இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறைமையில் தொழிலில் ஈடுபட்டனர் என்ற இரண்டு குற்றங்களுக்கு இந்திய மீனவர்கள் 16 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்தச் சிறைத் தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்ட ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், 16 மீனவர்களும் இதே குற்றத்தை மீளவும் செய்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
அத்துடன் படகுகளைப் பறிமுதல் செய்வதா அல்லது தண்டப் பணத்துடன் மீளக் கையளிப்பதா என்ற கட்டளையை வரும் ஓகஸ்ட் மாதம்வரை ஒத்திவைத்து நீதிமன்று உத்தரவிட்டது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளும் கடற்படையினரால் மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து கடந்த 5ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது.
அத்துடன், கடந்த 8ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகு ஒன்றில் தொழிலில் ஈடுபட்ட மேலும் 4 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேரும் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன், படகுகள் மூன்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்திய மீனவர்கள் 16 பேரும் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கை ஆராய்ந்த நீதிவான், இந்திய மீனவர்கள் 12 பேரையும் நேற்று 12ஆம் திகதிவரையும் மேலும் 4 மீனவர்களை இன்று 13ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்திய மீனவர்களுக்கு எதிராக புதிய சட்டத்தின் கீழ் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் அதிபதியின் சார்பில் யாழ்ப்பாண அதிகாரிகளால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி வெளிநாட்டு வள்ளங்களில் தொழிலில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறைமையில் தொழிலில் ஈடுபட்டனர் என்று இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்திய மீனவர்கள் 16 பேரும் குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.
“குற்றவாளிகளுக்கும் இரண்டு குற்றங்களுக்கும் தனித்தனியே ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
ஒவ்வொருக்கும் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதே குற்றச்செயலை 16 பேரும் மீளவும் செய்கின்ற போது, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.
16 குற்றவாளிகளையும் உடனடியாக நாடு கடத்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு உத்தரவிடப்படுகிறது“; என்று நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் தீர்ப்பளித்தார்.
மேலும் புதிய சட்டத்தின் கீழ் படகுகளுக்கு அவற்றின் உரிமையாளர்களுக்கு தண்டப் பணம் அறவிடுவதா? அல்லது அரசுடமையாக்குவதா? என்ற கட்டளை ஓகஸ்ட் மாதம் வழங்கப்படும் என நீதிமன்று வழக்கை ஒத்திவைத்தது.
இந்திய மீனவர்கள் சார்பில் சட்டத்தரணி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையானார்.
கடந்த பெப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு வள்ளங்களை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் முதலாவது வழக்கு இதுவாகும்.
1979 ஆம் ஆண்டு 59 ஆம் இலக்கத்தின் கீழான வெளிநாட்டு கடற்தொழில் படகுகள் முறைப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் கடந்த பெப்ரவரி மாதம் திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடல் சார் நடவடிக்கையை தடுப்பதுடன் இலங்கைக்கு உரித்தான கடற்பகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
புதிய திருத்தத்தின் கீழ் கைப்பற்றப்படும் கடற்தொழில் படகுகளுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்படடது.
இதுவரையில் நடைமுறையில் இருந்த 15 இலட்சம் ரூபா தண்டப்பணம் 175 மில்லின் ரூபா வரை அதிகரிக்கப்பட்டதுடன் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கடற்தொழில் படகு கைப்பற்றப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்படும் வெளிநாட்டு படகுகள் தொடர்பில் குறித்த நாட்டின் கவுன்சிலருக்கு விரைவாக கடற்றொழில் திணைக்களத்தினால் அறிவிக்கப்படல் வேண்டும்.
சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும்போது கைப்பற்றப்படும் படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டும்.
புதிய திருத்தத்திற்கு அமைவாக கைப்பற்றப்படும் படகின் அளவுக்கேற்ப 5 மில்லியன் முதல் 175 மில்லியன் ரூபா வரையில் தண்டப்பணம் விதிக்கமுடியும்.
அத்துடன் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் படகுகளுக்கு அதன் நீளத்துக்கு அமைவாக அனுமதிப்பத்திர கட்டணமாக 7 இலட்சத்து 50,000 ஆயிரம் ரூபாவில் இருந்து 150 மில்லியன் ரூபாய் வரை அறவிடப்படவேண்டும்.