ilakkiyainfo

இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்ட ரம்யா!! : அதிர்ச்சியில் உறைந்துபோன போட்டியாளர்கள்!!! (பிக்பாஸ் சீசன் 2 : 35ம் நாள்!!- வீடியோ)

• உங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்… கடும் கண்டனங்கள்!

நேற்று, கமல் முன்னால் சண்டையிட்டு போட்டியாளர்கள் அதிர்ச்சியளித்த விஷயத்தைப் போலவே இன்றைய தினத்தின் அதிர்ச்சி ‘ரம்யாவின் வெளியேற்றம்’ மூலமாக பார்வையாளர்களுக்கு கிடைத்தது.

‘எவருமே யூகிக்க முடியாத திரைக்கதையை எழுதுகிறேன்‘ என்பது போல் ‘பிக் பாஸ் திருவிளையாடல்’ எவ்வித தர்க்கமும் இல்லாத அபத்தமான திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் நித்யா வெளியேற்றப்பட்டதை எவருமே எதிர்பார்த்திருக்க முடியாதிருந்ததைப் போலவே இந்த வாரம் ரம்யா வெளியேற்றப்பட்டதும் எவரும் எதிர்பாராத திருப்பமே.

1_08185.png

பிக்பாஸ் வீட்டிலேயே இதற்கான அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக, ‘தாம்தான் வெளியேற்றப்படுவோம்’ என்று எதிர்பார்த்திருந்த பாலாஜியின் முகத்தில் திகைப்பு வெளிப்படையாக தெரிந்தது.

மக்கள் அளிக்கும் வாக்குகள் மதிக்கப்படுகிறதா அல்லது பிக்பாஸ் குழு தங்களின் வணிக உத்திகளுக்கேற்ப முன்னமே தீர்மானித்தைத்தான் ‘மக்களின் தீர்ப்பு’ என்கிற பாவனையில் வெளியிடுகிறதா என்கிற வழக்கமான சந்தேகம் இம்முறை அழுத்தமாக உருவாகியது.

எவிக்ஷன் பட்டியலில் இருந்த இதர போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது எவ்வித சர்ச்சையிலும் ஈடுபடாதவர், ரம்யா. பொறுமையும் பக்குவமும் நிறைந்தவர்.

தன்னுடைய நெருக்கமான தோழியான வைஷ்ணவி மீது பிழை என்றால்கூட அதை வெளிப்படையாக சொல்லக்கூடிய நேர்மைக்குணம் உள்ளவர்.

எந்தவொரு பிரச்னையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பவர். மற்றவர்களின் குறைகளை நட்பு கலந்த குரலில் நிதானமாக எடுத்துரைப்பவர்.

இவர் வீட்டின் தலைவியாக இருந்த சமயத்தில், போலீஸ்-திருடன்-பொதுமக்கள் விளையாட்டை பாதியிலேயே கைவிட்டது பிழையானதுதான்.

ஆனால், இதை விடவும் அதிக சதவீத பொறுப்பற்ற தன்மையுடன் இயங்கிய மஹத் போன்றவர்கள் எல்லாம் போட்டியில் நீடிக்கும்போது ரம்யா வெளியேற்றப்படுவது அநீதி.

ஒருவகையில் அவருடைய நல்லியல்புகளே அவரது வெளியேற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம். இவரால் எவ்வித பரப்பரப்பான ஃபுட்டேஜ்களும் கிடைக்காது என்று ஒருவேளை தீர்மானித்த பிக்பாஸ் குழு இந்த வெளியேற்றத்தை வலுக்கட்டாயமாக திணித்திருக்கலாம்.

‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’ என்கிற பழமொழியைப் போல் ஆகி விட்டது, ரம்யாவின் வெளியேற்றம்.

‘பொய்யும், புறம் பேசுதலும், சண்டையும் நிகழும் எதிர்மறையான சூழலில் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது’ என்கிற ரம்யாவின் குணாதிசயத்தையொட்டி, இந்த வெளியேற்றம் ஒருவகையில் அவருக்கு விடுதலையே.

(ரம்யாவிடம் நான் உணர்ந்த ஒரே நெருடல், தனது அழகான சுருள் முடியை, வெள்ளை பெயிண்ட் அடித்து மாற்றிக்கொண்டதுதான். இதைத் தவிர டேனி, அனந்த் வைத்தியநாதனை முன்பு கிண்டலடித்துக்கொண்டிருந்த போது அதில் ரம்யாவும் இணைந்து மகிழ்ச்சியடைந்தார்.

