ஜெனீவா பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அரசாங்க தரப்பில் கலந்துகொண்டர் H L De Silva சமஷ்டி என்பது விஷம் நிறைந்தது எனத் தெரிவித்த கருத்துகள் பெரும் புயலைக் கிளப்பியிருந்தன.
பாலசிங்கம் அவரது கருத்தினை அர்த்தமற்றது என்றார். அதனைத் தொடர்ந்து அரச தரப்பினர் அக் கருத்திலிருந்து தம்மைத் தூர வைத்திருந்தனர்.
2006ம் ஆம் ஆண்டு மார்ச் மாத நடுப்பகுதியில் புலிகள் தரப்பினர் கண்காணிப்புக்குழு மூலமாக தகவல் ஒன்றினை அரசிற்கு அனுப்பினர்.
அதில் அரச கட்டுப் பகுதிகளில் அரசியல் காரியாலயங்களை மீண்டும் திறக்க விரும்புவதாக தெரிவித்தனர். இவை 2005ம் ஆண்டில் காணப்பட்ட வன்முறைச் சூழல் காரணமாக மூடப்பட்டன.
இருப்பினும் கிழக்கில் நிலமைகள் மிக மோசமாகக் காணப்பட்டன. கருணா தரப்பினர் மிகவும் சுதந்திரமாகவே வன்முறையை கட்டவிழ்த்தனர்.
அத்துடன் தமது கட்சியாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கென காரியாலயங்கள் திறக்கப்பட்டன. இதற்குப் பதிலாக புலிகள் கர்த்தால் அனுஷ்டிக்கும்படி மக்களைக் கோரினர்.
கடைச் சொந்தக்காரர்கள் தம்மை நோக்கி யார் வருகிறார்கள்? எனக் கண்காணித்து அதற்கு ஏற்றவாறு திறப்பதும், பூட்டுவதுமாக இருந்தனர்.
ஏரிக் சோல்கெய்ம் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டமையால் நோர்வே பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கென ஜொன் கன்சன் போவர் (Jon Hanssen-Bauer) அவர்களை விஷேட தூதுவராக நோர்வே நியமித்தது.
இவர் சோல்கெய்ம் உடன் லண்டனுக்குச் சென்று பாலசிங்கத்தைச் சந்தித்தார். இச் சந்திப்பின்போது பாலசிங்கத்தின் கவனம் துணைப்படைகள் குறித்ததாக இருந்தது.
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பதாக துணைப்படைகளின் ஆயுதங்கள் களையப்படவேண்டுமெனவும் அவ்வாறு மேற்கொள்ளப்படாவிடின் பேச்சுவார்த்தைகள் இவை பற்றியதாக மட்டுமே அமையுமென வற்புறுத்தினார்.
அக் கால இடைவெளியில் 8 கடற்படையினர், 5 கடற் புலிகள் கொல்லப்பட்டிருந்தனர். இதனைக் காரணமாக வைத்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவதற்கு கொழும்பு மூலமாக செல்வதற்கான பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகளை புலிகள் எழுப்பினர்.
இத் தருணத்தில் பஸில் ராஜபக்ஸ லண்டனில் இருந்ததால் அவருடனும் புதிய தூதுவர் பேசினார்.
அதனைத் தொடந்து முதன் முதலாக இலங்கை சென்றிருந்த புதிய விஷேட தூதுவர் 2006ம் ஆண்டு ஏப்ரல் 6ம் திகதி புலிகளை கிளிநொச்சியில் சந்தித்த பின் வெளியிட்ட கருத்தில் புலிகள் ஜெனீவாவிற்கு வருவதற்கு முழுமையாக ஆதரவாக இல்லை எனவும், பதிலாக அரச தரப்பினர் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அப்பால் ஜனநாயகம், பன்மைத்துவம், மனித உரிமை பற்றியும் பேசத் தயாராக இருந்தனர் எனவும், ஆனால் அப் புள்ளியை நோக்கி எவ்வாறு செல்லவுள்ளனர்? என்பது தெளிவற்றதாக இருந்தது என்றார்.
