புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது.
பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேச்சு நடத்தினார் ஜனாதிபதி பிரேமதாசா.
பேச்சுவார்த்தையின்போது ஈரோஸ் எம்.பி.கள் குழுவுக்கு தலைமை தாங்கியவர் வே.பாலகுமார். ஈரோஸ் எம்.பி.கள் சார்பாக பாலகுமார் முன்வைத்த முக்கிய கோரிக்கை, ”விடுதலைப் புலிகளுடன் அரசு பேச்சு நடத்தவேண்டும் ” என்பது.
அக்கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக இணக்கம் தெரிவித்தார் பிரேமதாசா.
செய்தி ஊடகங்கள் மூலம் பிரேமதாசா, ஈரோஸ் எம்.பி.கள் பேச்சுவார்த்தை பற்றிய செய்திகளும் காணப்பட்ட இணக்கங்களும் வெளியாகின.
தமது முக்கிய கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி பிரேமதாசா இணக்கம் தெரிவித்ததை அடுத்து ஈரோஸ் எம்.பி.கள் பாராளுமன்றம் செல்ல முடிவு என்றும் செய்திகள் தெரிவித்தன.
ஈரோஸ் எம்.பி.கள் கேட்டுக்கொண்டதால்தான் புலிகளுமன் பேசுவதற்கு பிரேமதாசா முன்வந்ததுபோல காட்டத்தான் இந்த நாடகம் எல்லாம் நடந்தேறின.
பிரேமதாசாவின் அரசியல் விவேகத்திற்கு பல உதாரணங்கள்ச் சொல்லலாம். அதில் ஒன்றுதான் மேற்கண்ட அரசியல் நாடகம்.
1989ல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஈரோஸ் தலைவர் பாலகுமார் வன்னிக் காட்டுக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தார் அல்லவா.
அச் சந்திப்பில் பிரபாகரனுக்கு கொடுத்த உத்தரவாதத்தை கடைசிவரை பாலகுமார் மீறவில்லை. பாராளுமன்றத்திகு தெரிவான பின்னரும் புலிகளுடன் இணைந்தே முடிவுகளை மேற்கொண்டார்.
பாலகுமார்மீது பிரபாகரனுக்கு நம்பிக்கை ஏற்பட இத்தகைய அணுகுமுறைகளும் ஒரு காரணம் எனலாம். அதனால்தான் பின்னர் பாலகுமார், பரராஜசிங்கம் ஆகியோரை தம்முடன் சேர்த்துக்கொண்டனர் புலிகள்.
பாராளுமன்ற பயன்பாடு
பாராளுமன்றத்தால் தமிழ் பேசும் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுக்க இயலாது என்பது தெளிவு.
எனினும் தமிழ் மக்களிடம் தமக்குள்ள செல்வாக்கை எடுத்துக் காட்டவும், தவறான சக்திகள் பாராளுமன்றம் சென்று தங்களை தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்வதை தடுக்கவும், வேறு சில சட்டபூர்வ வாய்ப்புக்களை பயன்படுத்தவும் பாராளுமன்றம் செல்வதாகவே கூட்டணி முதல் இன்றை பாராளுமன்ற தமிழ்க் கட்சிகள் வரை கூறிவந்தன.
ஆனால் தற்போது தமிழ்க் கட்சிகள் பாராளுமன்றம் செல்வதுதான் சகல பிரச்சனைக்கும் தீர்வு பெற்றுத்தரும் வழி என்று காண்பிக்க முற்படுகின்றனர்.
பாராளுமன்றத்திற்கு செலவதும், அங்கு உரையாற்றுவதும்தான் இனவிடுதலைக்கான தீவிரப் பணி என்பது போல மக்களை நம்பகைவ்கவும் முயன்று வருகின்றனர்.
ஆனால் ஈரோஸ் தலைவர் பாலகுமாரும், ஈரோஸ் எம்.பி.களும் மேற்கொண்ட அணுகுமுறைதான் பாராளுமன்ற பயன்படுத்தல் என்பதின் உண்மையான அர்த்தமாகும்
புலிகளுக்கு பயந்துதானே செய்தார்கள் தாமாகச் செய்தார்களா? என்று கேள்வி எழலாம்.
