திக் கொள்ளும் இயல்பே விக்கினேஸ்வரிடம் உண்டு. இந்த இயல்பே அவருக்கு எறியப்படும் அத்தனை தடங்களிலும் அவர் சி்க்கிக் கொள்ளாமல் வைத்திருக்கிறது.
ஆனால், அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற ஒருவருக்கு இது பொருத்தமானதல்ல. அரசியல் என்பது சேர்ந்து செயற்படுதல், கூடிச் செய்தல் என்பவற்றினால் விளைவதாகும். ஆகவே அரசியல் விதிமுறைக்கு எதிரானவராகவே விக்கினேஸ்வரன் காணப்படுகிறார்.
அவர் யாரையும் நம்பும் ஒருவராக – எந்தக் கொள்கையினதும் வழிப்பட்ட ஒருவராக இல்லை.
வெளியே நின்று, தன்னிச்சையாக அவ்வப்போது அரசியல் பிரகடனங்களைச் செய்யும் ஒருவராகவே தன்னை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் விடுக்கின்ற அறிக்கைகளையும் அவருடைய பிரகடனங்களையும் தொடர்ச்சியாக அவதானிப்பவர்களுக்கு இது விளங்கும்.
இது ஒரு வகையில் பெரும்பாலான தமிழ்ச்சினிமாக்களில் மிதப்பாகத் தெரிவதைப் போன்ற கதாநாயகத்தனமே. அதாவது பிம்ப உருவாக்கமே. கேட்கவும் பார்க்கும் நல்லாயிருக்கும். நரம்புகளில் சூடேறும்.
இப்படியான குணவியல்பைக் கொண்டிருப்பவர் எப்போதும் பொது வெளியில் ஊடகக் கவர்ச்சியை அளித்துக் கொண்டே இருப்பார். ஆனால், நடைமுறை ரீதியில் செயற்பாட்டுக்குச் செல்ல முடியாது.
அப்படிச் செயற்பாட்டுக்குச் செல்வதாக இருந்தால் நிச்சயமாக அதற்கு அமைப்பாக்கம் தேவை. ஆனால், அதை நோக்கிச் செல்ல முடியாதவராக இருப்பதே விக்கினேஸ்வரனின் பலவீனமும் தோல்வியும். அவருடைய கடந்த கால – நிகழ்காலத் தோல்வி இதுதான்.
இதிலி்ருந்து மீண்டால்தான் அவரால் ஒரு செயற்பாட்டுத்தளத்தை உருவாக்க முடியும். ஆனால், அது இலகுவான ஒன்றல்ல. அப்படித்தான் மிகக் கஷ்டப்பட்டு அதைச் செய்ய முற்பட்டால், விக்கினேஸ்வரனைப் சுற்றிக் கட்டப்பட்ட பிம்பங்களை உடைப்பதாகவே முடியும்.
எவரும் செயற்பாட்டுக்குச் செல்லும்போது நடைமுறை ரீதியாகப் பல சவால்களையும் நெருக்கடிகளையும் சிரமங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில் நடைமுறை என்பது எப்பொழுதும் யதார்த்தத்தை நோக்கியே இறங்க வைக்கும். இதை மீற முடியாது. இதனால்தான் யதார்த்தவாதி வெகுசன விரோதி என்ற அனுபவம் வலியுறுத்தப்படுவது.
எப்போதும் உயரத்தில் – சிகரத்தில் – இருக்க முனைவோர் இதை – இந்த எதிர்மாறான நிலையை எதிர்கொள்வது சாதாரணமானதல்ல. விக்கினேஸ்வரன் செயற்பாட்டுச் சாத்தியங்களைப் பற்றி ஒரு போதுமே சிந்திப்பவராக இல்லை. அதனால் அவர் இலகுவாக உச்ச நிலைப் பிரகடனங்களைச் செய்கிறார். எவர் மீதும் கண்டனங்களை முன் யோசனையில்லாமல் வெளிப்படுத்துகிறார்.
பதிலாக அரசியல் தலைவர் ஒருவரிடத்தில் இருக்க வேண்டிய நிதானம், சாணக்கியம், விவேகம், செயற்திறன், உறுதிப்பாடு போன்றவை விக்கினேஸ்வரனிடத்திலே இல்லை.
ஆகவேதான் விக்கினேஸ்வரனால் அரசியலில் எத்தகைய உறுதியான நிலைப்பாட்டையும் – தீர்மானத்தையும் – எடுக்க முடியாமலுள்ளது. அவருடைய இந்தக் குணம், அவரை நம்பி இறங்குவோருக்கு உள அச்சத்தைக் கொடுக்கக் கூடியது.
