பெரியகுளம்:ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் வாட்ச்மேனை கொலை செய்துவிட்டு, ரூ.2 ஆயிரம் கோடியை கொள்ளையடிக்கப்பட்டதாக பெரியகுளம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோரை ஆதரித்து, பெரியகுளம் தேரடி திடலில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தேனி மக்களவை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஈரோட்டு பூகம்பமாக விளங்கிய தந்தை பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரன்.
அறிஞர் அண்ணாவின் பாசத்தம்பியான கலைஞரின் உற்ற தோழன் ஈவிகே சம்பத்தின் மகன். தைரியமான பேச்சாளர். மனதில் பட்டதை பேசுவார்.
உங்களுக்காக எதையும் போராடி, வாதாடி பெறக்கூடிய ஆற்றல் படைத்தவர். மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக அமர்ந்ததும், இளங்கோவன் தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகளை பெற்றுத்தருவார்.
ஆனால், அதிமுக வேட்பாளருக்கு என்ன தகுதி இருக்கிறது? இன்னாருடைய பேரன், மகன் என்பதற்காக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தொகுதி கிடைக்கவில்லை, அவருடைய தைரியம், போராட்டத்திற்காகத்தான் கிடைத்துள்ளது.
எதிரணியில் ஓபிஎஸ் மகன் என்பதை தவிர, அதிமுக வேட்பாளருக்கு வேறு என்ன தகுதி உள்ளது? ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரது மகனுக்கு சீட் கிடைத்திருக்காது.
போன தேர்தலில் ஜெயலலிதா காலில் விழுந்து மன்றாடி எனக்கு சீட் தாருங்கள் என்று கேட்டவர் ஓபிஎஸ்.எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமர்ந்ததால், ஆட்சியின் மீது நம்பிக்கையில்லை என்று ஓபிஎஸ் உடன் 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தார்கள்.
அப்படிப்பட்டவர் தான் தற்போது துணை முதல்வராக உள்ளார். தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்று சசிகலா காலில் விழுந்து, மண்புழு போல் தவழ்ந்து வந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.
உடனடியாக ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். ஆவியுடன் பேசினார். ‘ஜெயலலிதா மர்மமாக மரணம் அடைந்துள்ளார். முறையான நீதி விசாரணை வேண்டும்’ என்றார்.
இதேபோல சட்ட அமைச்சர் சண்முகமும் தெரிவித்தார்.ஜெயலலிதாவை வைத்துத்தான் தினகரன் குடும்பத்தினர் சம்பாதித்தனர்.
ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் பல துறைகள் முலமாக ஓபிஎஸ், ஓ.ராஜா, ரவீந்திரநாத்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஊழல் செய்து பல கோடி சுருட்டினர்.
கரூர் அன்புநாதன் வீட்டில் பல கோடி ருபாய் மற்றும் தங்கக்கட்டிகள் எடுத்தனர், அதில் ஓபிஎஸ்சிற்கும் தொடர்பு உண்டு என்று சொன்னார்கள்.
அது என்னவாயிற்று? சேகர்ரெட்டி வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்தது. அதில் ஓபிஎஸ் குறித்து சேகர்ரெட்டி தனது டைரியில் கூறியிருந்தார்.
ஓபிஎஸ், நாகராஜ் என்பவருடன் நெடுஞ்சாலைத்துறை கான்ட்ராக்டர் செய்யாத்துரை மூலம் கூட்டணி சேர்ந்து பல கோடி ஊழல் செய்து சம்பாதித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் போடி பகுதியில் உள்ள தோப்புகள், பெரியகுளம் சோத்துப்பாறை பகுதியில் உள்ள ஏராளமான நிலங்கள், தேனியில் ஏராளமான சொத்துக்கள், போடி மலைப்பகுதிகளில் உள்ள ஏலக்காய் தோட்டங்கள், பினாமிகளின் பெயர்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் கிரானைட், ராக்கர் ஆர்ச் கான்ட்ராக்ட், அன்னை இன்பா டெவலப்பர் சுப்பிரமணியம், அசோக்குமார், கலைச்செல்வி, இவர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பினாமி பெயர்களில் பல கோடி ரூபாயை ஊழல் செய்து ஓபிஎஸ் சம்பாதித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயலலிதா, ஓபிஎஸ்சை அழைத்து மிரட்டி பல கோடிகளை பறித்தார். இதனால் நெல்லை கான்ட்ராக்டர் தலைமறைவானார்.
இந்த பணம் அனைத்தையும் ஜெயலலிதா பிடுங்கி கொண்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்து அதற்கான பென்டிரைவ், கம்ப்யூட்டர் அனைத்தையும் கொடநாடு கொண்டு சென்று வைத்து விட்டார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின், கொடநாடு வாட்ச்மேன் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த 2 ஆயிரம் கோடி பணம் மற்றும் ரெக்கார்டுகளை கைப்பற்ற ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் திட்டமிட்டனர்.
வாட்ச்மேன் கொலையைத் தொடந்து 5 கொலைகள் நடந்தது. 5 பேரை கொலை செய்து விட்டு, சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்தனர். திருடன் கூட சொந்த வீட்டில் கொள்ளையடிக்க மாட்டான். இதுபோன்று கொலை, கொள்ளையடித்தவர்கள் தான் தற்போது தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள்.
மதுரையில் காங்கிரஸ், திமுக கூட்டணி குறித்து ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த கூட்டணி என்கிறார்.