பயத்தையும் பதவி ஆசை வென்றுவிடும் என்பதை நாம் அனுபவத்தில் கண்டு வருகிறோம். ”அரசும், புலிகளும் பேசவேண்டும்” என்று கூட்டணி எம்.பி.கள் உதட்டளவில் கூறுவது பயத்தின் வெளிப்பாடுதான்.
ஆனாலும் புலிகள் எதற்காக போராடுகிறார்களோ அந்த இலட்சியத்திற்கு முற்றிலும் மாறான தீர்வு யோசனைக்கு ஆதரவளிப்பதும், தாமாகவே வடக்கு -கிழக்கின் சில பகுதிகளை தாரை வார்ப்பதையும் காண்கிறோம்.
கூட்டணியின் செயலதிபர் இரா.சம்பந்தன் எம்.பி.யாக முன்னர் புலிகளின் அனுமதியைப் பெற பல வழிகளில் முயன்றார். பிரபாகரனிடம் இருந்து கடைசிவரை ‘சிக்னல்‘ கிடைக்கவே இல்லை. இறுதியில் ஆசை வென்றது. எம்.பி.யாகப் பதவி ஏற்றார்.
ஈரோஸ் எம்.பி.களும் நினைத்திருந்தால் அரசின் பாதுகாப்பை பெற்றுக் கொண்டு எம்.பி.களாக தொடர்ந்து இருந்திருக்கலாம். பிரபாவுக்கு கொடுத்த வாக்குறிதியை பாலகுமார் மீறியிருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை.
அமுதருக்கு தகவல்
ஈரோஸ் எம்.பி.கள் பாராளுமன்றம் செல்லாமல் இருந்த விவகாரத்தில் இந்திய அரசும் தலையிட்டது. ஈரோஸ் தலைவர்களில் ஒருவரான சங்கர் ராஜீ இந்திய ”றோ” உளவுப் பிரிவுக்கு நெருக்கமானவர்.
”ஈரோஸ் எம்.பி.களை பாராளுமன்றம் செல்லவைக்கிறேன்” என்று ”றோ” வுக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு கொழும்பு வந்தார் சங்கர் ராஜீ.
பாலகுமாரிடம் எப்படியெல்லாமோ வலியுறுத்திப் பார்த்தார் சங்கர் ராஜீ. பாலகுமார் அசைந்தே கொடுக்கவில்லை.
பிரேமதாசா
இறுதியாக பிரேமதாசாவுடன் நடந்த சந்திப்பின்னர்தான் பாராளுமன்றம் செல்லும் முடிவை எடுத்தார் பாலகுமார். புலிகளின் சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவுதான் அது.
ஈரோஸ் எம்.பி.கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார் கூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கம்.
தேசியப் பட்டியல் மூலம் அமிர்தலிங்கம் பாராளுமன்றம் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதே புலிகளிடமிருந்து தகவல் அனுப்பப்பட்டது.
”பாராளுமன்றம் செல்ல வேண்டாம். இதுதான் கடைசிச் சந்தர்ப்பம். இந்தியாவுக்கு திரும்பிச் சென்றுவிடுங்கள்|” அதுதான் பிரபா சொல்லி அனுப்பிய தகவல்.
இத் தகவல் அமுதருக்கு நேரடியாகச் சொல்லப்படவில்லை. முன்னாள் யாழ் தொகுதி எம்.பி.வெ.யோகேஸ்வரன் மூலமாகவே தெரிவிக்கப்பட்டது.
யோகேஸ்வரன் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார். அதேசமயம் அமுதர் மீதும் பாசம் கொண்டிருந்தார்.
யோகேஸ்வரன் அத் தகவலை அமுதருக்கு தெரிவித்தார். ”அவர்கள் சொல்லி நான் என்ன கேட்பது? எங்கள் பாதையில் அவை ஏன் குறுக்கிடவேஒ;டும்?” | என்று அமுதர் யோகேஸ்வரனிடம் கேட்டாராம்.
தேசியப் பட்டியல் மூலம் அமிர்தலிங்கம் பாராளுமன்றம் சென்றார்.
