“பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படையினர் இன்று அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்தனர்.”,
புது தில்லி: பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படையினர் இன்று அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்தனர்.
இந்த தாக்குதலில் பனிரெண்டு மிர்ஜ் ரக விமானங்கள் சுமார் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை சுமந்து சென்று முகாம்களைத் தாக்கி அழித்துள்ளது.
இதில் 200 – 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமை இந்திய உளவுத் துறை கண்டறிந்து, அது தொடர்பான தகவல்களை ராணுவத்துக்கு அளித்தது.
பயங்கரவாத பயிற்சி முகாம் தொடர்பாக உளவுத் துறை எடுத்தனுப்பிய புகைப்படங்கள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முகாமைத்தான் இன்று இந்திய விமானப்படை தாக்கி அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் குறிப்பிடத்தக்க விஷயமாக, பயங்கரவாதிகள் நடந்து செல்லும் பகுதியில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் கொடியின் வரைபடங்கள் தரையில் வரையப்பட்டு, அதன் மீது நடக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததையும் உளவுத் துறை வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
வெடிபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சியும், டெட்டனேட்டர்கள் வைத்திருந்த அறையையும் இந்த புகைப்படத்தில் காண முடிகிறது.
அதோடு, இந் தாக்குதலின் போது குறிவைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது புலனாய்வுத் துறை.
இந்த முகாமில் 200 ஏகே ரக துப்பாக்கியும், கணக்கில் அடங்காத கையெறி வெடிகுண்டுகளும், டெட்டனேட்டர்களும், வெடிபொருட்களும் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.