உடனடியாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் புதிய எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேச தரங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று பயங்கரவாதத்தை ஒழிக்கும்போது மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட நிபுணர் பென் எமர்ஷன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் இராணுவம் அகற்றப்பட வேண்டும். இது நல்லிணக்கத்திற்கும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் உதவியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடருக்கு அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பென் எமர்ஷன் கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதததை ஒழிக்கும்போது மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பில் ஆராய்ந்திருந்தார். அந்தவகையில் தற்போது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு
உடனடியாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் புதிய எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேச தரங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மீளாய்வு அவசியமாகின்றது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வழங்கியுள்ள ஒப்புதல் வாக்குமூலங்கள் தொடர்பில் ஆராயவேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் தண்டனைகள் மீளாய்வு செய்யப்படவேண்டும். தடுத்து வைக்கும்போது சித்திரவதை செய்வது தொடர்பில் ஆராய ஒரு பொறிமுறை அவசியமாகின்றது.
தேசிய மனித உரிமை ஆணைக்குழுவுக்கு தேவையான வளங்கள் அளிக்கப்பட வேண்டும். சித்திரவதைகள் தொடர்பான விசாரணைகளை நடத்த வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். மனித உரிமை பாதுகாப்பாளர்களுக்கு எதிரான கண்காணிப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்களை முடிவுக்குக்கொண்டுவரவேண்டும்.
சிறுபான்மையினருக்கு எதிரான வைராக்கிய கருத்துக்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும். பாதுகாப்புத்துறை முழுமையாக மறுசீலமைக்கப்பட வேண்டும். வடமாகாணத்தில் இராணுவம் அகற்றப்பட வேண்டும். இது நல்லிணக்கத்திற்கும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் உதவியாக அமையும்.
2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.