திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.
கருணாநிதியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் உள்ளே புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இசை நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
கருணாநிதியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவர் உயிரிழந்த நாள் நமக்கெல்லாம் கருப்பு தினம். இந்தத் துக்கத்திலிருந்து நாம் எப்படி மீளப்போகிறோம் எனத் தெரியவில்லை.
தூய தமிழ் வசனங்களை திரைப்படங்களில் அள்ளி வழங்கியவர். அரசியல், கலை, இலக்கியம், தமிழ் உள்ளிட்ட பல துறையில் சிறந்து விளங்கியவர். இது ஈடுசெய்யமுடியாத இழப்பு.
ஆஸ்திரேலியாவுக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். இந்தத் திட்டம் ஆறு மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.