மன்னார் முருங்கனில் ஆலய வழிபாட்டுக்காக பெற்றோருடன் சென்ற 2 வயது சிறுவன் கடத்தப்பட்டு சுமார் 4 மணி நேரத்தில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முருங்கன் பகுதியில் உள்ள ஆலயத்துக்குப் பெற்றோருடன் 2 வயதுடைய சிறுவன் நேற்று (29) மதியம் ஒரு மணியளவில் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் சிறுவனை ஆலய பகுதியினுள் காணாத நிலையில் பெற்றோர் தேடியுள்ளனர். எனினும் சிறுவனை குறித்த பகுதியில் காணவில்லை.
உடனடியாக பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ததோடு, சிறுவனின் உறவினர் ஒருவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்த நிலையில் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த ஆலயத்திற்கு வந்திருந்த திருக்கோவிலைச் சேர்ந்தவர், வழிபாடு முடிவடைவதற்கு முன் ஆலயத்தில் இருந்து வெளியே சென்றதை பொலிஸார் விசாரணைகளின் மூலம் அறிந்து கொண்டுள்ளனர்.
உடனடியாக திருக்கோவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. வவுனியா பொலிஸார் மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளும் தகவல் வழங்கப்பட்டது.
இதன் போது குறித்த நபர் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து மன்னார் நோக்கிச் செல்லும் பேருந்தில் சந்தேக நபர் சிறுவனுடன் ஏறியதை வவுனியா பொலிஸார் அவதானித்தனர்.
உடனடியாக செயல் பட்ட பொலிஸார் சந்தேகநபரைப் மடக்கிப் பிடித்துக் கைது செய்ததோடு குறித்த சிறுவனையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவன் நேற்று மாலை (30) பெற்றோரிடம் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டார். சிறுவனைக் கடத்தியமைக்கான காரணம் இது வரை வெளியாகவில்லை.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.