ஆந்திரப் பிரதேச மாநில நாடாளுமன்ற உறுப்பினர் சிவப் பிரசாத், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வேடத்தில் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கேட்டு ஆந்திர அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியானது பாஜகவிலிருந்து விலகி, பாஜகவுக்கு எதிராக அணியைத் திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.. ஆந்திராவுக்குத் தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து கேட்டு ஆந்திராவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகிறார்கள்.
தெலுங்கு திரையுலகில் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் சிவப்பிரசாத். இவர் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிவப்பிரசாத் பல்வேறு வேடங்களில் வந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
இதற்கு முன்பு பள்ளி மாணவர், ஹிட்லர், நாரதர் என்று பல்வேறு வேடங்களில் நாடாளுமன்றம் வந்து சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை இவர் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்துக்கு மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி வேடமணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சிவப்பிரசாத்.
கருணாநிதியைப் போன்று சக்கர நாற்காலியில் வந்த சிவப்பிரசாத் அவரைப் போன்றே கையசைத்து கருணாநிதியை நினைவுப்படுத்திவிட்டுச் சென்றார்.
பல்வேறு விதங்களில் வேடமணிந்து போராட்டங்களை சிவப்பிரசாத் நடத்தி வந்தாலும் அதை மத்திய அரசு கவனிப்பதாகத் தெரியவில்லை.