இலங்கை அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாதொழித்து மாவட்ட நிர்வாக சபை முறைமையுடனான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் தேசிய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கு அமைவான திட்ட யோசனையை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கையளித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இத்திட்ட யோசனை கையளிக்கப்பட்டுள்ளது.1987 ஆம் ஆண்டு தேசிய இனப்பிரச்சினையை மையப்படுத்தி இந்தியா 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாகாணசபை முறைமையை இலங்கைக்கு அறிமுகம் செய்தது.
அப்போதைய ஆட்சி அதிகாரத்திலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான வசந்த சேனாநாயக்க 13 ஆவது அரசியலமைப்பினை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் மாவட்ட நிர்வாக சபை முறைமையை முன்வைத்துள்ளதுடன் அந்த திட்டத்தினை இந்தியாவிடமும் கையளித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவிடம் கையளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறைமையை இரத்து செய்து புதிய திட்டமொன்றினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு இந்தியாவிடம் ஆலோசனை கேட்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பிரஸ்தாபித்து இந்தியாவிடம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பது குறித்து ஆலோசனை கேட்டுள்ளது.