ஐக்கிய நாடுகளில் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அங்கத்துவமில்லாத நாடான இலங்கைக்கு ஆயுதவிற் பனையை பிரித்தானியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு பாராளுமன்றத்தில் முன் பிரேரணை கொண்டுவருவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லிபரல் டெமோக்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எட்வேர்ட் டேவியினால் கொண்டுவரப்படும் இம்முன்பிரேரணையில் கட்சி பேதங் களைக் கடந்து 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் கையொப்பமிட்டுள்ளனர்.
. இந்நிலையில் “இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனை” என்ற தலைப்பில் 1480ஆம் இலக்கத்தினைக் கொண்ட முன் பிரேர ணையில், 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் தமிழர் தகவல் நடுவத்தினால் சர்வதேச மனித உரிமைகள் முகவரகங்கள் மற்றும் அங்கத்துவ அமைப்புக்களினை ஆதாரங்களாகக் கொண்டு இலங்கையில் நடைபெறும் இராணுவமயமாக்கல், அடக்குமுறைக்காக போர்த்தள வாடங்களை பயன்படுத்தல், இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்வதோடு பயிற்சிகளை அளிக்கின்றமை, சர்வதேச மற்றும் பொதுநலவாய நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் கொண்டிருக்கும் கவலைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
அதன் பிரகாரம், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் முப்படையினர், பொலிஸார், புலனாய்வாளர்கள் என இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் நிலைகொண்டிருக்கின்றமை, இராணுவ மயப்படுத்தப்பட்ட சூழல் நிலவுகின்றமை, சர்வதேச மற்றும் பொதுநலவாய நாடுகள், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளிரின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை, பொறுப்புக்கூறலிலிருந்து விலகிச் செல்கின்றமை, சிறுபான்மை இனத்தவர்கள் தாக்கப்படுவதோடு, தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் நீடிக்கின்றமை ஆகியன அதிலுள்ளடங்குகின்றன.
அதேநேரம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளின் அறிக்கையின் பிரகாரம் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
மறுபக்கத்தில் 2013ஆம் ஆண்டு படைத்தரப்பைச்சேர்ந்தவர்கள் தொடர்புடைய சட்டவிரோத செயற்பாடுகள் 5சதவீதமாக இருந்துள்ளதோடு, 2014ஆம் ஆண்டில் அது 18சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
ஜெனீவாவைத்தளமாகக் கொண்டு இயங்கும் சிறு ஆயுதங்கள் தொடர்பான ஆய்வறிக்கையின்படி 2.3மில்லியன் வரையிலான சிறு ஆயுதங்கள் இலங்கையினுள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத ஆயுத விற்பனை தொடர்பான எந்தவிதமான பதிவுகளும் இலங்கையில் காணப்படாததோடு இத்தகைய ஆயுதங்கள் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையானது ஐக்கிய நாடுகளின் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இலங்கை பங்காளராக இல்லை.
ஆகவே ஆயதங்களை விநியோகிப்பதானது மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறுவதற்கான ஏதுநிலைகளை உருவாக்குவதோடு உள்நாட்டில் இனக்குழுக்கள் அடக்குமுறை செய்யப்படுவதற்கும், சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகின்றது.
ஆகவே இலங்கைக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் பிரித்தானியா உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிரேரணையில் லிபரல் டெமோக்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எட்வேட் டேவி, டொம் பிரேக், ரிம் பரூன், வேரா ஹொப்ஹாவுஸ், கிறிஸ்ரின் ஜார்டின், லைலா மோர்கன் ஆகியோரும் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான, பொப் பிளக்மன், ரெபேர்ட் ஹல்போன் ஆகியோரும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான, அலன் பிரௌன், ஜோன்னா செரி, ட்ரூ ஹென்ரி, கிறிஸ் லோ, டேவிட் லின்டின், அலிசன் திஸ்லிஸ், பீட் விசாட் ஆகியோரும் தொழிற் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜிம் கன்னிங்ஹாம், ரூத் ஜோர்ஜ், சியோபேன் மெக்டோனாக், மேரி ரிம்மர், ஜோன் ரியான், கரேத் தோமஸ், ஸ்டீபன் ரிம்ஸ் ஆகியோரும் கையொப்பமிட்டுள்னர்.
இதனைவிடவும் கிரீன் கட்சியைச் சேர்ந்த கரோலின் லூகாசும், ப்ளைட் சிம்ரு கட்சியின் ஜொனதன் எட்வேட்ஸ் உள்ளிட்ட 24பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
முன்னதாக 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டில் மாத்திரம் பிரித்தானியா 62மில்லியன் ஸ்டேலிங்பவுண் (பிரித்தானிய பாதுகாப்புத் தரப்பு அறிக்கையின் பிரகாரம்) பெறுமதியான ஆயுதங்களை இலங்கைக்கு விற்பனை செய்தது.
இதனைக் கவனத்தில் கொண்ட தமிழர் தகவல் நடுவம் ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரவலத்திற்கு ஆயுதங்களே காரணமாக இருக்கையில் யுத்தம் முடிந்த பின்னரும் இலங்கைக்கு பிரித்தானியா ஆயுதங்களை வழங்குவதானது அந்நாட்டில் இராணுவத்தின் இரும்புக்கரமே ஓங்குவதற்கு வழிவகுக்கும் என்பதை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் சுட்டிக்காட்டினர்.
இச்செயற்பாடுகளில் புலம்பெயர் இளைஞர், யுவதி அமைப்புக்களும் பங்கெடுத்திருந்தன. குறிப்பாக இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிரந்தரமாக நிறுத்துவதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக பிரேரணையொன்றை நகர்த்தி அதனை அனைத்து தரப்பினரினதும் ஆதரவுடன் நிறைவேற்றுவதே இலக்காக இருக்கின்ற நிலையிலேயே மேற்படி முன் பிரேரணையை நகர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், கடந்த ஜுலை 14ஆம் திகதி பிரித்தானியாவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோதச்செயற்பாடுகளில் 18சதவீதமானவற்றில் படையினர் தொடர்புபட்டுள்ளதாக சுட்டிக்காட்டி இலங்கைக்கான ஆயுதவிற்பனையை முற்றாக நிறுத்தவேண்டுமெனக் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.
இதற்கு 16பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தனர்.
இதேவேளை, தமது மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் கடந்த வியாழக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ள 1.3மில்லியன் டொலர்கள் தொடர்பான செயற்றிட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும்போது வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.