நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் மண்வெட்டி பிடியினால் தாக்குதல் நடத்தப்பட்டதில், தாக்குதலுக்கு இலக்கான பெண் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
யாழ்.சாவகச்சேரி, கெற்போலி பகுதியில் நேற்று மாலை குறித்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,
தாக்குதலுக்கு இலக்கான பெண்ணும் , தாக்குதல் நடத்திய நபரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் , குறித்த பெண் கர்ப்பம் அடைந்ததையடுத்து அந்த பெண்ணை கைவிட்டு குறித்த நபர் சென்றுள்ளார்.
அதனால் பாதிக்கப்பட்ட குறித்த பெண் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை குறித்த பெண் வீதியால் சென்று கொண்டிருந்த போது , வீதியில் வழிமறித்த காதலன் மண்வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பெண் வீதியில் சுருண்டு விழுந்து கதறியதை அடுத்து வீதியால் சென்றவர்கள் குறித்த பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கான பெண் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.