புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதென்ற ரெலோ அரசியல்குழுவின் முடிவை, ஏகமனதாக அங்கீகரித்துள்ளது ரெலோவின் பொதுக்குழு. அத்துடன், ஒன்றுமில்லாத அரசியலமைப்பை பொதுமக்களிடம் ஏமாற்றி திணிப்பதாகவும் காரசாரமாக விமர்சித்துள்ளது.
நேற்று ரெலோவின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரியவருகிறது.
தமிழீழ விடுதலை கழகம் (ரெலோ)வின் பொதுக்குழு கூட்டம் நேற்று (16) திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் இடம்பெற்றது.
கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 257 பேரில் சுமார் 80 வரையானவர்களே நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். (30 வெளிநாட்டு பிரதிநிதித்துவம் என்பதும் குறிப்பிடத்தக்கது) கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் என்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோடீஸ்வரன் எம்.பி, கோவிந்தன் கருணாகரம், விந்தன் கனகரட்ணம், பிரசன்னா இந்திரகுமார் உள்ளிட்ட ரெலோவின் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நண்பகல் 12.30 மணியளவில் கூட்டம் ஆரம்பித்தது. அண்மையில் அரசியல்குழு கூட்டத்தில், புதிய அரசியலமைப்புக்கான நிபுணர்குழு அறிக்கையை நிராகரிப்பதென முடிவெடுக்கப்பட்டது.
ஏன் அந்த முடிவை அரசியல்குழு எடுத்தது என்பது தொடர்பாக, கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா விளக்கமளித்தார்.
“தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் எதையும் நிபுணர்குழு அறிக்கை உள்ளடக்கவில்லை. ஏக்கிய ராஜ்ஜிய என்பதும், ஒருமித்த நாடு என்பதும் ஒரே அர்த்தமுடையவை அல்ல.
தமிழில் ஒருமித்த நாடு என குறிப்பிட்டது ஏமாற்றும் நோக்கத்துடன். ஆனால் அது ஒற்றையாட்சியையே குறிக்கிறது.
ஒன்றுமில்லாத அரசியலமைப்பில் தமக்கு நம்பிக்கையுள்ளதாக தமிழரக்கட்சி கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி திணிக்கிறது“ என கறாரான குற்றச்சாட்டுக்களை என்.சிறிக்காந்தா முன்வைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பான 3.30 மணி நேரம் வரை நீண்ட விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. பின்னர், அரசியல்குழு எடுத்த- நிபுணர்குழுவின் முடிவை நிராகரிப்பது- முடிவை பொதுக்குழு ஏகமனதாக அங்கீகரித்தது.
அடுத்ததாக, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து ஆராயப்பட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள இந்த சட்டமூலமும், சிறுபான்மையினங்களிற்கு எதிரானது, அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்ற பங்காளிக்கட்சிகளையும் இணைத்து, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மீண்டும் காலஅவகாசம் வழங்காமல், சர்வதேச தலையீட்டை நேரடியாக கோர வேண்டுமென்ற முடிவு எட்டப்பட்டது.
இலங்கைக்கு காலஅவகாசம் வழங்குவதென்ற ஐ.நா மனதஉரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, ரெலோ அவசர கடிதமொன்றை அனுப்பவுள்ளது.
கல்முனை உப தமிழ் பிரதேசசபையை, பிரதேசசபையாக தரமுயர்த்த அரசிடம் வலியுறுத்துவதென்றும் முடிவானது.
கட்சியின் இளைஞர் அணியை போல, மகளிர் அணியையும் உருவாக்க யாப்பில் திருத்தம் செய்வதென்றும் முடிவானது.