காணாமல்போன பெண்ணின் சடலம் மலைப்பாம்பு வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது.
இந்தோனேஷியாவின், முனா தீவில் உள்ள பெர்சியாபன் லவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் திபா. 54 வயது பெண்ணான திபா கடந்த வியாழன் (14.06.2018) அன்று இரவு காணாமல் போனார்.
அவரை கடைசியாகத் தோட்டத்தில் பார்த்ததாகவும் அவர் காய்கறிகளைப் பறிக்கச் சென்றதாகவும் உறவினர்கள் கூறினர். தோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் எங்குமே திபா கிடைக்கவில்லை.
இந்நிலையில் திபா காணாமல்போன அதே தோட்டத்தில் ராட்சச மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் நெளிந்துகொண்டிருந்ததைப் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்தப் பாம்புதான் திபாவை விழுங்கியிருக்கும் எனக் கிராம மக்கள் சந்தேகித்தனர். பாம்பை அடித்துக் கொன்று வயிற்றைக் கிழித்து பார்த்ததில் திபாவின் சடலம் இருந்தது.
சுமார் 7 மீட்டர் நீளமிருந்த அந்தப் பாம்பின் வயிற்றிலிருந்து திபாவின் சடலத்தை மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவில் மலைப்பாம்பு சுற்றித்திரிவது புதிதல்ல. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே கிராமத்தில் விவசாயி ஒருவரைப் பாம்பு விழுங்கிக் கொன்றது’ என்கின்றனர் கிராம மக்கள்.