வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் அம்மாணவனுக்கு தலையில் வெடிப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்றுவரும் மாணவரும் அவரது நண்பரும் நகைச்சுவையாக உரையாடிக்கொண்டிருந்த வேளை அங்குவந்த ஆசிரியர் தனது கைகளால் இரு மாணவர்களையும் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் குறித்த மாணவனின் தலை அருகில் இருந்த சுவருடன் மோதுண்டதில் தலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜாவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.