போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடத்தப்படும் வரை, அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை அனுமதிக்காது என்று கூறப்படுகிறது.
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்தநிலையில், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் இருப்பதாக கூறப்படும் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டால் தான், அவர் தேர்தலில் களமிறங்க முடியும் என்ற நிலை காணப்படுகிறது.
இவர் தேர்தலில் களமிறங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முக்கிய தமிழ் அரசியல் தலைவர் ஒருவருடன், விடைபெற்றுச் செல்லும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, “கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு இப்போது அமெரிக்கா இடமளிக்காது.
அவருக்கு எதிராக சுமத்தப்படும், போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான விசாரணைகள் நடத்தப்பட்டு, தீர்ப்பளிக்கப்படும் வரை- கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதை தடுக்கும் நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கும் என்று அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கோத்தாவை நிறுத்தக் கூடாது – மகிந்தவிடம் அமெரிக்கத் தூதுவர்
அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ச களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார்.
நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும், காலைக்கதிர் நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்றுமுன்தினம் இரவு மகிந்த ராஜபக்சவை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போதே, மேற்குலகத்தின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதுவர் வெளிப்படையாக கூறினார் என்று அறியப்படுகிறது.
கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை மேற்குலகம் சாதகமாக நோக்காது. அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜனநாயக அரசியலுக்குப் பொருத்தமான- அனுபவமும், அரசியல் முதிர்ச்சியும் உள்ள ஒருவரே நாட்டின் தலைவராக வேண்டும் என்ற தொனியில், அவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
அமெரிக்கத் தூதுவரின் இந்த நிலைப்பாடு, ராஜபக்ச குடும்பத்துக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், காலைக்கதிர் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.