திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று முன்தினம் நலிவை சந்தித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கருணாநிதி பூரண நலம் பெற வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துச் செய்திகளையும் பிராத்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று பிற்பகலுக்கு பின்னர் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தகவலறிந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். தனி மருத்துவர் கோபால் மற்றும் காவேரி மருத்துவமனையின் மருத்துவ குழுவினரும் வந்தனர்.
அதன்பின்னர், அவரை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.