`கஜா’ புயல் நிவாரணத்துக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும்” என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை சில தினங்களுக்கு முன்பு தி.மு.க-வின் பொருளாளர் துரைமுருகனும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபுவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று வழங்கினார்கள்.
“தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்குகிறோம். அதை தலைவரே கொண்டுபோய்க் கொடுத்திருக்கலாம்” என்ற பேச்சு தி.மு.க-வினர் மத்தியில் எழுந்தது.
குறிப்பாக 2004-ம் ஆண்டு சுனாமியால் தமிழகம் துயரில் இருந்தபோது, அப்போது தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தது.
அப்போது தி.மு.க-வின் தலைவராக இருந்த கருணாநிதி சுனாமிக்கு முதல்வரின் நிவாரண நிதியாக 21 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த 21 லட்ச ரூபாயை இப்போது தி.மு.க-வின் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வழங்கினார்.
தி.மு..க – அ.தி.மு.க இடையே மோதல் உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது. கருணாநிதி கைது, தி.மு.க-வினர் மீது வழக்கு என்று தி.மு.க-வுக்கு ஆட்டம்காட்டி கொண்டிருந்தபோதே ஸ்டாலின்- ஜெயலலிதா சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது ஜெயலலிதா, “அப்பா எப்படி இருக்கிறார்கள்?” என்று ஸ்டாலினிடம் விசாரித்தார்.
ஆனால், இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதாவைப் போன்று வலிமையான தலைவராக இல்லை.
ஜெயலலிதாவையே சந்தித்து நிவாரண நிதி கொடுத்த ஸ்டாலின் இப்போது எடப்பாடியைச் சந்திக்காமல் இருப்பது ஏன், என்ற வினா தி.மு.க-வினரிடம் உள்ளது.
ஆனால், உண்மையில் ஜெயலலிதா – ஸ்டாலின் சந்திப்பின்போது நடந்த கதையே வேறு என்று சொல்கிறார்கள் அ.தி.மு.க தரப்பில்.
அந்தச் சந்திப்பு அரசியல் நாகரிகமிக்க சந்திப்பு, ஜெயலலிதா ஸ்டாலினைச் சந்தித்ததே ஒரு பெருந்தன்மையின் குறியீடுதான் என்றெல்லாம் அப்போது சிலாகித்துப் பேசப்பட்டது.
உண்மையில் அந்தச் சந்திப்பை ஜெயலலிதா நடத்திய விதமே வேறு. அந்தத் தகவல்கள் வெளியே தெரியாமலே போய்விட்டது என்று சொல்கிறார்கள்.
“சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்ட 21 லட்சம் காசோலையை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் நேரடியாக வழங்க தி.மு.க தரப்பில் முடிவு செய்யப்பட்டது.
தி.மு.க தரப்பிலிருந்து முதல்வர் அலுவலகத்தில் இதற்கான அப்பாயன்மென்ட் கேட்கப்பட்டது. முதல்வர் அலுவலகம் ஸ்டாலின் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியது.
ஸ்டாலின் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஜெயலலிதா தனக்கே உரிய வகையில் ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஸ்டாலினைக் காக்கவைக்க வேண்டும் என்ற முடிவுக்குவந்த ஜெயலலிதா, அவர் வருவதற்கு முன்பே தனது செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனிடம், “சென்னை மாநகராட்சி சார்பாக நிவாரண நிதிக்கு ஒரு செக் ரெடி பண்ணி அந்த செக்கை துணைமேயர் கராத்தே தியாகராஜனையும், மாநகராட்சி ஆணையர் விஜயகுமாரையும் உடனடியாக வரச்சொல்லுங்கள்” என்று சொல்லியுள்ளார்.
இந்தத் தகவல் இருவருக்கும் பாஸ் செய்யப்பட்டதும், இருவரும் நிவாரணத்துக்கு வழங்கவேண்டிய “செக்”கோடு கோட்டைக்குள் வந்தனர். ஜெயலலிதாவின் அறைக்கு வெளியே அவர்கள் காத்திருந்த நேரத்தில், ஸ்டாலினும் கோட்டைக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
மறுபுறம் ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்ட அதே நேரம், சுனாமி நிவாரண நிதி வழங்க நேரம் கேட்டிருந்த பல்வேறு நபர்களுக்கும் நேரம் ஒதுக்கியிருந்தனர் முதல்வர் அலுவலகத்தினர்.
