இந்தியாவின் தமிழகத்திலிருந்து 83 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்.
இம்மாதம் 31 ஆம் திகதி 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இரு விமானங்களில் இவர்கள் நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடு திரும்பவுள்ளவர்களில் 34 ஆண்களும் 49 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இம்மாதம் 31 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.
இவர்களுக்கான இலவச விமான பயணச்சீட்டு வழங்கப்படுவதுடன், போக்குவரத்து கொடுப்பனவு உள்ளிட்ட மானியங்களும் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுத்த காலத்தில் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் சுமார் 65,000 பேர் அகதி முகாம்களிலும் 35,000 பேர் வௌியிடங்களிலும் தங்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.