சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்திய குற்றச்சாட்டில் சஞ்சீவ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். விடுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் 1-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் விடுதி செயல்பட்டுவருகிறது.
சொகுசு அறைகள், உடற்பயிற்சிக் கூடம் என அனைத்து வசதிகளும் விடுதியில் உள்ளன. விடுதியில் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் இன்ஜினீயர்கள் சிலர் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், விடுதியில் அடிக்கடி சர்வீஸ் என்ற பெயரில் குறிப்பிட்ட சில பணியாளர்கள் மட்டும் வருவதும் பிறகு அவர்கள் செல்வதுமாக இருந்துள்ளனர்.
அவர்கள் குறிப்பாக எலெக்ட்ரிக் பணிகளை மட்டும் செய்துள்ளனர். இது, அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் விடுதியில் ரகசிய கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால், ரகசிய கேமராக்களைக் கண்டுபிடிக்கும் மொபைல் ஆப்ஸைப் பயன்படுத்தி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விடுதிக்குள் படுக்கையறை, குளியலறை என சில இடங்களில் ரகசிய கேமராக்கள் இருப்பது தெரியவந்தது. இதனால், பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆத்திரத்தில் இரண்டு ரகசிய கேமராக்களை அவர்கள் உடைத்தனர். இன்னொரு கேமரா ஸ்விட்ச் போர்டில் உள்ள பிளக்பாயின்டுக்குள் இருந்ததால் அதை விட்டுவிட்டனர்.
அந்த கேமராக்களில் தங்களின் வீடியோக்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் பெண்களுக்கு ஏற்பட்டது. மேலும் கேமராவை வைத்தது யார் என்பதைக் கண்டறியவும் பெண்கள் முடிவு செய்தனர்.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர். துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் கங்கைராஜ், இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீஸார் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
போலீஸார் நடத்திய சோதனையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள், உடைந்த கேமராக்களின் பாகங்கள் மற்றும் சில போலி அடையாள ஆவணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக விடுதியை நடத்திய திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், ரகசிய கேமராவா என்று அவர் ஆச்சர்யமாக கேட்டுள்ளார். அதன்பிறகு போலீஸார் நடத்திய விசாரணையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது குறித்து சில தகவல்களை மட்டும் அவர் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “விடுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரகசிய கேமராக்கள் குறித்து விசாரித்துவருகிறோம்.
அதை ஆய்வு செய்தபிறகே அதில் என்னென்ன வீடியோக்கள் உள்ளன என்பது தெரியவரும். விடுதியை நடத்திய சஞ்சீவ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதுகுறித்தும் விசாரித்துவருகிறோம். விடுதியிலிருந்து போலி அடையாள ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இந்த விடுதியை நடத்துவதற்கான அனுமதி எதுவும் இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்தும் விசாரித்துவருகிறோம்.
ரகசிய கேமராக்கள் லைட் பொருத்தும் பகுதியிலும் சுவிட்ச் போர்டு பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளன.
அதை எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நுட்பமாகப் பொருத்தியுள்ளனர். ஐ.டி துறையில் பணியாற்றும் இன்ஜினீயர்கள் புத்திசாலித்தனமாக ரகசிய கேமராக்களை மொபைல் ஆப்ஸ் மூலம் கண்டுபிடித்துவிட்டனர்.
இல்லையெனில், அதன் விளைவு படுமோசமாக அமைந்திருக்கும். மேலும், சஞ்சீவ் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்ற தகவலையும் சேகரித்துவருகிறோம்” என்றார்.
போலீஸார் கூறுகையில், சஞ்சீவ் நடத்திய விடுதியில் மூன்று சொகுசு அறைகள் உள்ளன. அதில் ஏழு பெண்கள் தங்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள்தான் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்து எங்களிடம் தெரிவித்தனர்.
குளியலறை, உடைமாற்றும் அறை ஆகியவற்றில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கேமராவில் அங்கு தங்கியிருந்தவர்களின் வீடியோக்கள் பதிவாகியிருக்க வாய்ப்புள்ளது.
இதுவரை நாங்கள் நடத்திய ஆய்வில் எந்த வீடியோவும் இல்லை. விடுதியை எங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளோம்.
சஞ்சீவ் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் எங்களின் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும்” என்றனர்.
`சென்னையைப் பொறுத்தவரை, புற்றீசல்போல தெருவுக்குத்தெரு விடுதிகள் செயல்படுகின்றன. வெளிமாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் சென்னையில் தங்கி வேலைப்பார்க்கின்றனர்.
அவர்களைக் குறி வைத்துத்தான் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி சில விடுதிகள் செயல்படுகின்றன.
அடுக்குமாடி குடியிருப்புகளையும் சென்னையின் புறநகர் பகுதிகளில் தனி வீடுகளையும் வாடகைக்குப்பிடித்து விடுதிகளை சிலர் நடத்திவருகின்றனர்.
பணம் சம்பாதிக்கும் ஆசையில் விடுதிகளை நடத்துபவர்களுக்கு அரசு கடிவாளம் போட்டால் மட்டுமே நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் பெண்கள் தங்க வழிவகுக்க முடியும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சென்னையில் விடுதிகளை நடத்துபவர்கள் முறையாக அனுமதி பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இன்னமும் சென்னையில் அனுமதி பெறாமல் பல பெண்கள் விடுதிகள் உள்ளன. பெண்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் அரசின் கண்காணிப்பின் கீழ் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும்.
சென்னையில் செயல்பட்ட பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்ட தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.