:”துபாயில் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.56 கோடி மதிப்புள்ள 11 சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.”,
புதுதில்லி: துபாயில் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.56 கோடி மதிப்புள்ள 11 சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,400 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடிய வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த சொத்து முடக்கத்துக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
நீரவ் மோடிக்கு சொந்தமாக லண்டன், நியூயார்க் நகரங்களில் உள்ள சொத்துகள், சிங்கப்பூர் மற்றும் பிற வெளி நாடுகளின் வங்கிகளில் இருக்கும் ரொக்கம், மும்பையில் இருக்கும் வீடு உள்ளிட்டவற்றை முடக்குவது தொடர்பாக சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் 5 உத்தரவுகளை அமலாக்கத் துறை வெளியிட்டிருந்தது.
இந்த சொத்துகள் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளையும் அமலாக்கத் துறை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட வெளி நாடுகளின் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் முடிந்தது.
இதன் விளைவாக, இந்தியா, 4 வெளிநாடுகளில் உள்ள நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.637 கோடி மதிப்புடைய அசையா சொத்துகள், நகைகள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
இதுபோல், வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளை இந்திய விசாரணை அமைப்புகள் முடக்குவது சில வழக்குகளில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அதில் இந்த வழக்கும் ஒன்றாகும்.
துபாயில் நீரவ் மோடி மற்றும் அவரது நிறுவனத்திற்கு சொந்தமாக 7.79 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ 56 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு சமமான 11 சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
முன்னதாக, அவை நீரவ் மோடிக்கு சொந்தமானதுதான் என்பதை அமலாக்கத் துறையினர் ஆவணங்கள் மூலம் உறுதி செய்தனர்.
இதன் மூலம் மொத்தம் ரூ.4,800 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நீரவ் மோடியின் பல்வேறு சொத்துகளை அமலாக்கத் துறை இதுவரை முடக்கியுள்ளது.
இதுவரை மொத்தம் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் இந்தியாவில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 6,400 கோடி ரூபாய் வங்கி பணத்தை, முறைகேடாக வெளிநாட்டிலுள்ள போலியான நிறுவனங்களுக்கு நீரவ் மோடி மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நீரவ் மோடியின் வெளிநாட்டு சொத்துகளை அமலாக்கத் துறை முடக்குவது இது முதல்முறையல்ல. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்ட வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான அமெரிக்கா, பிரிட்டனில் உள்ள அவருக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
லண்டன், நியூயார்க் நகரங்களில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், வெளிநாட்டு வங்கி கணக்குகள், தங்கம் மற்றும் வைர நகைகள் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட சொத்துகளில், நியூயார்க் சென்டிரல் பார்க் பகுதியில் நீரவ் மோடியின் பெயரில் உள்ள 2 குடியிருப்புகள் ரூ.216 கோடி. லண்டனில் மேரிலிபோன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் விலை ரூ.56.97 கோடி. இது நீரவ் மோடி சகோதரி பூர்வி மோடியின் பெயரில் உள்ளது.
ஹாங்காங்கில் இருந்து அனுப்பப்பட்ட ரூ.22.69 கோடி மதிப்புடைய வைர நகைகள், சிங்கப்பூர் வங்கி கணக்கில் உள்ள ரூ.44 கோடியும் முடக்கப்பட்டது.
இந்த வங்கி கணக்கு, பிரிட்டனின் விர்ஜின் தீவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் தொடங்கப்பட்டது. தெற்கு மும்பையில் பூர்வி மோடியின் பெயரில் இருந்த ரூ.19.5 கோடி மதிப்புடைய வீடும் முடக்கப்பட்டது.
நீரவ் மோடி, அவரது சகோதரி பூர்வி மோடி மற்றும் அவர்களால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களின் பெயரில் பிற வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.278 கோடியும் முடக்கப்பட்டன.
நிதி மோசடி விவகாரம் தொடர்பான விசாரணை தொடங்கிய பிறகு, இந்த வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13,400 கோடி வரை கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது மனைவி, உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டனர்.”,