2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து மீண்டும் கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாடு வலுத்து வருவதாக அறிய
முடிகிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்குவதற்கு அண்மையில் மறைமுக இணக்கம் ஏற்படுத்தப்பட்ட போதும், அதற்கெதிராக சில உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவை களமிறக்குது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியை மையப்படுத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடவுள்ள அபேட்சகர் குறித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.
அதன்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
எனினும் அம்மூவரில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்குவது வெற்றியை உறுதிசெய்யும் என கூட்டு எதிர்க்கட்சிக்குள் பரவலாக பேசப்பட்டு வந்தது.
எனினும் அதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட தரப்பினர் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் நீண்ட சுற்றுப் பேச்சுவார்த்தையின் பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை களமிறக்குவதற்கு கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மத்தியில் மறைமுக இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போத்தாபய ராஜபக்ஷ நேரடி அரசியல் வேலைத்திட்டங்களில் பிரவேசித்தார்.
இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம உள்ளிட்ட தரப்பினர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் தகுதியற்றவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சிக்குள் எழுந்துள்ள சிக்கல் காரணமாக அந்த எதிர்க்கட்சியானது, ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியாக (எகாபத்த பொதுஜன பெரமுன) செயற்படுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒரு கட்சியாக அங்கம் வகிக்கவுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் களமிறக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமிருப்பதாகவும் அதனை தற்போது வெளிப்படுத்தப்போவதில்லை எனவும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டம் அனுமதிக்காது போகும் பட்சத்தில் அவரது பாரியார் சிராந்தி ராஜபக் ஷவை தேர்தலில் களமிறக்குவது சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.