யேமன் உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள தடையால் கலிஃபோர்னியாவில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தனது மகனை பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் யேமனை சேர்ந்த பெண்ணொருவர்.
இரண்டு வயதாகும் அப்துல்லா ஹஸன் மூளை சார்ந்த நோயுடன் பிறந்தார். தற்போது மோசமான கட்டத்தில் மருத்துவமனையில் உள்ள அப்துல்லா இனி உயிர் பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிர் காக்கும் கருவிகளைப் பொருத்தியிருக்கும் வரைதான் அவர் உயிருடன் இருப்பார். எனவே உயிர்காக்கும் கருவிகளை அகற்றும் முன்பு மகனை ஒரு முறை பார்த்துவிடவேண்டும் என்று அவனது தாய் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள தடையின் காரணமாக தனது மனைவியால் குழந்தையைப் பார்க்க வரமுடியாது என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
அப்துல்லாவும், அவரது தந்தையும் யேமனில் பிறந்திருந்தாலும் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
“குழந்தையின் உயிர் பிரிவதற்கு முன்னர் அவனது கையை கடைசியாக ஒருமுறை பிடிப்பதற்கு எனது மனைவி விரும்புகிறார்” என்று 22 வயதாகும் அலி ஹஸன் சான்பிரான்ஸிஸ்கோ கிரானிக்கில் செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.
தற்போது சிறுவனின் தாய் எகிப்தில் வசிக்கிறார். அங்கு குழந்தையை அழைத்துச் சென்றால் அவன் உயிரிழக்கக்கூடும் என்று எண்ணுவதாக அவர் மேலும் கூறினார்.
தமது நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் தனது மகனை உடனடியாக நேரில் பார்ப்பதற்கு அனுமதிக்கக்கோரி தாய் ஷைமா ஸ்விலே அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயணத்தடை எதற்காக?
அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடனேயே, பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வசிக்கின்ற 7 நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு பயணத்தடையை விதித்து டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்பின் பயணத்தடையை உறுதிசெய்வதற்கு முன்பு பலமுறை அதில் திருத்தங்கள் செய்தது.