அதிமுக, பாஜ கூட்டணியில் எந்த உரிமையை மீட்டுள்ளீர்கள்? தமிழகத்தை மோடி, அமித்ஷாவிடம் அடகு வைத்துள்ளீர்கள்.
நிதித்துறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ், பிப். 8ம் தேதி சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை படித்தார். அதில், ‘தமிழகத்தின் உரிமைகளை வாங்க முடியவில்லை. கஜா புயல் நிதி முழுமையாக வரவில்லை. ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்கு வரவில்லை’ என்றார்.
அதிமுகவின் கொள்கை பரப்புச்செயலாளராக உள்ள தம்பிதுரை, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் தராமல் இழுத்தடிப்பதாக கூறியுள்ளார்.
மோடியை காவலாளி என்கிறார்கள். அவர் விஜய்மல்லையா, எடப்பாடி, விஜயபாஸ்கர், பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவலாளியாக உள்ளார்.
கொடநாடு குற்றவாளிகளுக்கு பாதுகாவலராக மோடி உள்ளார். மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது.
தேனி மக்களவை மற்றும் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி தேனியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கைரேகை விசயத்தில் ஜெயலலிதாவுக்கே பஞ்சமாபாதகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம். இபிஎஸ், ஓபிஎஸ் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் இல்லை.
தமிழ்நாட்டின் இரட்டை அவமானச் சின்னங்கள்.கள்ளக்குறிச்சியில் என்னை பற்றி ஓபிஎஸ் பேசியிருக்கிறார். ஸ்டாலின் டீக்கடையில் டீதான் குடிப்பார். நான் டீக்கடையே நடத்தியவன் என்கிறார்.
டீக்கடை நடத்துவது ஒன்றும் கேவலமானது இல்லை. அது ஒரு நல்ல தொழில். ஆனால் தமிழ்நாட்டில் டீக்கடை நடத்தியவர்கள் எல்லாருமா பினாமி பெயரில் கோடானு கோடி பணம் கொள்ளையடித்து சேர்த்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் இருபெரும் கான்ட்ராக்ட் நிறுவனங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பலகோடி கான்ட்ராக்ட்களை கொடுத்து ஓபிஎஸ் தரப்பினர் கொள்ளையடித்தது தெரிந்து ஜெயலலிதா, ஓபிஎஸ்சை போயஸ் தோட்ட வீட்டிற்கு அழைத்து கொள்ளையடித்த சொத்தில் பாதியை எழுதி வாங்கினாரே? அப்போது ஒருவாரகாலம் இவர் எங்கேயிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்ததை நாடே அறியுமே. இவருக்கு ஆதரவானவர்களை ஜெயலலிதா வீட்டில் சிறைப்படுத்தியதும் தெரியுமே.
பொள்ளாச்சியில் கடந்த 7 வருடங்களாக 200 பெண்களை பாலியல் கொடுமை செய்து, கொலை செய்த சம்பவங்களால் நாடே அவமானத்திற்குள்ளாகி இருக்கிறது.
இங்கு உளவுத்துறை இருக்கிறதா, காவல்துறை செயல்படுகிறதா, ஆட்சி இருந்தால்தானே உளவுத்துறையும், காவல்துறையும் இருக்கும்.
பொள்ளாச்சி சம்பவத்தை திசை திருப்ப திமுக கட்சியை சேர்ந்தவர் ஒருவர் மீது மத்திய அரசின் உதவியுடன் சிபிஐ மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது எடப்பாடி அரசு.
நாங்கள் பொடாவை, தடாவை, மிசாவை சந்தித்தவர்கள். ஏன் ஜெயலலிதாவையே சந்தித்தவர்கள். இன்றைக்கு இந்த பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவங்களே சாட்சியாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் இளங்கோவன் பேச்சு
தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ‘‘அதிமுக கூட்டணி ஒரு சவ ஊர்வலம் செல்லும் கூட்டணியாக உள்ளது.
அவர்கள் ஒரு பாடையை கட்டி பாஜவை பிணமாக வைத்துள்ளனர். அந்த பாடையை தூக்குவதற்கு அதிமுகவுடன் மற்ற கட்சிகள் சேர்ந்துள்ளன. சமூக புரட்சி வெடித்த ஈரோட்டிலிருந்து வந்தவன் நான்.
திருவில்லிபுத்தூரிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவன் இல்லை. பஞ்சம் பிழைக்க வந்து தேனி மாவட்டத்தையே விலைக்கு வாங்கி சுருட்டியவனும் இல்லை.
தமிழகத்தில் உள்ள குழந்தைகள் சுபிட்சமாக வாழ மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும்.
எனவே, எதிரணிக்கு டெபாசிட் கூட வழங்கக்கூடாது. இது சாதாரண தேர்தல் கிடையாது. ரூ.100க்கும், ரூ.200க்கும், லட்சத்திற்கும் வாக்களிக்க வேண்டாம்.
பெண்களின் முந்தானை முடிச்சில் இருந்து, களவாடிய தொகையை உங்களுக்கு அளிக்கின்றனர். இளங்கோவன் ஒன்றும் தேனியில் கட்டப்பஞ்சாயத்து செய்பவன் அல்ல.
அப்படி செய்து இன்னொருவருடைய பணத்தை பறிப்பவனும் அல்ல. எனவே இந்த தேர்தலில் எதிரணிக்கு மரண அடி கொடுங்கள்’’ என்றார்.