அகமதாபாத்: குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள நைகா-பேராய் கிராமங்களுக்கு இடையே ஓடும் கால்வாயில் தடுப்பணையுடன் கூடிய சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்துதான் மக்கள் மறுகரைக்கு செல்ல முடியும்.
இந்த பாலத்தை விட்டால் 10 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி செல்ல வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உடைந்துவிட்டது.
இருந்தாலும் வேறு வழியில்லாமல் பாலத்தில் உள்ள ஷட்டர் கதவினைப் பிடித்து தொங்கியபடி பொதுமக்கள் மறுகரைக்கு செல்கின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் உயிரைப் பணயம் வைத்து இந்த பாலத்தைக் கடக்கின்றனர்.
ஷட்டரின் உயரம் கூட இல்லாத மாணவர்களுக்கு, பெரியவர்கள் உதவி செய்து கைதூக்கி விடுகின்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விஷயத்தில் அதிகாரிகள் கூடுதல் அக்கறை எடுத்து, பாலத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை பெய்வதால் பாலம் சீரமைப்பு பணியை உடனே தொடங்க முடியவில்லை என்றும், விரைவில் பணி தொடங்கும் என்றும் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.