கருப்பாக இருப்பதாக விமர்சித்த கணவன் வீட்டார்க்கு விருந்தில் விஷம் கலந்த பெண்
மகாராஷ்டிராவில் கருப்பாக இருப்பதால் தரித்திரம் என விமர்சித்த கணவன் வீட்டாரை பழிவாங்க, விருந்து நிகழ்ச்சியில் பறிமாறப்பட்ட உணவில் பெண் ஒருவர் விஷம் கலந்ததால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 120 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக,மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலப்பூரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான ஜோதி பிரக்யாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பின் ,அவர் கருப்பாக இருப்பதாகக் கூறி, மாமனார் குடும்பத்து உறவினர்கள் அடிக்கடி விமர்சித்ததாகவும், ஜோதியால் வீட்டுக்கு தரித்திரம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி ஓயாமல் வசைபாடியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஜோதி பிரக்யா மிகவும் மன உளைச்சலுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை கருப்பாக இருப்பதாக அதிகம் வசை பாடிய உறவினர் சுபாஷ் மானே என்பவர் மீது ஜோதி கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், மற்ற உறவினர்களை விட, ஜோதியை அடிக்கடி மோசமாக விமர்சித்த சுபாஷ் மானே குடும்பத்தினர், மஹத் என்ற கிராமத்தில் புதிதாக வீடுகட்டி, பால் காய்ச்சும் விழா நடத்தியுள்ளனர்.
அவர்கள் மீது தீரா கோபத்தில் இருந்த ஜோதி வீடு பால் காய்ச்சும் விழாவில் வைத்தே பழிவாங்க முடிவு செய்திருந்தார். இதற்காக விஷேச நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவில் ஜோதி பூச்சி மருந்தை கலந்து, அவரே உணவையும் பரிமாறியுள்ளார்.
இதனால், அந்த உணவை சாப்பிட்ட 4 சிறுவர்களும், 50 வயது பெண் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும், 120 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்கள் சாப்பிட்ட உணவில் கலந்திருந்தது எவ்வகையான விஷம் என்ற விசாரித்தபோது, கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பாம்புகள் வருவதைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் நஞ்சு என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து உணவு பரிமாறிய ஜோதியை பிடித்து, விசாரித்த போதுதான், உறவினர்கள் தம்மை கருப்பாக இருப்பதாக கூறி வசைபாடியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் உணவில் நஞ்சு கலந்ததை அவர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜோதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்