காதலித்து தற்கொலைக்கு முயன்ற இளம் ஜோடிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் திருமணம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பீரன்வாலி கிராமத்தைச் சேர்ந்தவர் குர்முக் சிங் (23). ஹிசாரில் உள்ள வித்யூத் நகரைச் சேர்ந்தவர் குசம் (22). இருவரும் ஹிசாரில் உள்ள டிஎன் கல்லூரியில் படித்துவந்தனர்.
அப்போது நட்பாகப் பழகினர். நட்பு காதலானது. கல்லூரி முடித்த பின்னும் தொடர்ந்தது காதல். குடும்பத்தினருக்குத் தெரியாமல் காதலித்து வந்தனர்.
இந்தக் காதல் முதலில் குசம் வீட்டுக்குத் தெரிய வந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிங்கை மறந்து விடும்படியும் அவரை சந்தித்தால் கடும் விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் மிரட்டியுள்ளனர்.
குருமுக் சிங் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் மனமுடைந்தனர்.
இதையடுத்து ஹிசாரில் தேவிபவன் கோயிலுக்கு அருகில் உள்ள சைபர்ஃகேபில் கடந்த 25-ம் தேதி சந்தித்தனர். ’இனி உயிரோடு வாழ வேண்டாம்’ என்று முடிவு செய்தனர்.
இதற்காகவே, முன்கூட்டியே கையோடு கொண்டு வந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தனர். பின்னர் குசன் தனது அண்ணனுக்கு போன் செய்து, நாங்கள் விஷம் குடித்துவிட்டோம். நீங்கள் நன்றாக இருங்கள்’ என்று கூறிவிட்டு துண்டித்தார்.
இதையடுத்து அவரது அண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருகிலுள்ள மருத்துவமனையில் இருவரையும் சேர்த்தார். அவசர சிகிச் சைப் பிரிவில் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு பேரின் குடும்பத்தினரும் மருத்துவமனையில் சந்தித்துக்கொண்டதும் சண்டையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு டாக்டர்கள் அவர்கள் சண்டையை நிறுத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை.
இரண்டு குடும்பத் தினரும் மனம் மாறினர். உடனடியாக இரண்டு பேருக்கும் திருமணத்தை நடத்தி வைத்துவிடலாம் என முடிவு செய்தனர்.
மாலையும் தாலியும் வாங்கி வரப்பட்டது. டாக்டர்கள், நர்ஸ்கள் முன்னிலையில் ஐசியூவிலேயே மாலை மாற்றியது ஜோடி. உடல் நடுங்கியபடியே தாலியை கட்டி னார் மாப்பிள்ளை.
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘குசம் உடல்நிலை முன்னேறிவிட்டது.
அவர் சில நாட்களில் குணமடைந்துவிடுவார். குர்முக் சிங் உடல்நிலை இன்னும் முன்னேற வேண்டியுள்ளது’ என்றார்.