இலங்கையில் அதிபர் சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்ஷ இன்று பிரதமராக கடமைகளை ஏற்றுக் கொண்டார்.
பெளத்த மதத் தலைவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜபக்ஷவுடன் சில அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.
ராஜபக்ஷவும் அதிபரால் பதவி நீக்கப்பட்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்கள் பலத்தைக் காட்டும் வகையில் நாடாளுமன்றம் எப்போது கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் உத்யோகபூர்வமாக பிரதமர் அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி தம்மை பதவி நீக்கினாலும், அப்படி நீக்குவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று கூறி, தாம் இன்னமும் பிரதமரே என்று கூறி வருகிறார் ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்குமா? அவரது நிலை என்னவாகும் என்ற கேள்வியை இந்த கடமை ஏற்பு விழா எழுப்பியுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதியாக இலங்கை சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கிற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்து வந்தார்.
அந்தக் கட்சியின் போட்டிக்கட்சியான மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருந்தது.
ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நீடித்து வந்தன.
இந்த நிலையில் மைத்ரிபால சிரிசேன அவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, கூட்டணி அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டதுடன் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார் சிறிசேன.
அமெரிக்கா அறிக்கை
இலங்கையில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் குறித்து கவனித்து வருவதாகத் தெரிவித்த அமெரிக்கா, சபாநாயகருடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதையை கேட்டுக் கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசை யார் முன்னெடுத்து நடத்துவது என்று தீர்மானிக்க ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாக அமெரிக்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.