இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ரத சப்தமியை முன்னிட்டு இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பிரபல ஆங்கில நாளிதழ் சார்பில், பெங்களூருவில் கடந்த 9 ஆம் திகதி பன்னாட்டு உறவுகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதையடுத்து அவர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் ரத சப்தமி விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக, நேற்று மாலை பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து, பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புறப்பட்டு திருமலைக்குச் சென்றார்.
அதன் பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்ஷ, “சுவாமி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது; சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்கு வந்த இடத்தில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை” என தெரிவித்தார்.