பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாவை நிர்ணயித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கூட்டுஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட தொழிசங்க பிரதிநிதிகள், முதலாளிமார் சம்மேளன அதிகாரிகளுக்கும் இடையே மேற்படி ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.
செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது எனத் தெரிவித்தும் இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்திற்கு முன்பாக ‘1000 ரூபா இயக்கம் ” இன்று காலை 10 மணி முதல் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது மகஜர் ஒன்றை தொழிற்சங்கங்களிடம் ஒப்படைக்காமல் முதலாளிமார் சம்மேளனத்திடம் ஒப்படைத்தனர்.
இதன்போது 700 ரூபாவுக்காக கூட்டுஒப்பந்தம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே கூட்டுஒப்பந்தம் பிரதமர் முன்னிலையில் கைசாத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 700 ரூபாவும், தேயிலை விலைக்கான கொடுப்பனவு 50 ரூபாவுமாகும்.
அத்தோடு நாளொன்று மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் வழங்கப்படவுள்ளது. ஊழியர் சேமலாபநிதி (ஈ.பி.எப்) மற்றும் பரிமாற்ற வர்த்தக நிதி (ஈ.டி.எப்) 105 ரூபாவாக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி பழைய கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதிலிருந்து, புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படும் தினம் வரையான இடைப்பட்ட காலப்பகுதிக்கான சம்பள நிலுவைப்பணம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு 10 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதோடு, கம்பனிகள் 5 கோடி ரூபாவினை ஒதுக்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதற்படி ஒன்றரை கோடி ரூபா மூன்று மாத நிலுவைப்பணமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.