இலங்கை பெண்ணின் கணவரும் பிள்ளைகளும் சென்னையில் சடலமாக மீட்பு
மனைவி தன்னை புறக்கணித்து விலகி போனதால் அதிர்ச்சி அடைந்த கணவன் தனது இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டார்.
சென்னை போரூர் காமதேனு நகரைச் சேர்ந்தவர் ஹபீப் ரஹ்மான்(38), சமையல் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார்.
இவருக்கும் இலங்கையை சேர்ந்த அனிஷா(34) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நயிப்(7), ரியான்(3) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தன.
மண வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் அனிஷாவின் மனதில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. கணவனை புறக்கணிக்க துவங்கினார். சிறிது சிறிதாக ஒதுங்கினார்.
மனைவியின் திடீர் மாற்றம் தெரியாமல் ஹபீப்ரஹ்மான் கவலை அடைந்தார்.
காரணம் கேட்டபோது அனீஷா பதிலளிக்காமல் முற்றிலுமாக புறக்கணிக்க துவங்கினார். கணவரை விட்டு விலகி செல்ல ஆரம்பித்தார்.
இரண்டு ஆண் குழந்தைகள் குடும்பம் என்று சந்தோஷமாக இருக்கும்போது திடீரென கணவன் பிள்ளை பற்றி கவலைப்படாமல் விலகி போகிறாயே என்று ஹபீப் கேட்டுள்ளார்.
இதில் வாக்குவாதம் ஆகி அனிஷா கணவர் பிள்ளைகளை நிராதரவாக விட்டு விட்டு இலங்கைக்கு சென்றுவிட்டார்.
மனைவியின் மனதில் மாற்றம் வரும், எப்படியாவது குடும்பம் ஒன்று சேரும் என கணவர் ஹபீப் இரண்டு சிறிய பிள்ளைகளை வைத்துக்கொண்டு மனைவிக்காக காத்திருந்தார். ஆனால் அனிஷா அவர்கள் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இரண்டு பிள்ளைகளும் அம்மா எங்கே என்று கேட்டபோது அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஹபீப் தவித்தார். பிள்ளைகளை கவனிக்க முடியாமல் தொழிலிலும் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் ஹபீப் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் மனைவி அனீஷா இலங்கையிலிருந்து சென்னை திரும்பியுள்ளார்.
மனைவி வருவார் என்று காத்திருந்துள்ளார். மகன்களும் அம்மா வருவார், வருவார் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அனிஷா கடந்த 10 நாட்களாக பிள்ளைகளை பார்க்க வரவே இல்லை.
இதனால் பிள்ளைகள் இருவரின் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத காரணத்தால் மனமுடைந்த ஹபீப் இனி வாழ கூடாது என முடிவெடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை காலை விஷம் வாங்கிக்கொண்டு வந்த அவர் மதிய உணவில் விஷத்தை கலந்து இரண்டு பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுள்ளார்.
விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் உடனடியாக மூவரும் உயிரிழந்தனர்.
சனிக்கிழமை மதியம் உயிரிழந்த மூவரையும் யாரும் பார்க்கவராததால் வீட்டில் இரண்டு நாட்களாக மூவர் பிணமும் கிடந்துள்ளது.
இதனால் பிணங்கள் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தவர் மதுரவாயல் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ஹபீப் ரஹ்மான், அவரது 7 வயது மகன் நயீப், மூன்று வயது மகன் ரியான் மூவரும் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.
அவர்களது உடலைக்கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி புறக்கணித்த நிலையில் பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு வாழப்பிடிக்காத தந்தை இரண்டு மகன்களுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.