இப்பொழுதுள்ள பிரச்சினையே இதுதான். “இந்தா மழை வருகிறது” என்பதைப்போல, திடீரெனப் பெரும் புரட்சியாக தான் ஒரு புதிய சூழலை உருவாக்குகிறேன். புதிய கட்சி ஒன்று பிறக்கிறது என்ற மாதிரி ஒரு Action காட்டுவார். ஆனால் அந்த மழை பெய்யவே பெய்யாது.
அப்படியென்றால், தமிழரின் அடுத்த கட்ட அரசியலுக்குப் பொருத்தமான தலைமைச் சக்தி எது? திறன் மிக்க – அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஒரு தலைவரை யாராவது இனங்காட்ட முடியுமா? என்று கேட்கிறார்கள் சில நண்பர்கள். இந்தக் கேள்வி அவர்களிடம் மட்டுமல்ல வேறு பலரிடத்திலும் உண்டு.
நிச்சயமாக ஒரு அணி – மாற்று அரசியலுக்குரிய அணி – அவசியம் தேவை. அதைப்போலத் தமிழர்களுக்கான தலைமைச் சக்தியும் தேவையே. ஆனால் அது காயத்துக்கு மேலால் தடவி விடுவதைப்போல இருக்க முடியாது. சிகிச்சை அளிப்பதைப்போல ஒரு சிறந்த மருத்துவராக – மருத்துவக் குழுவைப் போல இருக்க வேண்டும்.
ஆகவே மாற்றங்களை உண்டாக்கக் கூடிய மாற்று அணியே இப்பொழுது தேவை. அந்த அணி கொள்கை, நடைமுறை, சிந்தனை போன்ற விடயங்களில் உண்மையான மாற்று அணியாகச் செயற்படும். சொல்லிக் கொண்டிருப்பதையும் விட வேலைகளைச் செய்யும் தரப்பாக இருப்பது அவசியம்.
இதைத் தமி்ழ்ச்சமூகம் தேடிக் கண்டடைய வேண்டும். அதிகமாக ஒன்றும் இல்லை. தேவையான அரசியல் பணியை மிகத் திறமையாகச் செய்யக் கூடிய ஆற்றலாளர்கள் எங்கும் உள்ளனர். அவர்களில் பலர் தேவையான அறிகைக் கல்வியை பெற்றிருக்கிறார்கள். ஆனால் என்ன துரதிருஸ்டம் என்றால், அவ்வாறானவர்களை தமி்ழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை.
தமிழ்ச்சமூகத்தின் கூட்டு மனதில் அல்லது பொது உளவியலில் படித்த தூய பிரமுகரை அல்லது பிரபாகரன் போன்ற வலிமையானவரை(?)த்தான் விரும்புகிறார்கள்.! என்று எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி குறிப்பிட்டிருப்பது இங்கே கவனத்திற்குரியது.
இத்தகைய பிரமுகர்கள் ஏற்கனவே பல கொடிகளை ஏற்றிப் பறக்க விட்டார்கள். ஆனால் இறுதியில் நடந்தது என்ன? பேச்சுப் பல்லக்கு. தம்பி கால்நடை என்பதற்கு அப்பால் ஓரடி நகரவில்லை.
எனவே எந்த விதமான மயக்கங்களும் தடுமாற்றமும் இல்லாமல் முற்றிலும் புதிய முகத்தை – ஓரணியை உருவாக்க வேண்டும். அரசியலில் எதுவும் எப்படியும் நடக்கும்.
தேவையே அதைத் தீர்மானிக்கும். ஐ.தே.கவும் சு.கவும் இணைந்து ஒரு புதிய சூழலை உருவாக்கும் என யாரும் எதிர்பார்த்ததில்லை. அதைப்போல 1994 இல் சந்திரிகா குமாரதுங்க அரசியலுக்கு வந்து ஆட்சியைக் கைப்பற்றுவார் என்றும் யாரும் எண்ணியதில்லை. ஏன் விக்கினேஸ்வரன் அரசியலுக்கு வருவார், முதலமைச்சராகுவார் என்று அவரும் நினைத்ததில்லை. பிறரும் நினைத்ததில்லை.
ஆகவே புதிய தலைமை – புதிய அணி ஒன்று எப்படியாவது வந்தே தீரும். அது காலத்தின் நிபந்தனை. அதை உய்த்துணர்ந்து ஏற்றுக் கொள்வது, ஆதரிப்பதே தமிழர்களின் துணிவு. சாணக்கியம். வெற்றி. வரலாறு. வாழ்க்கை எல்லாம்.
– கருணாகரன்