மஹத் – யாஷிகா காதல். கமலுக்கு முன்பாக, மஹத் மீதான தன் காதலை துணிச்சலாக சபையில் போட்டு உடைத்துவிட்டார் யாஷிகா. ஆனால் மஹத் இன்னுமும் ‘அது நட்பிற்கும் மேலே’ என்று மழுப்பிக்கொண்டிருக்கிறார்.
அதை எப்படியாவது தக்கவைத்துவிட வேண்டும் என்று பிக்பாஸ் முடிவு செய்து விட்டார் போல.
வீட்டில் இரண்டாவது முறையாக தலைவியாகி இருக்கும் யாஷிகாவிற்கு ஒரு சிறப்புச் சலுகை தந்தார். அதன்படி சபையைக் கூட்டி மற்றவர்களினால் தனக்கு என்னவெல்லாம் பிரச்னை வந்தது என்பதை புகார் எழுப்பி அவர்களின் பதில்களைக் கேட்டு வாங்கலாம் என்றொரு பகுதியை ‘நேருக்கு நேர்’ என்ற பெயரில் உருவாக்கினார்.
மற்றவர்களின் மீதான புகார்கள் எல்லாம் அத்தனை முக்கியமில்லை. பஞ்சாயத்து எதற்காக கூட்டப்பட்டதோ அதை மட்டும் பார்ப்போம். மொழி வன்மை இல்லாவிடினும், தன்னுடைய பிரச்னை என்ன என்பதை துல்லியமாக வெளிப்படுத்தும் யாஷிகாவின் அறிவுத்திறமை வியக்க வேண்டியிருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் கூண்டில் மஹத் வந்து நின்றதும், தன் சரவெடி உரையாடலைத் துவங்கினார், யாஷிகா.
“நீங்கதான் முதல்ல இருந்து உங்களோட ஃபீலிங்க்ஸை என்கிட்ட சொல்லிட்டு இருந்தீங்க. நான் சொல்லலை. ஒரு கட்டத்துல உங்க பாசத்தைப் பார்த்ததும் நானும் விழுந்தேன்.
ஆனா நீங்க மத்தவங்க பேச்சைக் கேட்டுட்டு சமயங்கள்ல என்கூட பேசாம இருந்தீங்க. எனக்கு ஆதரவா நிற்க வேண்டிய சமயங்களில் நிற்கவில்லை.
‘நான் உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாதவள்’ என்கிற அடிப்படையில் அப்பவும் உங்ககிட்ட சிரிச்சு பேசிட்டு இருந்தேன். ஆனா உள்ளுக்குள் காயப்பட்டேன்.
என்கிட்ட ஒரு மாதிரி பேசறீங்க. மத்தவங்க கிட்ட ஒருமாதிரி பேசறீங்க. “யாஷிகாவுடனான நட்பு அதற்கும் மேலானதா?”ன்னு ஒரு கேள்வி வந்தப்போ, இந்த வீட்ல இருக்கற எல்லோருமே ‘யெஸ்’-ன்னு அட்டையைக் காட்டினாங்க.
நீங்க மட்டும் ‘நோ’ –ன்னு சொன்னீங்க அப்புறமா எனக்கு மட்டும் ‘யெஸ்’ன்னு சொன்னீங்க. காதலிக்கிற விஷயத்தில் நான் உண்மையா நின்னேன். நீங்க நிக்கலை” என்று பெரிய புகாரை முன்வைத்தார், யாஷிகா.
‘ஆண்டவா’ என்று வேண்டிக்கொண்டே தன் பதிலைச் சொல்ல ஆரம்பித்தார். யாஷிகாவின் நேர்த்தியான புகாரைப்போல இவருடைய பதிலும் நேர்மையாக இருந்தது.
“கமல் சார் சீரியஸா கேட்கும்போது ‘ஆமா சார். எனக்கும் ஃபீலிங்க்ஸ் இருக்குன்னு ஒப்புக்கொண்டேன். ஆனா வெளியே ஒரு உயிர் எனக்காக காத்திருக்குன்னும் சொல்லிட்டேன்.
