இருதயம் பலவீனமானவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள்’ இன்றைய நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டாம்’ என்றொரு எச்சரிக்கை அறிவிப்பை பிக்பாஸ் முதலிலேயே தந்திருக்கலாம்.
அந்த அளவிற்கு கொடூரமான காட்சிகள் இன்று அரங்கேறின. பிக் பாஸ் போட்டியாளர்கள் பள்ளிச்சீருடை அணிந்து, பை மாட்டிக் கொண்டு ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ பாடலுக்கு ஆடிய காட்சிகள் எல்லாம் பார்வையாளர்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை; மனித உரிமை மீறல்.
அதிலும் இந்த ஸ்கூல் டாஸ்க் அறிவிக்கப்பட்டவுடன் ‘அப்பா சாமிகளா.. பொன்னம்பலம், மும்தாஜ், வைஷ்ணவியையெல்லாம் எல்லாம் ஸ்கூல் யூனிபார்மில் பார்க்கும் மனோதிடம் எனக்கில்லை.
அவர்கள் ஆசிரியர்களாக வந்தால் நன்றாக இருக்கும்’ என்று மனதிற்குள் அலறிக் கொண்டே இருந்தேன். ஆனால் கடவுள் என் கோரிக்கையை கேட்காமல் இருந்தது இன்னும் கொடூரமானது.
கவிஞர் சிநேகன், இன்று தமிழ் ஆசிரியராக வந்தது இந்தக் கொடுமையின் இன்னொரு பகுதி. (சரி.. விடுங்கப்பா.. ஒருத்தர் தெரியாம ஒருமுறை தப்பு செஞ்சிட்டா.. அதையே குத்திக்காட்டறதும் தப்புதான்!).
“ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம், போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்” என்று ‘குழந்தைகளுக்கு’ இன்று சொல்லித்தரப்பட்ட ‘உலகநீதி’ யெல்லாம் பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படைக்கே எதிரானதாயிற்றே.. சாத்தான் வேதம் ஓதலாமா?
30-ம் நாள் காலை. தோட்டத்தில் உலவும் அணில் ஒன்றை அவ்வப்போது காட்டுகிறார்கள். என்ன குறியீடோ?! பொன்னம்பலத்தின் புதிய ஹேர்ஸ்டைலை பிக்பாஸ் கொண்டாட முடிவெடுத்து விட்டாரோ, என்னமோ, ‘என் உச்சிமண்டைல சுர்ருங்குது” பாடல் ஒலித்தது.
அது முடிந்ததும் ‘குட்மார்னிங் போஷிகா’ என்கிற குரல் தன்னிச்சையாக காதில் விழுந்தது ஒரு பிரமைதான்.
பொன்னம்பலத்தின் அருகில் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இந்தியில் பேசி பொன்னம்பலத்தைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள்.
‘அடிச்சு சுவத்துல தொங்க விடணும் மாதிரி இருக்கு” என்றெல்லாம் அவர்கள் புறணி பேசியது ஓவர்தான். அவர் சில முறை மன்னிப்பு கேட்ட பிறகும் அது சார்ந்த மனக்கசப்பை வைத்திருக்கத் தேவையில்லை.
இவர்கள் பிறமொழியில் பேசியதால் சைரன் ஒலித்தது. ‘யார் ஆங்கிலத்தில் பேசியது?’ என்று ஒருவருக்கொருவர் விசாரிக்க, இருவரும் தங்களுக்குள் ரகசியமாக சிரித்துக் கொண்டார்கள்.
‘மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு சாப்பாடு பரிமாறிய விஷயத்தில்’ மஹத்துக்கும் வைஷ்ணவிக்கும் உருவான கசப்பு இன்று இன்னமும் பெரிதாக வளர்ந்தது. ஆனாலும் புதிய தலைவரின் பந்தா சற்று ஓவர்தான்.
‘பதவி வரும் போது பணிவு வரவேண்டும்’ என்பதையெல்லாம் மறந்து விடுகிறார். ‘Great power comes with great responsibilities’ என்று வைஷ்ணவி சொன்னது இதைத்தான்.
வைஷ்ணவி படுக்கை விரிப்பை மாற்றிக் கொண்டிருக்கும் போது மஹத் சொன்னதை கேட்கவில்லை போல. ஆசாமிக்கு ‘சுர்’ரென்று கோபம் வந்து ‘நான் சொன்னதை செஞ்சுதான் ஆவணும்.
இல்ல தண்டனை’ என்று உத்தரவு போட “உன்னால என்ன செய்ய முடியும்? நாமினேஷன்தானே, செஞ்சுக்கோ’ என்று கோபமாக கிளம்பினார் வைஷ்ணவி.
‘ஒரு தலைவரா.. பொறுப்பா பேசணுமா இல்லையா.. என்னமோ ஆர்டர் போடறான்’ என்று பிறகு ரம்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். ‘என்ன இவ…இப்படில்லாம் பேசறா.. பதிலுக்கு நானும் ஏதாவது பேசிட்டா பிரச்னையாயிடும்’ என்று மஹத் இன்னொரு புறம் ஜனனியிடம் எகிறிக் கொண்டிருந்தார்.
‘இந்த வாரமாவது கோபப்படாம தலைவரா லட்சணமா இரு. உன் கோபம்தான் உன்னோட பலவீனம். அதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதே” என்று உபதேசம் செய்தார் ஜனனி.
‘நான் மஹத் கிட்ட பேசப்போறேன். நீயும் இரு” என்று ஜனனியிடம் சொல்லிய வைஷ்ணவி பிறகு இதற்காக மஹத்தை அழைக்க.. ‘வர முடியாது’ என்று மஹத் மறுத்தது சிறுபிள்ளைத்தனம். (இது போன்ற ஆசாமிகளை மறுபடியும் பள்ளிக்கு அனுப்புவது ஒருவகையில் பொருத்தம்தான்).
‘பாலாஜி அண்ணா’ என் கிட்ட rude-ஆ பேசறாரு” என்று இன்னொரு பஞ்சாயத்திற்கான அஸ்திவாரத்தை போட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா.
தொடரும்…