கடந்த உயிர்த்த ஞாயிறன்று, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலரது உயிர்கள் பரிதாபமாக காவு கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆறு நாட்களின் பின்னர், ஓய்ந்திருந்த ஆலய மணி ஒலிக்கப்பட்டு, ஆலயத்தின் முன்றலில் அந்தோனியார் திருச்சொரூபத்தின் ஆசீர்வாதத்துடன் வழிபாடுகள் இடம்பெற்றன.
மேலும், அருட்தந்தை ஜுட் ராஜ் அவர்களின் தலைமையில் இன்றைய வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் பலநூறு பக்தர்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க, பக்திபரவசத்தோடு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இன்று காலை கொழும்பு பேராயர் இல்லத்தில், உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவத்தினால் உயிரிழந்த அனைவரது ஆத்மா சாந்திக்காகவும், காயமடைந்தவர்கள் முழுமையாகக் குணமடையவும் வேண்டி விசேட வழிபாடுகள் இடம்பெற்றதோடு, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடதக்கது.