வன்னிக்காட்டில் இருந்த பிரபாகரன் அமிர்தலிங்கத்தாருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறித்தார்.
அரசுடன் பேச்சு நடக்கும்போது அமுதரையும் போடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. புலிகளின் உளவுப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த விச்சுவிடம் நடவடிக்கைகடகான பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.
அரசு, புலிகள் பேச்சு கொழும்பில் ஆரம்பமாக முன்னரே அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ம் திட்டம் தீட்டடப்பட்டுவிட்டது.
பிரேமா தீவிரம்
புலிகளுடன் இரகசியத் தொடர்பு ஏற்பட்டுவிட்டதால் ஜனாதிபதி பிரேமதாசா உற்சாகமாகினார்.
”இந்தியப் படையை வாபஸ் பெறும் விடயத்தில் இலங்கையும், இந்தியாவும் பேச்சு நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம்” என்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியிருந்தார்.
நெத்தியடியாக பிரேமதாசாவின் கருத்து வெளியானது: ”ஜீலை மாதத்துக்குள் (89) இலங்கையிலிருந்து இந்தியப்படை வெளியேறாவிட்டால் இராணுவ முகாம்களுக்குள் முடக்கப்படும்” என்று அறிவித்தார் பிரேமதாசா.
பிரேமதாசாவைத் தவிர வேறொருவரால் நிச்சயமாக அப்படியொரு துணிச்சலான அறிவிப்பை வெளியிட்டிருக்க முடியாது.
இந்திய எதிர்ப்பில் முன்னணியில் நிற்ற ஜே.வி.பி.யினரைவிட பிரேமதாசா முன்னணியில் நிற்க ஆரம்பித்தார்.
அதேவேளை, தென்னிலங்கையில் ஜே.வி.பி.யினரை ஒழித்துக் கட்டும் வேட்டைகளும் நடந்து கொண்டிருந்தன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ரஞ்சன் விஜயரத்னவின் அணுகுமுறைகள் முரட்டுத்தனமானவை. ”அடிக்கு அடி தான் சரி” என்று அடிக்கடி ரஞ்சன் கூறுவது வழக்கம்.
பிரேமதாசாவுக்கும், ரஞ்சனுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருந்தது.
பிரேமதாசாவுக்கு அரசியலில் சகல தந்திரங்களும் அத்துப்படி. அணைக்க வேண்டிய நேரத்தில் அணைத்துக்கொள்வார்.
ரஞ்சனுக்கு அந்த சூட்சுமம் எல்லாம் தெரியாது. நேரடி நடவடிக்கைதான்.
ஜே.வி.பி. பணிந்து வந்தால் பேச்சு நடத்தலாம் என்பது பிரேமதாசாவின் எண்ணம். ஜே.வி.பி.யை ஒழித்துக் கட்டியே தீரவேண்டும் என்பது ரஞ்சனின் எண்ணம்.
படையினரும், பொலிசாரும் ஜே.வி.பி.யினரை ஒடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக்க ரஞ்சன்தான் ஊக்குவிப்பு வழங்கிவந்தார்.
தென்னிலங்கை வீதிகளில் பிணங்கள் டயர்களுடன் டயர்களாக எரிந்தன.
ஜே.வி.பி. என சந்தேகிக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மறுபேச்சே இல்லாமல் டயர்களில் போடப்பட்டனர்.
புலிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கும் செய்திகள் சிங்கள மக்களுக்கும் புதிய விஷயமாக இருந்தன.
இந்தியப் படை வெளியேற வேண்டும் என்ற அபிப்பிராயம் சிங்கள மக்களிடம் பரவலாக இருந்தது. அதனால் இந்தியப் படைக்கு எதிராக போராடிய புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு எதிர்ப்பு எதுவும் எழவில்லை.
ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் புலிகளின் ஆதரவைக் கோரி வன்னிக்கு சென்றவர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர்.
”இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை இரத்துச் செய்வோம்” என்றும் தேர்தல் பிரசாரத்தில் கூறியது சுதந்திரக் கட்சி.