இதர துறைகளை விடவும் இசை போன்ற கலை சார்ந்த பணிகள் ஆத்மார்த்தமானவை. குரு மரியாதை என்பது அங்கு முக்கியமானது. இது போன்று சில மெல்லிய பிரச்னைகளைத் தவிர ரம்யாவிடம் பெரிதாக வேறு எந்தக் குறையும் இல்லை).

**

நேற்று, கமல் விடை பெற்று சென்ற பிறகும் வீட்டின் உள்ளே காரசாரமான உரையாடல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. டேனி சத்தமாக பேசும் குணாதியசத்தைப் பற்றி சிலர் ‘சத்தமாக’ விவாதித்துக்கொண்டிருந்தனர்.

“நம்ம ஃபேமிலி உள்ள சகிச்சிப்போம். ஆனா இங்க நாம என்ன ஃபேமிலி மாதிரியா நடந்துக்கறோம்?” என்று சரியான பாயிண்ட்டை முன்வைத்தார், ரம்யா.

இளைய தலைமுறை அடிக்கும் கொட்டங்களைப் பற்றியும் உரையாடல் நகர்ந்தது. “நானும்தான் அவங்களைக் கண்டிக்கறேன். ஆனா நான் சொல்ற முறை வேற.

நீங்க சொல்ற முறை வேற. அவங்களைக் கூப்பிட்டு நிதானமா சொல்லியிருக்கலாம்” என்று மும்தாஜ் சொன்னதைக் கேட்டு “எல்லாம் ஏற்கெனவே அப்படி சொல்லியாச்சு” என்று கோபப்பட்டார், பொன்னம்பலம்.

‘ஞாயிறு வணக்கம்’ என்கிற முகமனுடன் கமல் வந்தார். “மாணவர்கள் டாஸ்க்கில் எந்த அடிப்படையில் ரேங்க் தந்தீர்கள், சற்று விளக்க முடியுமா?” என்று ரித்விகாவிடம் கேட்டார்.

“கொஸ்டின் பேப்பர் மாதிரி எதுவும் தரலை” என்று ரித்விகா சொன்னதும் “பாவம் நமது பிள்ளைகள்” நமது கல்விமுறையின் நடைமுறைப் பிரச்னைகளை ஜாடையாக இடித்துரைத்தார் கமல்.

“ரேங்க் தீர்மானிக்கறது எனக்கு கஷ்டமா இருந்தது. இருந்தாலும் தந்திருந்த ‘கைட்லைன்ஸ்’ படி சென்றாயனுக்கு தர தீர்மானிச்சேன்” என்றார், ரித்விகா.

“அப்ப நம்மாளலயும் முடியுங்க.. ‘நீட்’டி முழக்கி சொல்ல விரும்பல. புரியும்’ என்று அவர் சொல்வதின் மூலம் ‘நீட்’ தேர்வை தமிழக மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என்று சொல்ல விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

(ஆனால் மத்திய அரசு சில விஷயங்களை மாநிலங்களின் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதின் பின்னுள்ள  அரசியல் வேறு. இது கமலுக்கும் தெரியும்.)

“ஆனா சென்றாயனுக்கு முதல் ரேங்க் தந்ததில் பலருக்கு அதிருப்தி இருந்தது போல் தெரிந்ததே.. என்ன மும்தாஜ்?” என்று கமல் கேட்க… “ஆமாம் சார்… அவருக்கு பாடல் வரிகள்லாம் சொல்லித் தர்ற நிறைய டைம் எடுத்துக்கிட்டேன்.

ஆனா அவருக்குத்தான் முதல் ரேங்க். இது அநியாயம்” என்றார் மும்தாஜ். ‘ஹலோ மேடம்.. இது என் படிப்பு, உள்ளிட்ட இதர தகுதிகளுக்கு கிடைத்தது. பாடல் வரிகளுக்கு இல்ல” என்று சென்றாயன் மெலிதாக கோபப்பட்டார்.

“இதர போட்டியாளர்களும் சிறப்பாக செயல்பட்டாலும் ஊக்கமளிப்பதற்காக சென்றாயனை தேர்ந்தெடுத்தேன்” என்று ரித்விகா சொன்னதும் இந்தப் பஞ்சாயத்து ஒருவழியாக ஓய்ந்தது.

 

 

 

 

<!–

Exit mobile version