நோர்வே தரப்பினர் இலங்கையை விட்டு வெளியேறியதும் மீண்டும் பழிக்குப் பழி என நிலமைகள் மாறின.
தமிழர் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்படவிருந்த புலி ஆதரவாளர் விக்னேஸ்வரன் 2006ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 5 நாட்களில் மட்டும் 30 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் கண்காணிப்புக் குழுவினருக்கும் பாதுகாப்பு அமைச்சிற்குமிடையே காரசாரமான வாதங்கள் ஏற்பட்டன.
இரு தரப்பாரும் போர் நிறுத்த ஒப்பந்த்தினைச் செயற்படுத்த விசுவாசத்துடன் செயற்படவில்லை எனவும், இரு தரப்பாரும் ஒத்துழைத்தால் மாத்திரமே பிரச்சனைகளைத் தீர்க்க வாய்ப்பு ஏற்படும் எனவும், தற்போதுள்ள சூழலில் மாற்றங்கள் ஏற்படாத வரை நோர்வேயினால் மிகச் சிறிய அளவே பங்களிக்க முடியும் என கடித மூலம் சோல்கெய்ம் தெரிவித்தார்.
வன்முறைகள் மேலும் அதிகரித்தன. 10 நாட்களில் 70 கொலைகள் இடம்பெற்றன. திருகோணமலையிலுள்ள மரக்கறிச் சந்தையில் பொது மக்களைக் குறி வைத்து 2006ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி குண்டு வெடிப்பு இடம்பெற்றது.
இரு சாராருமே உரிமை கோரவில்லை. ஆனால் புலி ஆதரவு ‘தமிழ் நெற்’ என்ற இணையத் தளம் இத் தாக்குதல்களைப் புலிகள் நடத்தியதாக கூறுவது தவறு எனவும், புலிகளுடன் சம்பந்தப்படாத ‘மக்கள் படை’ இனர் உணர்ச்சி வசப்பட்டு நிகழ்த்தினர் எனவும் விளக்கம் அளித்தது.
அதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி தமிழ்ச்செல்வன் நோர்வே தூதுவருக்கு எழுதிய கடிதத்தில் தமது போக்குவரத்து பாதுகாப்பு திருப்தியாக இல்லை என்பதால் தம்மால் ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.
கண்காணிப்புக் குழுவினர் மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். இரு சாராருமே பொது மக்களின் நலனுக்காக செயற்படவில்லை.
இந் நிலையில் இணைந்து பொது நோக்கத்தில் எவ்வாறு செயற்பட வைப்பது? என எண்ணினர். நோர்வேயின் புதிய விஷேச தூதுவர் இரு தரப்புடனும் பேசிய போதிலும் நிலமைகள் சாதகமாக இல்லை.
மறு பக்கத்தில் வன்முறைகள் தொடர்ந்தன. கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஜெனரல் பொன்சேகாவைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குலை நடத்தினார்.
மிகவும் பாதுகாப்பு நிறைந்த ராணுவ உயர் காரியாலயத்தில் இது நடந்தது. ஜெனரல் படுகாயமடைந்தார். பாதுகாப்பாளர்கள் படுகாயமடைந்ததோடு, அருகிலிருந்த பொதுமக்கள் 9 பேர் மரணமடைந்தனர்.
நோர்வே தரப்பைச் சார்ந்த கண்காணிப்புக் குழுவின் உல்வ் கென்றிஸன் (Ulf Henricsson) கோதபய ராஜபக்ஸவுடனான தனது அனுபவங்களை இவ்வாறு தெரிவிக்கிறார்.
ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தைகள் ஏன் நடைபெறாமல் போயின? ஏன்பதற்கு கோதபய பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை. அவருக்குப் பொருத்தமில்லாத தருணங்களில் கட்டுக்கடங்காத கடும் கோபம் எழுகிறது.
ஒருமுறை கண்காணிப்புக் குழு சட்ட விரோத கொலைகளுக்கு அரச தரப்பே காரணம் என அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. அவர் என்னைத் தனது வீட்டிற்கு அழைத்து அவ் அறிக்கையை வாபஸ் வாங்கும்படி கோரினார்.
