முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என அமெரிக்கா தீர்மானம் எடுத்தால் அதனை அவரால் மீறமுடியாது.
அமெரிக்க பிரஜை என்ற வகையில் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஒரு நாடு எவ்வாறு இலங்கை மீதான அழுத்தங்களை முன்வைக்க முடியும் என்று வாராந்த அமைச்சரவை முடிவுகளை வெளிப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை. ஆகவே அவர் அமெரிக்க நாட்டின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்.
அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் அல்ல. அவரது கூற்றுக்களை நாம் கேட்கத் தேவையில்லை என்ற காரணி சாதாரணமானது.
ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை என்ற காரணத்தினால் அமெரிக்க தூதுவரின் கருத்தை அவர் ஏற்க்கத்தான் வேண்டும். அமெரிக்கா ஏதேனும் சட்டங்களை நடைமுறைப்படுத்தினால் கோத்தபாய ராஜபக்ஷ அதற்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்.
அமெரிக்க தூதுவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சந்தித்தார். ஆனால் இந்த காரணிகள் குறித்து அவர் ஏன் வாய் திறக்கவில்லை.
சில பத்திரிகைகளில் அவர் அமெரிக்க தூதுவரை சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ள போதிலும் ஊடகங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ இந்த காரணிகளை கூறாதது ஏன்? ஆகவே அவரிடம் இது குறித்து வினவுங்கள் என்றார்.