ரகசிய கேமரா சர்ச்சையில் சிக்கிய சஞ்சீவின் இன்னொரு முகம் அனைவரையும் அதிர்ச்சியடையவைக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட கேமராக்களில் உள்ள வீடியோக்களைப் பார்த்த பிறகு, அங்கு தங்கியிருந்த பெண்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ், கேரளாவைச் சேர்ந்த பெண்ணை காதலித்துத் திருமணம்செய்தவர்.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டுமான நிறுவனத்தை நடத்திவருகிறார். திருச்சியில் குடியிருந்த சமயத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதனால் அங்கிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்துள்ளார். ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, முதலில் சஞ்சீவ் தங்கியுள்ளார்.
அப்போது, அவரின் குழந்தைகளுக்கு அந்தப் பகுதியில் உள்ள பிரபலமான பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. அதனால், குரோம்பேட்டைக்கு குடியேறியுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை காலிசெய்யாமல், அதில் தன்னுடைய கட்டுமான நிறுவன அலுவலகத்தை நடத்தியுள்ளார்.
அப்போதுதான், அந்த இடத்தில் பெண்கள் விடுதியை நடத்தலாம் என அவர் முடிவுசெய்துள்ளார். அதுதொடர்பாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.
இரண்டு நர்ஸ்கள், 3 பேராசிரியைகள், ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் 4 பேர் என 9 பேர் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தலா 7,000 ரூபாயை வாடகையாக சஞ்சீவ் வசூலித்துள்ளார்.
இந்த விடுதியில் மூன்று கழிவறைகள், குளியலறைகள் உள்ளன. அதுபோல, மூன்று படுக்கையறைகளும் உள்ளன. அங்குதான் பெண்கள் தங்கியுள்ளனர்.
இந்தச் சமயத்தில், கடந்த 10 தினங்களுக்கு முன், விடுதியில் சீரமைப்புப் பணிகள் நடந்துள்ளன. இதனால் அங்கிருந்த பெண்கள் வெளியில் தங்கியுள்ளனர்.
இந்தச் சமயத்தில்தான் ரகசிய கேமராக்கள் 9 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 2-ம் தேதி, புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர், தன்னுடைய கூந்தலை காயவைக்க ஹேர் ட்ரையர் பயன்படுத்த அறையிலிருந்த பிளக் பாயின்ட்டை பயன்படுத்த முயன்றுள்ளார்.
ஆனால், ஹேர் ட்ரையரின் பிளக் உள்ளே செல்லவில்லை. இதனால், அவர் மீண்டும் முயற்சி செய்தபோதும் முடியவில்லை.
இதையடுத்து அவர், பிளக் பாயின்ட்டை சோதித்தபோது, உள்ளே ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே, அங்கு தங்கியிருந்த பெண்களிடம் அவர் விவரத்தைக் கூறினார். அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து, செல்போனில் உள்ள ரகசிய கேமராக்களைக் கண்டறியும் ஆப்ஸ் மூலம் விடுதி முழுவதும் ஆய்வுசெய்தனர்.
அப்போது குளியலறை, மற்றுமுள்ள அறைகளில் பிளக் பாயின்ட் மற்றும் எல்இடி பல்புகளில் ரகசிய கேமராக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். நாங்கள் சென்று விடுதி முழுவதும் ஆய்வுசெய்து 9 ரகசிய கேமராக்கள், போலி அடையாள ஆவணங்கள், சஞ்சீவின் லேப்டாப், செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். அவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.
போலீஸாரிடம் சஞ்சீவ் கொடுத்த வாக்குமூலத்தில், `என்னுடைய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுடன் நெருங்கிப் பழகுவேன்.
விடுதியில் தங்கியுள்ள பெண்களை மிரட்டவே நான் கேமராக்களைப் பொருத்தினேன். ஆனால், கேமராவில் பதிவான வீடியோக்களை எடுப்பதற்கு முன் நான் சிக்கிக்கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.
விடுதியிலிருந்து பறிமுதல்செய்யப்பட்ட கேமராக்களில், சில வீடியோக்கள் இருந்துள்ளன. அதில், அங்கு தங்கியிருந்த பெண்கள் உடைமாற்றும் காட்சிகளும், கழிவறைக்குச் செல்லும் காட்சிகளும் முகம் கழுவும் காட்சிகளும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனால், அங்கு தங்கியிருந்த பெண்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
அதே நேரத்தில், சஞ்சீவின் லேப்டாப்பில் உள்ள வீடியோக்கள் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
அந்த வீடியோக்கள், சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டவை. அதில், சஞ்சீவும் அவருடன் நெருக்கமாக இருக்கும் பெண்களும் உள்ளனர்.
அந்த வீடியோக்களில் உள்ள பெண்களில் சிலர், அவரின் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.
இதனால், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலை போலீஸார் சேகரித்துவருகின்றனர்.
ரகசிய கேமராக்களைப் பொருத்த உதவியது யார் என்ற கேள்வியை சஞ்சீவிடம் போலீஸார் கேட்டதற்கு, `நான் ஒரு இன்ஜினீயர்.
எனக்கு கேமராக்கள் குறித்த தொழில்நுட்பம் தெரியும். இதனால் எனக்கு யாரும் உதவிசெய்யவில்லை’ என்று கூறியுள்ளார்.
சஞ்சீவ் மீது மோசடிப் புகார் உள்ள நிலையில், ரகசிய கேமராக்களைப் பொருத்திய புகாரும் சேர்ந்துள்ளது.
மோசடிப் புகாரில் சிறைக்குச் சென்ற அவர், மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சஞ்சீவ் மீது பெங்களூருவில் ஒரு வழக்கு இருப்பதாக சென்னை போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பான விசாரணையில் போலீஸார் களமிறங்கியுள்ளனர்.
சிரித்த முகத்துடன் வலம்வந்த சஞ்சீவின் இன்னொரு முகம் குறித்த தகவல் அனைவரையும் அதிரவைக்கிறது.
எனவே, விடுதிகளில் தங்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.