இந்த வீட்டுக்குள்ள நாம சேர்ந்து வாழற சூழ்நிலை அமைஞ்சிருக்கு. அதனால காதல் உணர்ச்சி வர்றது இயல்பு. இது சரியா தப்பான்னு எனக்கு சொல்லத் தெரியலை.
ஆனா வந்துடுச்சி. ஆனா இதை மத்தவங்க எப்படி பார்ப்பாங்களோன்னு சமயங்கள்ல தற்காப்பு மனநிலைக்குப் போயிட்டேன். உங்க மேல எனக்கும் லவ் இருக்கு. இதை மத்தவங்க புரிஞ்சுக்கறது கஷ்டம்” என்றார்.
“இது உங்க இருவருக்கும் உள்ள பிரச்னை. பார்த்து கையாளுங்கள்’ என்கிற ஐஸ்வர்யாவின் அபிப்ராயமும் முதிர்ச்சியானது. ‘வெளிலயும் ஒண்ணு.. உள்ளயும் ஒண்ணுன்னா.. எது உண்மை?” என்று கேட்ட பாலாஜியின் கேள்வி பொதுசமூகத்தின் பிரதிபலிப்புதான்.
இது சற்று சிக்கலான விஷயம். ஒரே சமயத்தில் இருவர் மீது காதல் உருவாகுமா என்றால் உருவாகும். அதுதான் இயற்கை. ஆண்கள்கூட இதை சற்று வெளிப்படையாக பேசும் சூழ்நிலை இருக்கிறது.
ஆனால் பெண்கள் மூச்சுகூட விட முடியாது. ஒரே வீட்டினுள் வலுக்கட்டாயமாக வசிக்க நேரும்போது இப்படி உருவாவதற்கான சாத்தியம் அதிகம்.
இதைக் கடக்க அதிக மனவுறுதி வேண்டும். துரதிர்ஷ்டமாக அப்படி இருப்பவர்கள் மிகக் குறைவு. கலாசார காவலர்களும் பொதுப்புத்தி உள்ளவர்களும் நிச்சயம் இதை எதிர்ப்பார்கள்.
ஆனால் அவர்களுமே இப்படியொரு அனுபவத்தில் விழுந்தோ அல்லது விழாமலோ கடந்திருக்கலாம். ஆனால் வெளியில் மூச்சுவிட மாட்டார்கள்.
‘நாலு பேர் என்ன நினைப்பாங்க’ என்கிற காரணத்திற்காகவே நம்முடைய சுயத்தை நிறைய இழக்கிறோம்.
ஐஸ்வர்யா குறிப்பிட்டதைப் போல இது சம்பந்தப்பட்ட நாலு பேருக்குள் பேசி தீர்க்கப்பட வேண்டிய விஷயம். மஹத்தும் யாஷிகாவும் குறிப்பிட்டது போல ‘இது வற்புறுத்தப்பட்டோ, கட்டாயத்தினாலோ உருவானதல்ல. பரஸ்பரம் இருவரின் சம்மதமும் இருக்கிறது’. இதில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் இருப்பதுதான் நல்லது.
மூன்றாவது சம்பவம்: பிக்பாஸ் விருது விழா. ‘ஆஸ்கர்’ முதல் “ஆண்டிப்பட்டி எட்டாம் வார்டு அவார்டு’ வரை விருது என்றாலே சர்ச்சையில்லாமல் இருக்குமா? பிக்பாஸ் விருது விழாவிலும் அது நிகழ்ந்தது.
‘நரி தந்திரமானது, கழுதை முட்டாள்’ என்பது போல மனிதர்களின் குணாதிசயங்களை விலங்குகளின் மீது ஏற்றி கதை சொல்வது, அதை இளம் மனங்களில் பதிய வைப்பது போன்ற அபத்தம் இருக்க முடியாது.
இயற்கையில் படைக்கப்பட்டவாறுதான் விலங்குகள் இன்றும் இயங்குகின்றன. ஆறாம் அறிவு மனிதனுக்கு மட்டும் உள்ளது என்பது முக்கியமான வேறுபாடு.
ஆனால் அறிவால் உயர்ந்த மனிதன்தான், பல சமயங்களில் மற்ற உயிரினங்களை விடவும் கேவலமாக நடந்துகொண்டிருக்கிறான் என்பது நடைமுறை உண்மை.
PART 2