எனது அபிப்பிராயப்படி அவை சரியானவை என்பதால் என்னால் வாபஸ் வாங்க முடியாது என உறுதியுடன் தெரிவித்தேன்.
தனது கடுமையான தொனியில் சத்தம் வைத்தார். தனது வீட்டிலிருந்து என்னை வெளியேறுமாறு கோரினார். சிறிது நேரத்தின் பின்னர் அவரது உதவியாளர்கள் அவரைச் சாந்தப்படுத்தினர்.
பின்னர் ஒரு மூலையிலிருந்து தனது கைத் தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்தார். ஏனையோர் என்னுடன் பேச்சுக்களைத் தொடர்ந்தனர்.
என்னைப் பொறுத்த வரையில் இவரே பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைவதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்கள் எதிர் விளைவுகளைத் தரத் தவறவில்லை. திருகோணமலையிலுள்ள புலிகளின் முகாம் விமானப் படையால் தாக்கப்பட்டது.
தாக்குதல்களைத் தடுப்பதற்கான உபாயம் இது என அரச தரப்பு நியாயப்படுத்தியது. பொது மக்கள் மரணமடைவது தவிர்க்க முடியாதது எனவும் விளக்கம் அளித்தது. இத் தருணத்தில் நோர்வே விஷேட தூதுவர் கொழும்பில் இருந்தார். சரத் பொன்சேகா மீதான தாக்குதலுக்கான பதிலடி என அரசு கூறியது.
இச் சம்பவம் தொடர்பாக இந்தியப் பத்திரிகையாளர் தெரிவிக்கையில் ராஜபக்ஸவை விட சரத் பொன்சேகா மூன்று மடங்கான தேசியவாதியாகும்.
அதனால்தான் அவர் மீது இலக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பயன்படுத்தும் அளவிற்கு செல்வது நிலமைகளின் மோசமான தரத்தை உணர்த்தியது.
இதனை அரசாங்கம் மிக இலகுவாக பயன்படுத்தி மக்கள் மனதில் விஷத்தைப் பரப்ப வாய்ப்பு ஏற்பட்டது. 2006ம் ஆண்டு வரை ராணுவத்திலிருந்து வெளியேறுவோர் தொகை மிக அதிகமாக இருந்தது.
அவ்வளவுக்கு ராணுவத்தில் உற்சாகம் குறைந்திருந்தது. புலிகளோடு மோத யாரும் தயாராக இல்லை. 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொலனறுவ பகுதிக்கு அண்மையிலிருந்த கருணா தரப்பினரின் முகாம் தாக்கப்பட்டு அங்கிருந்த 10 உறுப்பினர்கள் மரணமாகினர்.
(Sri Lankan government official Palitha Kohona, (R) speaks with Norwegian Special envoy Jon Hanssen-Bauer at the Peace Secretariat in Colombo, 02 October 2006, during talks on the troubled peace process.)
இச் சம்பவங்களைத் தொடர்ந்து அடுத்த 10 தினங்களில் நோர்வே விஷேட தூதுவர் கன்சன் போவர் (Hanssen-Bauer), அரச தரப்பைச் சார்ந்த பாலித கோகன ஆகியோர் ஸ்பெயினிலுள்ள பாஸிலோன என்ற இடத்தில் சமாதானப் பேசச்சுவார்ததைகளின் நீண்ட கால வேலைத் திட்டம் பற்றி விவாதித்தனர்.
புதிய நோர்வே விஷேட தூதுவர் அரச தரப்புடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தியிருந்தார்.
அதன் காரணமாகவே இவர்கள் ஸ்பெயினில் சந்திக்கும் அளவிற்கு நிலமைகள் மாறியிருந்தன. இருப்பினும் இது நீடிக்கவில்லை.
நாடு திரும்பிய பாலித கோகன இன் போக்குகள் மிகவும் கடின நிலைக்குச் சென்றன. இச் சந்திப்பைத் தொடர்ந்து பத்திரிகையாளர் முன்னிலையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தமது சந்திப்பை தரம் தாழ்த்துவதாக அமைந்ததாக விஷேட தூதுவர் தெரித்தார்.
