இந்தியாவிலேயே முதன்முறையாக, சாதி, மதம் குறிப்பிடாமல் திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிநேகா, வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளார்.
சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற 34 வயதான சிநேகா, சாதி, மதம் அற்றவர் என திருப்பத்தூர் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழை, சமீபத்தில் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி, மதம் குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை, சிநேகா அடைந்துள்ளார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, “சாதியைக் குறிப்பிடாமல் இதுவரை யாருக்கும் சான்றிதழ் வழங்கவில்லை. முதன்முறையாக வழக்கறிஞர் சிநேகாவுக்கு, சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ், வருவாய்த் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசாணையில் இடம் உள்ளது. பல்வேறு அரசு அதிகாரிகளிடம் கருத்து கேட்ட பிறகே அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சிநேகாவின் மூதாதையர்கள் சாதி, மதம் அற்றவர்கள் என குறிப்பிட்டு ஆவணங்களை காட்டியுள்ளதால், அதன் அடிப்படையில் அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு சலுகைகள் அவருக்கு கிடைக்காது என்றாலும், இது போன்ற சான்றிதழ் வழங்க அரசாணையில் இடம் உள்ளது” என்றார்.