வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க அவரது சகோதரி நூலைப் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்பட ஏனையவர்களுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட முக்கியஸ்த்தர்களின் உரைகளும் இடம்பெற்றன.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (24.06.18) நடைபெற்ற தனது உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், “கூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளதால் எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
எமது விசேட அதிதி கௌரவ சம்பந்தன் அவர்களின் வரவு எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்வையும் ஊட்டியுள்ளது. என்னை இந்த முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்தவர் அவரே.
இதுவரையில் அவருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நான் நடந்து வந்துள்ளேன்.” எனவும் வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இன்றி பிரிந்து செயற்பட்டால் “நமது மக்களை மக்களை நாமே அழிப்பதாக அமையும்‘ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இரா சம்பந்தன், விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை தருவோமென சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், தீர்வுத் திட்டத்தில் இலங்கை அரசாங்கம் தற்போது பின்னிற்கின்றதென குற்றஞ்சாட்டிய அவர், விடுதலைப் புலிகளின் காலத்தில்கூட தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பல முன்மொழிவுகளை முன்வைத்ததாகவும், அவற்றில் எதுவும் செயற்படுத்தப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நிகழ்வில் நீண்டகால இடைவெளிக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்துகொண்டதன் மூலம் இச் சந்திப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் மிக்கதொன்றாகும்.
அத்துடன் மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சிங்கப்பூர் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் முத்துக்குமராசுவாமி சொர்ணராஜா பிரதம விருந்தினராகவும், வைத்திய கலாநிதி லக்ஸ்மன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.