அவர்களும் ஸ்டாலினுடன் வரிசையாக அமர்ந்து இருந்தனர். அதாவது, ஸ்டாலினுக்கு மட்டும் இது ஸ்பெஷல் அப்பாய்ன்மென்ட் அல்ல… எல்லோரையும் போல நீங்களும் காத்திருக்க வேண்டும்” என்பதைச் சொல்லாமல் செயலில் காட்டியுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவைச் சந்திப்பதற்காக அனைவரும் வெளியே காத்திருந்த நேரத்தில் அப்போது டி.ஜி.பி-யாக இருந்த அலெக்ஸாண்டரைத் தனது அறைக்குள் வரவழைத்தார் ஜெயலலிதா.
ஸ்டாலினை வெளியே காக்க வைத்துவிட்டு, சுமார் ஒரு மணிநேரம் டி.ஜி.பி அலெக்ஸாண்டரோடு பேசிக்கொண்டே இருந்துள்ளார்.
வெளியே காத்திருந்த ஸ்டாலின் ஒருகட்டத்தில் சலிப்பாகியுள்ளார். ஒரு மணிநேரம் கடந்த பிறகே ஜெயலலிதா அறையிலிருந்து டி.ஜி.பி வெளியேறியுள்ளார்.
அதன்பிறகு, அப்பாய்ன்மென்ட் வாங்கியவர்களை வரிசையாக நிற்கச் சொல்லியுள்ளார்கள் முதல்வர் அலுவலக அதிகாரிகள்.
அந்த வரிசையில் ஸ்டாலின், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டவர்கள் நின்றுள்ளார்கள். இதெல்லாம் ஜெயலலிதா உத்தரவுபடியே நடந்துள்ளது. வரிசையில் ஸ்டாலினை நிற்கவைத்து அவரிடம் தி.மு.க சார்பில் வழங்கப்பட்ட 21 லட்சத்துக்கான செக்கை வாங்கியுள்ளார் ஜெயலலிதா.
அறைக்குள் நுழைந்ததும், புன்னகையோடு வரவேற்று “அப்பா எப்படி இருக்கிறார்?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
சந்திப்பு நடந்த நேரம் வெறும் இரண்டு நிமிடங்கள்தான். ஜெயலலிதா – ஸ்டாலின் சந்திப்பை ஆகா, ஓஹோ என்ற புகழ்ந்தவர்களுக்குக் கோட்டையில் நடந்த இந்தச் சம்பவங்கள் வெளியே தெரியாது.
ஸ்டாலினுக்கு ஜெயலலிதா கொடுத்த மரியாதை அவ்வளவுதான்!” என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.
இந்தச் சம்பவம் அப்போது முதல்வர் அலுவலகத்திலிருந்த அனைவருக்கும் தெரியும். இப்போது அ.தி.மு.க-வில் மூத்த அமைச்சர்களாக இருக்கும் சிலரும் தெரிந்த விஷயம்தான் என்கிறார்கள்.
`ஜெயலலிதாவுடன் ஒப்பிடும்போது எடப்பாடியின் நடவடிக்கையே ஆரோக்கியமானதாகத் தெரிகிறது. தனது வீட்டுக்கே துரைமுருகனை அழைத்து காபி கொடுத்து செக்கை வாங்கியுள்ளார்.
அவர்கள் கிளம்பும்போது வாசல் வரை வந்து வழியனுப்பியுள்ளார் எடப்பாடி” என்கிற கூடுதல் தகவலைச் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.
ஏற்கெனவே முதல்வர் வீட்டுக்குச் சென்று தனது தந்தைக்கு மெரினாவில் இடம் கேட்டுக் கிடைக்காமல் போன வருத்தம் இன்னும் ஸ்டாலினிடம் உள்ளது.
அந்த வருத்தினால்தான் துரைமுருகனை அனுப்பி நிவாரணத் தொகையை வழங்கினார். பழைய கதையை இப்போது எதற்குப் பேசவேண்டும்.
இறந்த தலைவர்களைப் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை என்று பாலிஷாக ஒதுங்கிக்கொள்கிறார்கள்