தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா, மிசோரம் தவிர்த்த மூன்று முக்கிய மாநிலங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
பல ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி செய்து வந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த மிசோரத்தில், தற்போது மிசோ தேசிய முன்னணி முன்னிலையில் உள்ளது.
தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். முன்னிலை
10:50 மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சின் சௌஹான், புத்னி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
10:30 ராஜஸ்தான் ஜல்ராபட்டன் தொகுதியில் பாஜக வேட்பாளர் வசுந்தர ராஜே முன்னிலையில் உள்ளார்.
10:10 2003-ம் ஆண்டில் இருந்து சத்தீஸ்கர் முதல்வராக உள்ள பாஜக-வின் ரமன் சிங் தமது சொந்த தொகுதியில் பின்னடைவு.
10:05 தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 66 இடங்களில் முன்னிலை. காங்கிரஸ் 31 இடங்களிலும், பா.ஜ.க 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
10:00 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி முகம் காட்டுவதை அடுத்து தில்லியில் உள்ள ராகுல்காந்தி வீட்டுக்கு வெளியே ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா, மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் படங்களை வைத்து அவற்றின் மீது மலர் தூவி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
9:50 மிசோரத்தில் எம்.என்.எஃப் 22 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
9:35 ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது.
9:15 தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உள்ளது.
9:05 மிசோரத்தில் காங்கிரசை விட மிசோ தேசிய முன்னனி முன்னிலை வகிக்கிறது.
9.00 மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் பாஜக-வை விட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
8.45 முதல் முதலாக வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்களின்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸை விட ஒரு இடத்தில் கூடுதலாக பாஜக முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
8:00 தபால் ஓட்டுகள் எண்ணிக்கை தொடங்கியது.
தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இன்று 43 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
வாக்குப் பதிவுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் கூறியது என்ன?
முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் (Exit Poll) பெரும்பான்மையானவை ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மிக நெருக்கமான போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கின்றன.
தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சிக்கும், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சில கணிப்புகள் கூறுகின்றன.
5 மாநில தேர்தல் கணிப்பு: ராஜஸ்தானில் காங்கிரஸ், மத்தியப்பிரதேசத்தில் இழுபறி
மிசோரம் மாநிலத்தை பொறுத்த வரையில் அங்உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் காங்கிரஸ் 14-18 தொகுதிகளிலும், மிசோ தேசிய முன்னணி 16-20 தொகுதிகளிலும், சோரம் மக்கள் இயக்கம் 3-7 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.