அமெரிக்காவில் செல்ல பிராணிகளுக்கு, அதிக மவுசு உண்டு. பெரும்பாலானோர் வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட செல்ல பிராணிகளை வளர்ப்பார்கள்.
இதற்கு அமெரிக்க அதிபர்கள் வரை விதிவிலக்கல்ல. பல அமெரிக்க அதிபர்கள், தங்களின் வெளிநாட்டு பயணித்தின் போதும் தங்களுடன், நாய் உள்ளிட்ட செல்லப் பிராணியை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதே நாட்டில்தான், யாரும் பார்த்திராத இந்தக் கொடுமையான சம்பவமும் நடந்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து செல்ல பிராணிகளைப் பாதுகாக்கும் அமைப்பான `நோஹ் ஆர்க்ஸ்’ அமைப்புக்கு ஒரு ஃபோன் கால் வருகிறது.
அதில் பேசியவர் சொன்ன தகவல், அவர்களை அதிரவைத்தது. தங்களின் அடுத்த வீட்டில் உள்ள ஒருநாய், கட்டப்பட்டநிலையில் உள்ளது. அந்த நாய் பசியால் தனது காலை கடித்து உண்ணுகிறது என அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த அமைப்பினர் அங்கு விரைந்தனர். அவர்கள் அங்குச் சென்றபோது, அந்த நாய், தனது காலை பாதிக்கும் மேல் கடித்து உண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அதற்கு உணவளித்து அங்கிருந்து மீட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் செய்திதொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்குத் தகவல் கிடைத்து, அங்குச் செல்லும்போது, அந்த நாயின் பாதி காலைக் காணவில்லை.
அதன் அருகில் தண்ணியோ, உணவோ இல்லை. அது பரிதாபமான நிலையில் இருந்தது. அதன் பசி அதன் உடம்பில் தெரிந்தது. எத்தனை நாள்களாகச் சாப்பிடாமல் இருந்தது எனச் சரியாக சொல்லத் தெரியவில்லை.
எலும்பு வரை கடித்திருந்ததால், கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை மூலம் தற்போது பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டுள்ளது.
தற்போது அந்த நாய் நல்ல உடல்நலத்துடன் உள்ளது. எங்களது சேவையில் பல மாதிரியான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறோம்.
பசி காரணமாக ஒல்லியாகக் குச்சிபோன்று இருக்கும் நாய்கள் பலவற்றை மீட்டுள்ளோம். ஆனால், இப்படி ஒரு கொடுமையை, சமீப ஆண்டுகளில் பார்க்கவில்லை” என்றார்.
தற்போது அந்த நாய், தனது காயத்தில் இருந்து மீண்டு வருகிறது. அங்கு இருக்கும் மற்ற நாய்களுடன் அது கொஞ்சி விளையாடி வருவதாக, அந்த அமைப்பினர் தங்களது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
லூசிஃபையர் என்ற இந்த நாயின் உரிமையாளர்களான ஜெசிக்கா ஜேம்ஸ் மற்றும் க்ராஃப்ட் ஆகியொர் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.