எங்களிடம் உள்ள வளங்களை வைத்தே கேரளாவை மறுசீரமைத்து கொள்வோம் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய ரூ.700 கோடியை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என தெரிகிறது.
புதுடெல்லி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு முதல்கட்ட நிவாரண உதவியாக ரூ.600 கோடி கொடுத்துள்ளது.
மீட்பு பணிகள், நோய் தடுப்பு பணிகள், சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு கேரளாவுக்கு சுமார் 90 ஆயிரம் டன் உணவு தானியங்கள், 100 டன் பருப்பு வகைகளை இலவசமாக கொடுத்து அனைத்து விதமான உதவிகளையும் செய்துள்ளது.
மத்திய அரசு உத்தரவு காரணமாக ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் கேரளா கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
உள் கட்டமைப்பை சீராக்க மத்திய அரசு உடனடியாக ரூ.2,600 கோடி தரவேண்டும் என்று கேரளா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கூடுதல் நிதி திரட்ட லாட்டரி சீட்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாடு கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்க தயார் என்று அறிவித்துள்ளது.
அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயத் சமீபத்தில் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு இந்த நிதி உதவி பற்றி தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரெட்சில் வாழும் சுமார் 28 லட்சம் கேரள மாநிலத்தவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதியை தர தயாராக இருப்பதாக அபுதாபி இளவரசர் கூறினார்.
மாலத்தீவு, கத்தார், சீனா மற்றும் ஐ.நா. சபையில் இருந்தும் நிதி உதவி தர இருப்பதாக மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட வெளிநாடுகளின் நிதி உதவியை இந்தியா ஏற்காது என்று தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கொள்கை முடிவு எடுத்து இருப்பதால் அதை பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
நிதி உதவி செய்ய முன் வந்த ஐக்கிய அரபு எமிரெட்ஸ், மாலத்தீவு, ஐ.நா. சபைக்கு இந்தியா சார்பில் ‘நன்றி’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பும் பணத்தை ஏற்றுக் கொள்வதில் எந்தவித தடையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
நிதி உதவி மற்றும் சீரமைப்பு பணி செய்ய முன் வந்த வெளிநாடுகளிடம், “எங்களிடம் போதுமான அளவுக்கு வளங்கள் உள்ளன.
அவற்றை கொண்டு கேரளாவை மறுசீரமைத்து கொள்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிடம் பணத்துக்கு கை ஏந்துவதை 2004-ம் ஆண்டே இந்தியா நிறுத்தி விட்டது.
2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகப் பெரிய மழை வெள்ள அழிவு ஏற்பட்டது. உடனே ரஷியா உதவிகள் செய்ய முன்வந்தது. ஆனால் இந்தியா, ரஷியாவிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை.
2004-ல் சுனாமி தாக்கியபோது அமெரிக்கா எல்லா உதவிகளையும் செய்ய தயார் என்று கூறியபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், எங்களிடமே மறுசீரமைப்புக்கு பணம் உள்ளது என்று கூறி அமெரிக்க உதவியை ஏற்க மறுத்து விட்டார்.
2014-ம் ஆண்டு காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டபோது, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகள் உதவ போட்டி போட்டு முன் வந்தன.
ஆனால் எந்த நாட்டின் உதவியையும் இந்தியா ஏற்கவில்லை. அந்த வரிசையில் இப்போதும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் உதவியை இந்தியா மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Drone footage of Kerala Floods in India