சமாதான முயற்சிகள் தொடர்பாக மகிந்த ராஜபக்ஸ இன் அணுகுமுறைகள் குறித்து அமெரிக்க தூதுவரின் அபிப்பிராயம் இவ்வாறு இருந்தது.
அதாவது சமாதானம் தேவை என்பதில் அவர் விசுவாசமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதனை அடைவது எப்படி? என்பதில் தெளிவற்று உள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஆழமான உணர்வுகளை அவர் புரிந்துகொண்டுள்ளதாக காணவில்லை. ஆழமான மாற்றங்களின் அவசியத்தை அவர் குறைத்து மதிப்பிடுவதாக தெரிகிறது.
மகிந்த ராஜபக்ஸ என்ற சிங்களவரால் மட்டுமே பேரினவாத சிந்தனையுள்ள சிங்கள மக்களைக் கையாள முடியும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
முன்னைய தலைவர்கள் பிரச்சனையைத் தீர்ப்பதில் மக்கள் நல்லெண்ணத்தைப் பெற முடியாமல் போனதற்கான காரணங்களையும் அவர் அறிவார்.
நல்லெண்ணம் என்பது முழமையான நல்லெண்ணம் அல்ல. ஜே வி பி இனரை தனது பக்கம் திருப்புவதில் அவர் எடுத்துள்ள முயற்சிகள் யாவும் வியர்த்தமாகிப் போயிருந்தன என தூதுவர் அபிப்பிராயம் இருந்தது.
நோர்வே விஷேட தூதுவருக்கும், பாலித கோகனவிற்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த மறு நாளே அதாவது 2006ம் ஆண்டு மே 11ம் திகதி விடுமுறைக்குச் சென்றிருந்த 700 ராணுவத்தினரை ஏற்றி வந்த கப்பலை தற்கொலைக் கடற்புலிகளின் வெடிமருந்துகள் நிரம்பிய கப்பல் மோதுவதற்குத் தயாராக இருந்தது.
கடற்படைக் கப்பலுக்கு பாதுகாப்பாக வந்திருந்த தாக்குதல் விசைப்படகினர் நடத்திய பல மணித் தாக்குதலின் பின்னர் பெரும் மரணம் தவிர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானப்படையினர் இரணைமடுக் குளத்திற்கு அருகாமையிலிருந்த புலிகளின் விமான ஓடு பாதையைத் தகர்த்தனர்.
விடுமுறையிலிருந்து கடமைக்குக் கொண்டு செல்லப்பட்ட கப்பல் கண்காணிப்புக் குழுவின் கொடியுடன் சென்றது.
புலிகளின் தாக்குதலைத் தவிர்க்கவே இம் முடிவு எடுக்கப்பட்டது. புலிகள் முன்னரும் இக் கொடிக்கு மதிப்பு அளித்து தாக்குதலைத் தவிர்த்திருந்தனர்.
இத் தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முற்றாக மீறுவதாகவும், அத்துடன் அரசு அல்லாத புலிகள் அமைப்பு கடலில் செயற்பட எந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவித்தது.
இச் செய்தி காரணமாக புலிகள் தரப்பிலிருந்து கடுமையான கண்டனம் கிளம்பியது. போர் நிறுத்த ஒப்பந்தம் அரசு அல்லாத தரப்பினருக்கும் அரசுக்குமிடையேயான ஒப்பந்தம் எனக் கூறுவது தவறு எனவும், அது இரு சமமான தரப்பாருக்கு இடையேயான ஒப்பந்தம் என தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்திருந்தார்.
இரு தரப்பாரும் சமமானவர்கள் என்பது அவ் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந் நிலமைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. எவ்வாறான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டது?
(அடுத்த வாரம் தொடரும்)
-சிவலிங்கம்-
Ulf Henricsson அளித்த விசேட செய்தி: http://www.thesundayleader.lk/archive/20060514/interviews.htm