எனவே இந்தியப் படைக்கு எதிரான பிரேமதாசாவின் நடவடிக்கைகளையோ, பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாகவோ எதிரான கருத்துக்கள் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்தனர் சுதந்திரக் கட்சியினர்.
பிரேமதாசாவுக்கு சூழ்நிலை கைகொடுத்தது. சூழ்நிலை அமைந்தும் அதனை சரிவரப் பயன்படுத்த முடியாமல் இருந்தவர்கள், இருப்பவர்கள் பலர் உண்டு.
ஆனால் பிரேமதாசா சூழ்நிலையை தனக்கு சாதமாக்கிக் கொள்ளத் தெரிந்தவர். இந்த விடயத்தில் பிரபாகரனுக்கும், பிரேமதாசாவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.
கொழும்பில் புலிகள்
புலிகளுடன் பேச்சு நடத்துவது என்பது முடிவாகிவிட்டது தென்னிலங்கையில் அதற்கு எதிர்ப்பும் இல்லை என்று தெரிந்துவிட்டது. பிறகென்ன தயக்கம்?
மே மாதம் மூன்றாம் திகதி இரண்டு பெல் ரக ஹெலிக்கொப்டர்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டன.
முல்லைத்தீவுக் காட்டுப் பகுதியில் மாலை 3.10 மணியளவில் இரண்டு ஹெலிக்கொப்டர்களும் தரையிறங்கின.
ஹெலிகள் இரண்டும் தரையிறங்கிய இடத்தில் புலிக்கொடிகள் பறந்து கொண்டிருந்தன.
30ற்கு மேற்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் அணிவகுத்து நின்று சல்யூட் பண்ணினார்கள்.
பிறிதொரு நாட்டுக்குள் சென்று விட்டதுபோல் உணர்ந்தனர் ஹெலியில் சென்ற அரசு தரப்பினர்.
22 நிமிடங்களின் பின்னர் புலிகள் இயக்க பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு காட்டில் இருந்து கொழும்புக்கு திரும்பியது ஹெலிக்கொப்டர்.
அன்ரன் பாலசிங்கம், அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம், திலகர், யோகி, மூர்த்தி எட்பட பத்துப்பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு ஹெலியில் கொழும்பு வந்து இறங்கியது.
ஏ.கே.47 துப்பாக்கிகள் சகிதம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தங்கள் பிரமுகர்களுக்கு பாதுகாப்பாக ஹெலியிலேயே வந்தனர் கொமாண்டோ சீருடையுடன் காணப்பட்டனர்.
(தொடர்ந்து வரும்)
அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்
தொகுப்பு: கி.பாஸ்கரன்
கொழும்பு ஒப்பந்தம்
அன்புள்ள வாசகர்களே
இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் இத் தொடரில் நான் சில கருத்துக்களை தெரிவித்திருந்தேன்.
இந்தியாவின் நலன் என்பதை முதன்மைப் படுத்தியதாகவே அந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது என்று ஆணித்தரமாக குறிப்பிட்டு வந்தேன்.
இந்தியாவுக்கு எதிரான உணர்வுடன் இத்தொடர் எழுதப்படுவதாக சிலர் முத்திரை குத்தினார்கள்.
இந்தியாவுடன் நட்பு வேண்டும். இந்தியாவின் நட்பு அவசியம் என்பதே என்கருத்து. ஆனால் என் கருத்து என்பதும், வரலாறு என்பதும் ஒன்றல்ல.
எனது கருத்துக்கு ஏற்ப நடந்த நிகழ்ச்சிகளுக்கு சாயம் பூச இயலாது. இந்தியா நண்பன் என்பதற்காக, அதன் அணுகுமுறைகள் யாவுமே சரியாக இருந்தன என்று ஊதுகுழல் வாசிக்கவும் முடியாது.
தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடந்தவற்றை திரிபுபடுத்தி, நடக்கப்போகின்றவற்றுக்கு நேர் எதிரான கணிப்புக்கூறி பழக்கப்பட்டவர்களுக்கு முரசின் அணுமுறை புரியாது.
அதுபோல அதில் இடம் பெறும் இத்தொடரின் தன்மையும் விளங்காது. அதுதான் மிகவும் குழம்பிப்போய் ஆள் ஆளுக்கு ஒவ்வொரு விதமாக பொறாமை காட்டி வருகிறார்கள் போகட்டும் இயலாதவர்கள் அவர்கள்.
