ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் குட்டால் என்ற 104 வயது நபர் இன்று கருணைக் கொலை செய்யப்பட உள்ளார்.
எந்த நோய் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் இந்த நபர், தன்னுடைய மரணம் தன் விருப்பப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கருணைக் கொலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
இன்னும் சில மணி நேரத்தில் இவர் கருணைக் கொலை செய்யப்பட இருக்கிறார்.
டேவிட் குட்டால் 1914ல் லண்டனில் பிறந்தார். அதன்பின் 1948ல் இவர் ஆஸ்திரேலியாவிற்கு குடியேறி வாழ்ந்து வந்தார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.
பல துறைகளில் மிகவும் சிறந்து விளங்கிய இவர், தன்னுடைய வாழ்நாள் முழுக்க ஆசிரியராகவும் , ஆராய்ச்சியாளராகவும் இருந்துள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கூட ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில்தான் இவர் தன்னை கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இவர் கடந்த இரண்டு வருடமாகவே தற்கொலை செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். ஆனால் தன்னுடைய மரணம் அழகாக இருக்க வேண்டும் என்பதால், கருணை கொலை மூலம் இறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் கருணைக் கொலைக்கு அனுமதி கிடையாது என்பதால் அவர் தன்னுடைய மரண ஆசையை இரண்டு வருடமாக அடக்கி வைத்து இருந்துள்ளார்.
சுவிட்சர்லாந்து செல்கிறார்
ஆனாலும் சாக வேண்டும் என்ற ஆசை அவரை இடைவிடாது துரத்தி உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்து குடியுரிமையும் வாங்கியுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் கருணைக்கொலை என்பது தவறானது கிடையாது.
அங்கு அரசின் அனுமதியுடன் அழகாக மரணம் அடையலாம் என்று ஆசைப்பட்டு, சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
ஏன் சாக ஆசை
இவருக்கு இப்போது 104 வயதாகிறது. இவர் மரணம் அடைய ஆசைப்படுவதற்கு பெரிய காரணம் எதுவும் இல்லை. இவர் பெரிய நோய் பாதிப்பு காரணமாக கஷ்டம் எல்லாம் படவில்லை. மிகவும் ஆரோக்கியமாகவே இருக்கிறார். வயது மூப்பு காரணமாக வரும் சில உடல் மாற்றங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
ஆனால் சாக வேண்டிய நாளை தானே தீர்மானிக்க வேண்டும் என்ற ஆசைக்காக அவர் இப்படி கருணைக்கொலைக்கு விண்ணப்பித்துள்ளார். தன்னுடைய மரணம் தன்னுடைய கையில் இருக்க வேண்டும் என்று இவர் ஆசைப்படுகிறார்.
முக்கியமாக இவர் எப்படி மரணம் அடைய வேண்டும் என்று கூறியுள்ளார். இன்று சாக போகும் இவர் பீத்தோவன் இசையை கேட்டுக் கொண்டு சாக போகிறார். இவருக்கு ஊசி போடும் போது, அறையில் பீத்தோவனின் 9வது சிம்பொனி இசை கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இன்னும் சில மணி நேரத்தில் இவர் இந்த உலகை விட்டு, அவரது ஆசைப்படியே வெளியேற இருக்கிறார்.