தன் புருஷன் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுவாள். இதுதான் இயல்பு.
இதுதான் காலகாலமாக இருக்கும் பெண்களின் ஆழ்மன உணர்வு. கணவன் தனக்கு மட்டுமே என்று வாழ்ந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு அதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் கிடையாது.
ஆனால் அதற்கு எதிராகவோ, குறுக்காகவோ யாரேனும் வந்துவிட்டால், அந்த பெண் பெண்ணாகவே இருக்கமாட்டாள், கொதித்தே போய்விடுவாள்.
அப்படி கோபத்தில் பொங்கும்போது இடம், பொருள், ஏவல்… இதெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் காற்றில் பறந்து போய்விடும். அப்படி கோவையிலிருந்து காற்றில் பறந்து வந்த செய்திதான் இது.
இது யார் பெயர்?
புது திருமண ஜோடி ஒன்று கோவை சாய்பாபா கோயிலுக்கு வந்தது. இவர்கள் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு 5 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. கோயிலின் நுழைவாயிலில் செல்லும்போது, கணவனின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சைக்குத்தி இருப்பதை மனைவி பார்த்தார். இதனால் அதிர்ச்சியுற்று, கணவரிடம் “இது யார் பெயர்” என்று கேட்டார்
அதற்கு அந்த கணவன், தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், ஒரு குழந்தை கூட இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் தனக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று ஒரு குண்டையும் போட்டார்.
இதனைகேட்டு, கோபமும், ஆத்திரமும், ஏமாற்றமும், அதிர்ச்சியும், ஒன்று சேர்ந்து கொதித்துப்போன அந்த புதுமணப்பெண், கோயில்வாசல் என்றும் பாராமல் கணவனை சரமாரியாக அடிக்க தொடங்கிவிட்டார். கோயிலுக்கு வந்தவர்கள், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இதனை வேடிக்கை பார்க்க கூடிவிட்டனர்.
போலீசார் அறிவுரை
கணவனை, மனைவி வெளுத்துக்கட்டி, அடித்து துவம்சம் செய்து கொண்டிருப்பதை விலக்கி விட யாருமே முன்வரவில்லை. இதில் கோயிலுக்குள் தரிசனம் செல்ல சென்ற சிலர், இந்த காட்சியை செல்போனிலும் படம்பிடிக்க துவங்கிவிட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் சென்று முறையிடுங்கள், இப்படி ரோட்டில் நின்று கலாட்டா செய்யலாமா என்று இருவருக்கும் அறிவுறுத்தினர். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஒருவரை திருமணம் செய்வற்குமுன் அவரைபற்றி முழு விவரங்கள் இல்லாவிட்டாலும் ஓரளவு விவரத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? திருமணமாகி 5 நாட்கள் ஆகியும் கையில் பச்சை குத்தியுள்ளதை ஒரு மனைவி பார்க்கவில்லை என்பது ஆச்சரியம்தான்.
ஆனால் அதைவிட அதிசயம், இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்களாம்.
எந்த லட்சணத்தில் காதலித்து இருந்தால், இவ்வளவு பெரிய உண்மையை அந்த இளைஞன் மறைத்திருப்பான், அந்த பெண்ணுக்கும் கையில் பச்சை குத்தியது தெரியாமல் இருந்திருக்கும். காதலுக்கு கண் இல்லை என்பார்களே… அதுதானா இது?