மும்பை: மராட்டிய மாநிலம் மும்பை மேற்கு புறநகர் காந்திவிலி தாக்கூர் வில்லேஜ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 5-வது மாடியில் வசித்து வந்த ஹர்சிகா என்ற 14 வயது சிறுமி, 8-வது மாடிக்கு சென்று அங்குள்ள வெளிப்புற சுவரில் நின்றபடி கீழே குதிப்பதற்கு தயாராகி கொண்டிருந்தாள்.
இதை பார்த்து குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கீழே குதித்து விடாதே என அவர்கள் சத்தம் போட்டனர். ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாத அந்த சிறுமி அடுத்த சில நொடிகளில் அங்கிருந்து கீழே குதித்து விட்டாள்.
இதில் தரையில் மோதி அவள் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தாள். இதை பார்த்து பதறி போன குடியிருப்புவாசிகள் உடனடியாக அவளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தாள். அவள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டாள் என்பது தெரியவில்லை. அவளது செல்போன், சமூக வலைத்தளம் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவளது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தோழிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிறுமி ஹர்சிகா உயிரை மாய்த்து கொள்வதற்காக மாடியில் இருந்து குதித்ததை அந்த கட்டிடத்தின் எதிர்புறம் உள்ள மற்றொரு கட்டிடத்தில் இருந்து ஒருவர் செல்போனில் படம் பிடித்து இருக்கிறார்.
அந்த தற்கொலை காட்சி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.