இந்தியத் தூதராக இருந்தவர் ஜே.என்.திக்ஷித். அவர் எழுதிய ”கொழும்பில் பணி” (Colombo Assignment) என்ற புத்தகம் வெளியாகியுள்ளது.
இப் புத்தகம் வெளியாக முன்னரே இத் தொடரில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிக் கூறிய கருத்துக்களை திக்ஷித் எழுதிய புத்தகம் தெளிவாக்குகிறது. முரசு கூறும் முன்னர், காலம் அதனை உறுதி செய்யும் பின்னர்.
திக்ஷித் எழுதிய புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்:
”நம்பிக்கையும் நிராசையும் மாறி மாறி கைகாட்டிய அந்த நீண்ட நெடிய பேச்சு வார்த்தை ஒரு வழியாக முடிந்தது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஜீலை 29 அன்று ராஜீவ் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் தயாராகிவட்டன.
இந்தியா இந்த விவகாரத்தில் நேரடியாக பங்கு கொண்டாலொழிய இலங்கை அரசும் தமிழ்க் குழுக்களும் (குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு) எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டார்கள், நீடித்த சமரசத்திற்கும் ஒத்து வரமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்திருந்தார் ராஜீவ்.
ஜெயவர்த்தனேயின் நோக்கங்கள் பற்றி ராஜீவுக்கு சந்தேகம் இருந்தது. விடுதலைப்புலிகள் மற்றும் இதர தமிழ்க் குழுக்களின் பிடிவாதப் போக்கும் அவருக்கு ஏமாற்றமளித்தது. பெங்களுரில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போது நாம் எடுத்த முயற்சி தோற்ற பிறகு நான் ராஜீவிடம் ஒரு யோசனை கூறினேன்.
இலங்கைப் பிரச்சனை தீர வேண்டுமென்றால் இந்தியா மத்தியஸ்தர் என்ற நிலையிலிருந்து மாறி அமைதியைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதம் தரக்கூடிய வகையில் பங்கு பணியாற்ற வேண்டும் என்று கூறினேன்.
இன, மத, மொழி அடிப்படையில் ஸ்ரீலங்காவில் தனியாக தமிழர் நாடு அமைக்கச் சொல்லி புலிகள் அமைப்பு வற்புறுத்துவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் பிரதேச ஒற்றுமைக்கும் கூட எதிர்மறையான தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எனக்கு தீர்மானமாக ஒரு கருத்து இருந்தது.
தமிழர்களின் நலனை முன்னிட்டு விடுதலைப் புலிகள் குரல் எழுப்புவதில் நியாயம் இருந்தாலும் அந்த அமைப்பு எதேச் சாதிகாரப்போக்கு கொண்டது என்பதே என் கருத்து.
எந்தவிதமான கருத்து வேற்றுமைகளையும் தீர்த்துக்கொள்வதற்கு வன்முறையை நாடும் இயக்கம் அது. அரசியல் களத்திலும் யுத்த களத்திலும் புலிகளின் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகே நான் இந்த முடிவுக்கு வந்தேன்.
புலிகள் சமரசத்திற்கு ஒப்புக் கொண்டது குறித்து என்னுடைய சகாக்களான ஐ.பி.இயக்குநர் கோபி அரோரா, அயலுறவுச் செயலர் குல்தீப் சஹ்தேவ் ஆகியோருக்கு சந்தேகம் இருந்தது.
எனக்கும் அதுபற்றி ஓரளவு கவலை இருந்தது.
எனவே ஆலோசனைக்கூட்டம் ஒன்றில் நான் இரண்டு கேள்விகளை எழுப்பினேன்.
எம்.ஜி.ஆரும் தமிழகத் தலைவர்களும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வார்களா? என்பது முதல் கேள்வி.
ஓப்பந்தம் கையெழுத்தான பிறகு விடுதலைப்புலிகள் அதிலிருந்து பின்வாங்கினால் ஒப்பந்தப்படி நடக்கும்படி அவர்களை நாம் நிர்ப்பந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அப்படி நடந்தால் நம்மால் அதை வெற்றிகரமாகச் செய்ய முடியுமா? என்பது என் இரண்டாவது கேள்வி.
