ஜம்மு: ஜம்மு – காஷ்மீரில், முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லா வீட்டின் மீது காரை மோதி, வீட்டுக்குள் நுழைய முயன்றவனை, பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். பரூக் அப்துல்லாவை கொல்லும் நோக்கில் அவன் நுழைந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீரில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. பயங்கரவாதிகளின் கொலை மிரட்டல் இருப்பதால், முன்னாள் முதல்வர்களான, தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த பரூக் அப்துல்லா, அவரது மகன், ஒமர் அப்துல்லா ஆகியோருக்கு, ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பரூக் அப்துல்லாவின் வீடு, ஜம்முவின் புறநகர் பகுதியான பட்டிண்டியில் உள்ளது. ஸ்ரீநகர் தொகுதி, எம்.பி., என்பதால், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க, பரூக் அப்துல்லா, டில்லி சென்றுள்ளார்.
பாதுகாப்பு :
இந்நிலையில் நேற்று காலை, பரூக் வீட்டில், எல்லை பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு கார் வேகமாக வந்தது. பரூக் வீட்டின் வாசலில் இருந்த இரும்பு கதவு மீது மோதிதகர்த்து, வீட்டை நோக்கி கார் வேகமாக சென்றது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு வீரர்கள், காரை தடுத்து நிறுத்தினர். காரில் இருந்து இறங்கியவன், பரூக்கின் வீட்டை நோக்கி ஓடினான். தடுக்க வந்த பாதுகாப்பு வீரர்களுடன், கைகலப்பில் ஈடுபட்டான்.
இதில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். பரூக்கின் வீட்டை நோக்கி வேகமாக சென்றவன், வாசலில் இருந்த கண்ணாடி டேபிளை உடைத்தான்.
அவனது தந்தை, ஜம்முவில் துப்பாக்கி கடை நடத்தி வருவதும், கடந்த சில ஆண்டுகளாக, மூரத் அலி ஷாவின் குடும்பத்தினர், ஜம்முவில் வசித்து வருவதும் தெரிந்தது. இந்த சம்பவம் நடந்தபோது, ஒமர் அப்துல்லாவும், அந்த வீட்டில் இல்லை.
இது பற்றி, ஜம்மு மண்டல, ஐ.ஜி., – எஸ்.டி.சிங் கூறியதாவது: மிகவும் பாதுகாப்பு மிக்க பகுதியில், அவன் காரை ஓட்டி வந்தது, அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், அவனிடம் எந்த
ஆயுதமும் இல்லை.அவன், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவனா என, தெரியவில்லை; இது பற்றி விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சம்பவம் குறித்து, தேசிய மாநாட்டு கட்சி தொண்டர்கள் கூறுகையில், ‘பரூக் அப்துல்லா வீட்டுக்கு அத்துமீறி நுழைந்த நபர், வீடுகளில் உள்ள பொருட்களை உடைத்து நொறுக்கி உள்ளான்.
பரூக்கை கொல்லும் நோக்கில் அவன் வந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என்றனர். உறவினர் சந்தேகம் : இதற்கிடையே, மூரத் அலி ஷா சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, அவரது உறவினர், இஜாஸ் ஷாசந்தேகம் எழுப்பியுள்ளார்.
அவர் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு, மூரத் என்னுடன் தான் இருந்தான். ‘ஜிம்’முக்கு போவதாக சொல்லிவிட்டு தான், காலையில் அவன் சென்றான். பரூக் வீட்டின் இரும்பு கதவு மீது, கார் மோதியது என்கின்றனர்.
ஆனால், கதவு சிறிதும் சேதம் அடையவில்லை. மூரத்தை, அங்கேயே தடுத்து நிறுத்தாதது ஏன் இது பற்றி முழுமையாக விசாரித்தால் தான், உண்மை தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாதிப்பு இல்லை! :
இந்த சம்பவம் குறித்து, பரூக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்வருமான, ஒமர் அப்துல்லா, ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பட்டிண்டி பகுதியில் உள்ள வீட்டில், நானும், தந்தையும் வசிக்கிறோம்.
சம்பவம் நடந்தபோது, இருவருமே வீட்டில் இல்லாததால், பாதிப்பு ஏற்படவில்லை. நடந்த சம்பவம் பற்றி, இப்போது தான் கேள்விப்பட்டேன்; தகவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை. விசாரணைக்கு பின் தான் எதுவும் சொல்ல முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நான்கு பயங்கரவாதிகள் கொலை :
ஜம்மு – காஷ்மீரில் நேற்று, நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சோபியான் மாவட்டம், கில்லுாரா பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர்.
இதற்கு, பாதுகாப்பு படையினர் சரியான பதிலடி கொடுத்தனர். இதில், நேற்று முன்தினம் இரவு, பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.
இந்நிலையில், நேற்று காலை தொடர்ந்து நடந்த சண்டையில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும், லஷ்கர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என, தெரிய வந்துள்ளது.