கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ் கே கிருஷ்ணாவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
நவோதய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் அவரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் அங்கிருந்து அவரின் சடலம் ஊர்வலமாக கொழும்பு மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டது
பின்னர் , மாநகர சபையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த எஸ் கே கிருஷ்ணாவின் பூதவுடல் பிற்பகல் 2.30 மணியளவில் அங்கிருந்து ஊர்வலமாக செட்டியார் தெருவில் அமைந்துள்ள அன்னாரின் வர்த்தக நிலையம் வாயிலாக மாதம்பிட்டி மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டதாக நவோதய மக்கள் முன்னணியின் ஊடக செயலாளர் ஜெய்சங்கர் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.
கடந்த 9 ஆம் திகதி காலை நவோதய மக்கள் முன்னணியின் தலைவர் எஸ் கே கிருஷ்ணா துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
வழமையை போல அன்றைய தினம் இறைவழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் கடையை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறந்த கிருஷ்ணா.
வர்த்தக நிலையத்தை சுத்தம் செய்ததன் பின்னர் தேநீர் அருத்திக்கொண்டு நாளிதழ் வாசித்துக்கொண்டிருக்கையில் நபர் ஒருவர் பொதி செய்யப்பட்ட பால் பைக்கற்று ஒன்றை தருமாறு கேட்கின்றார்.
அதனை கொடுத்துவிட்டு சென்று அமர்ந்திருந்த தருணத்தில் உந்துருளி தலைக்கவசத்துடன் வந்த நபர் ஒருவர் எஸ் கே கிருஷ்ணாவை இலக்கு வைத்து மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்கின்றார்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதும் கீழே விழுந்த எஸ் கே கிருஷ்ணா மீண்டும் எழுகின்றார்.
குறித்த சந்தர்ப்பத்தில் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போது சம்பவ இடத்தியிலேயே மேசையின் மீது விழுந்து உயிரிழக்கின்றார்.
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் சீ சி டீ வி கருவியில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் ஒரு பிள்ளையின் தாயான எஸ் கே கிருஷ்ணாவின் மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.