எம்.ஜி.ஆரிடமும் மற்ற தமிழகத் தலைவர்களிடமும் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாகவும் ராஜீவ் கூறினார்.
புலிகளோடு மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வி பற்றி அப்போதைய இராணுவ தலைமை தளபதி கே.சுந்தர்யின் கருத்தைக் கேட்டார்.
ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டபிறகு அதிலிருந்து பின் வாங்கி இந்தியாவுடனோ இலங்கையுடனோ மோதும் தெம்பு விடுதலைப் புலிகளுக்கு இருக்காது என்று சுந்தர்ஜி கூறினார்.
அப்படியே இராணுவரீதியாக மோத புலிகள் முடிவு செய்தாலும் இரண்டே வாரங்களில் அவர்களை எடுக்கிவிட முடியும் என்றும் அவர் கூறினார்.
ஜெயவர்த்தனே இந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்னுடைய பிரதானமான பணி என்று ராஜீவ் என்னிடம் சொன்னார்.
ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரை ஜெவர்த்தனே சந்தேகம் கிளப்பிக் கொண்டே இருந்தார்.
செல்வாக்கு மிகுந்த சில அமைச்சர்கள் பிரேமதாசாவின் தலைமையில் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரித்தது அதற்கு ஒரு காரணம்.
திருமதி பண்டாரநாயகாவின் ஸ்ரீலங்கா ஃப்ரீடம் பார்ட்டியும் புத்தெழுச்சி பெற்ற ஜனதாவிமுக்தி பெரமுனாவும் போராட்டத்தில் இறங்கக் கூடும் என்று அவர் அஞ்சியது இரண்டாவது காரணம்.
மூன்றாவதாக அரசியல் ரீதியான தீர்வு காண்பதில் அவருக்கு நிஜமான அக்கறை இல்லை. ஆனால் அரசியல் ரீதியான தீர்வுக்கு அவர் ஒப்புக் கொள்ளாவிட்டால் இந்தியா தனது மத்தியஸ்த முயற்சிகளை முற்றாகக் கைவிட்டு விடும் அதன் பிறகு இந்தியர்களின் குறிப்பாக தமிழக மக்களின் முழுமையான ஆதரவு இலங்கைத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கிடைத்துவிடும் என்று அவரிடம் தெளிவாகச் சொன்ன பிறகுதான் ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.
ஜீலை 29ஆம் திகதி இரவில் ஜெயவர்த்தனயின் தரப்பிலும் சிக்கலான ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க தூதர் ஜேம்ஸ் ஸ்பெயினுடன் ஜெயர்வத்தனே நெடு நேரம் ஆலோசனை நடத்தியதாக எங்களுக்குத் தகவல் வந்தது.
அன்றிரவே ராஜீவிடம் நான் இந்த விவரங்களைத் தெரிவித்து விட்டேன். அமெரிக்க தூதரை தான் சந்தித்தது எப்படியும் வெளியில் தெரிந்துபோகும் என்பது ஜெவர்த்தனேயின் சாணக்கிய மூளைக்கு நன்றாகவே தெரியும்.
ஜீலை 30ம் திகதி காலையில் ஜேம்ஸீடன் தான் சந்தித்த விஷயங்கள் பற்றி ஜெயவர்த்தனே ராஜீவிடம் கூறினார்.
சிங்களப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அமெரிக்காவிடம் இராணுவ உதவி கோரியதையும் தெரிவித்தார்.
இருவரும் சமமான நிலையில் இருந்து கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு ஒப்பந்தத்திற்காக ஜெயவர்த்தனே இந்த அளவு முன்ஜாக்கிரதையோடு நடந்து கொள்வார் என்று தான்எதிர்பாக்கவில்லை என்று ராஜீவ் கூறினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வேறு நாடுகளின் உதவியை நாடுவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொன்ன ராஜீ வ், ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் விஷயத்தில் இந்த நாடுகள் எந்த விதத்திலும்; தலையிடக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்தினார்.