ராஜஸ்தானில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சிவன் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர் சலே முகம்மது.
இவர் மேற்கு ராஜஸ்தானில் காஜி பக்கிர் என்ற பிரபல முஸ்லிம் மதத் தலைவரின் மகனாவார். இவர் அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெய்சால்மார் மாவட்டம் பொக்ரானுக்கு சென்றார்.
அங்குள்ள சிவன் கோயிலில் இந்து சம்பிரதாயங்களை பின்பற்றி அவர் வழிபாடு செய்தார். இது உள்ளூர் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இதுதொடர்பாக கோயில் அர்ச்சகர் மது சாங்கனி கூறும்போது, “அமைச்சர் முகம்மது இந்து சம்பிரதாயப்படி சுமார் அரை மணி நேரம் சிறப்பு பூஜை செய்தார்.
அப்போது சிவனுக்கு தேனும் பாலும் வழங்கி அபிஷேகமும் செய்தார். அவர் இக்கோயிலுக்கு வருவது இது முதல் முறையல்ல. தேர்தலின்போதும் வந்துள்ளார்” என்றார்.
பின்னர் இது தொடர்பாக அமைச்சர் சலே முகம்மது கூறும்போது, “மத ஒற்றுமைக்கு மேற்கு ராஜஸ்தான் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
உள்ளூர் கடவுளான பாபா ராம்தேவ்ஜி மீது இந்துக்களும் முஸ்லிம்களும் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளார்.
எனது தனிப்பட்ட நம்பிக்கை காரணமாக பொக்ரான் சிவன் கோயிலுக்குச் சென்றேன்” என்றார்.